இளம் தாய்மார்களின் கவனத்திற்கு…

Spread the love

தாய்மைக்கு பெருமை சேர்ப்பது தாய்ப்பால். ஏனென்றால் இந்த உலகில் தாய்ப்பாலுக்கு நிகரான ஒன்று எதுவுமில்லை. ஆண்டுதோறும் ஆகஸ்ட் ஒன்று முதல் ஒருவார காலம் உலக தாய்ப்பால் தினமாக கொண்டாடப்படுகிறது. 10 மாதங்கள் தாயின் கருவறையில் இருந்து வெளிவரும் குழந்தை, முதலில் சுவைப்பது அன்னையின் தாய்ப்பால். இதுதான் குழந்தையின் முதல் உணவு. குழந்தைக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும், புரதமும் அடங்கியுள்ளது. அனைத்து விதமான சத்துகளும் சரியான விகிதத்தில் இயற்கையாகவே அமைந்துள்ளது.

உலகம் முழுவதும் ஐக்கிய நாடு குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு, இந்த தினத்தை அறிமுகப்படுத்தியது.

இந்தியா உள்பட 170 நாடுகளில் 1991 முதல் அமலில் உள்ளது. ஆறு மாதம் வரையுள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பால் என்பது மிக முக்கியமான ஒன்றாகும். தாய்ப்பாலை தவிர வேற எந்த செயற்கை உணவுகள் கொடுப்பதும் தவறாகும். ஒரு தாய் குழந்தையை பிரசவித்தவுடன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். மேலும் அறுவை சிகிச்சை மூலம் பிறக்கும் குழந்தையாக இருந்தால், குழந்தை பிறந்து 2 மணி நேரத்தில் தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவது, குழந்தைக்கு மட்டுமல்லாமல்; தாயின் உடல்நலனுக்கும் சிறந்தது.

இந்தியாவில் தாய்ப்பால் கொடுக்கும் பழக்கம் காலம் காலமாக நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும் தற்போதைய காலமாற்றத்தில் தாய்ப்பால் வழங்க வேண்டும் என்பதை, தாய்மார்களுக்கு வலியுறுத்த வேண்டியுள்ளது. தாமதமான திருமணங்களும், பெண்கள் வேலைக்கு செல்வது அதிகரித்திருப்பதும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் தருவதில் பிரச்னையை ஏற்படுத்துகிறது என்கின்றனர் மருத்துவர்கள். முறையாக தாய்ப்பால் வழங்குவதன் மூலம் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மரணங்களை வெகுவாக குறைக்கலாம்.

தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், நோய்வாய்ப்படும் வாய்ப்பு அதிகம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். தாய்ப்பால் வழங்குவதன் மூலம், ஒவ்வாமை, காதுகளில் ஏற்படும் தொற்று போன்றவற்றிலிருந்து குழந்தைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கிறது. குழந்தைகளின் பற்கள், நாக்கு உட்பட பேச பயன்படும் உறுப்புகள் வேகமாக வளர்ச்சியடைய தாய்ப்பால் தருவது மிக அவசியம்.

தாய்ப்பால் கொடுப்பதன் மூலம், தாய்க்கு ஏற்படும் கருப்பை புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவற்றை தடுக்கலாம். அலர்ஜி போன்றவற்றை தடுப்பதற்கான தடுப்பு மருந்துகள் கூடுதலாக தாய்ப்பாலில் உள்ளது. பிரசவ காலம் முன்பாக பிறந்த குழந்தைகளுக்கு மிக முக்கிய மருந்தாக தாய்ப்பால் அறியப்படுகிறது.

ராஜகோபாலன்


Spread the love
error: Content is protected !!