வெயில் கால அழகு பராமரிப்பு

Spread the love

வெயில் காலத்தில் முகத்தில் பருக்கள் அதிகமாகும். முகப்பருக்கள் வராமல் தடுக்க வழி உண்டு. ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி இறக்கி வைக்க வேண்டும். பிறகு அதில் ஒரு கைப்பிடி துளசியை போட்டு மூடி வைக்கவும். நன்றாக ஆறிய பின்பு அந்த நீரை வடிகட்டி முகம் கழுவ பயன்படுத்துங்கள். தண்ணீரை சூடாக்கி அதில் புதினா, துளசி, வேப்பிலை மூன்றையும் தலா ஒரு கைப்பிடி வீதம் போட்டு ஆற வைத்து வடிகட்டி முகம் கழுவினாலும் முகப்பரு வராது. இதை ஃப்ரிட்ஜில் வைத்து 3 நாள் வரை பயன்படுத்தலாம். அந்த நீரில் 4 டீஸ்பூன் எடுத்து, அதில் 3 டீஸ்பூன் முல்தானிமிட்டி கலந்து பருக்கும் இடங்களில் பூச வேண்டும். 10 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். பரு மறைந்துவிடும்.

சந்தனமும் சரும அழகை மிளிரச் செய்யும். ஒரு லிட்டர் தண்ணீரை சூடாக்கி, அதில் பிங்க் கலர் ரோஜா இதழ்களை ஒரு கைப்பிடி அளவு போட்டு மூடி வைக்கவும். ஒரு மணி நேரம் கழித்து அந்த நீரை வடிகட்டவும். பின்னர் அந்த நீரை பயன்படுத்தி சந்தன கட்டையை கல்லில் தேய்த்து உரசி, அரைக்கவும். அதை, கருமை மற்றும் வியர்க்குரு இருக்கும் இடத்தில் பூசவும். அரை மணி நேரத்துக்கு பிறகு குளிர்ந்த நீரால் கழுவினால் கருமை, வியர்க்குரு மறையும்.

இளநீர் மற்றும் தர்பூசணி சாறை சம அளவு எடுத்து முகத்தில் தேய்க்கவும். 10 நிமிடம் கழித்து மீண்டும் அதேபோல் செய்யவும். படுத்துக் கொண்டு பஞ்சில் நனைத்து இதை தேய்ப்பது நல்லது. இந்த பஞ்சை கண்களை மூடிக் கொண்டு கண்களின் மேல் பகுதியிலும் வைக்கவும். கட்டி வராது என்பதோடு கண்களுக்கு புத்துணர்வும் கிடைக்கும். முகமும் பொலிவாகும்.

பருவும் வராது.. கருத்தும் போகாது..

முகத்தில் பரு வராமலும், வெயிலில் சென்றால் முகம் கருத்துப் போகாமலும் பாதுகாக்க வேண்டுமா? வேப்பிலை, புதினா, சிறிது மருதாணி மற்றும் குப்பைமேனி இலைகளை காயவைத்து, தூளாக்கி வைத்துக் கொள்ளவும். இதில் சிறிது எடுத்து, பாலில் குழைத்து, முகத்தில் பூசி, 20 நிமிடம் ஊற வைத்து குளித்தால், முகத்தில் பருவும் வராது. முகம் கருத்தும் போகாது.

இரவு படுக்கும் முன், புதினா சாறு இரண்டு தேக்கரண்டி, அரை மூடி எலுமிச்சம்பழ சாறு ஆகியவற்றுடன், பயத்தம் பருப்பு மாவை கலந்து, முகத்தில் தடவிக் கொண்டு பத்து நிமிடம் ஊறிய பிறகு, ஐஸ் ஒத்தடம் கொடுத்தால் முகம் தூய்மையாவதுடன் பளபளப்பாகும். பருவினால் தழும்பு ஏற்பட்டிருந்தால் அதுவும் நீங்கும்.

முடி அழகுக்கு..

தலைமுடியில் எண்ணெய்ப் பசை அதிகமாக இருக்கிறதா? கவலைப்படாதீர்கள்.. கோழி முட்டையில் கொஞ்சம் சர்க்கரையை கலந்து தலையில் லேசாக தடவிக்கொண்டு, பிறகு தலை குளியுங்கள்.  இதனால் எண்ணெய் பசை நீங்குவதோடு முடியும் அழகு பெறும்.

டீ போட்டு குடித்தபின் மிஞ்சும் தேயிலைத் தூளில் எலுமிச்சை சாறை பிழிந்து, தலையில் தேய்த்து குளித்து வந்தால், முடி பளபளப்பாகும்.

முடி அகற்ற எளிய வழி

முகத்தில் உள்ள முடிகளை அகற்ற, முட்டையின் வெள்ளை கரு, சர்க்கரை, சோளமாவு அனைத்தையும் ஒன்றாக கலந்து, பசைபோல் ஆனதும் முகத்தில் தடவவும். காய்ந்தவுடன் மெதுவாக பிய்த்து எடுத்தால், முட்டையுடன் முடியும் எளிதில் வரும்.

எடையை குறைக்க..

பருமனாக இருப்பவர்கள், எடையை குறைக்க ஜிம்முக்கு போய் காசு செலவழிக்க வேண்டாம். தினமும் காலையில் ஒரு டம்ளர் மிதமான வெந்நீரில் ஒரு மூடி எலுமிச்சை சாறை பிழிந்து, அதனுடன் அரை ஸ்பூன் தேன் கலந்து, சாப்பிட்டு வரை எடை குறையும்.

கருப்பு நிறம் மாற

கை, கால் முட்டிகளில் கருப்பு நிறம் அதிகமாக இருந்தால், தொடர்ந்து அந்த இடத்தில் எலுமிச்சம்பழ சாற்றை தேய்த்து சோப்பு போட்டு கழுவி வந்தால் நாளடைவில் கருப்பு நிறம் மாறும். தோல் வறண்டும், சுருக்கத்துடனும் இருந்தால், ஆலிவ் ஆயிலைப் பூசி, சிறிது நேரம் ஊற வைத்து, சோப்பு போட்டு குளிப்பது நல்லது.


Spread the love