ஆயுர்வேத மருந்துகளில் அதிகம் பயன்படும் மூலிகைகளில் வாயுவிளங்கம் ஒன்று. சரகர், சுஸ்ருதர், வாகபட்டர் மூவரும் முறையே சரகஸம்ஹிதை, சுஸ்ருத ஸம்ஹிதை, அஷ்டாங்க ஹ்ருதயம், மூன்றிலும் வாயுவிளங்கத்தைப் பற்றி விவரித்துள்ளனர். ஆயுர்வேதத்தில் பல வியாதிகளுக்கு வாயுவிளங்கம் மருந்தாக பயன்படுகிறது.
கொடியாக படரும் வாயுவிளங்கம், ஈரமுள்ள பிரதேசங்களில் விளையும். வேர்கள் பழுப்பு நிறத்துடன் 7 லிருந்து 20 செ.மீ. சுற்றளவு இருக்கும். நிலத்தில் ஆழப்பதியும். கொடித்தண்டு 60 லிருந்து 100 செ.மீ. சுற்றளவு இருக்கும். பாலுண்ணி போன்ற மருக்கள் தண்டில் காணப்படும். இலைகள் தோல் போல், கோள அளவில் ஈட்டி போல் நுனியில் குறுகி இருக்கும். வெண்மை கலந்த பச்சை அல்லது மஞ்சள் நிறத்துடன் பூக்கள், 3மி.மி. விட்ட அளவுடன், நிறைந்து காணப்படும். பழங்கள் நல்ல மணத்துடன் சுவையாக இருக்கும், விதைகள், கருப்பு, பழுப்பு நிறத்துடன், வெள்ளை, பழுப்பு நிற புள்ளிகளுடன் காணப்படும்.
தாவரவியல் பெயர் – Embelia ribes
குடும்பம் – Myrsinaceae
இதர மொழிப் பெயர்கள் – சமஸ்கிருதம் – விடங்கா, கிருமிக்னா, பூதக்னா.
ஹிந்தி – பாய்பிதங், பாபிரங்
தமிழில் இதர பெயர்கள் – வாய்விளங்கம், வர்னணை.
வாயுவிளங்கம் இந்தியாவில் வடகிழக்கு பகுதிகளை சிக்கிம், டார்ஜிலிங், அஸ்ஸாம், மேகாலயா மத்திய பிரதேசம், இவற்றில் விளைகிறது. ஆனால் வடமேற்கு பகுதிகளான ஜம்மு, காஷ்மீர், ஹிமாசல பிரதேசம், உத்திரப்பிரதேசங்களில் காணப்படுவதில்லை. தென்னிந்தியாவில் ஆந்திர பிரதேசம், தமிழ்நாட்டில், கோவை, மதுரை, நீலகிரி, சேலம் – ஏற்காடு, திருநெல்வேலி இடங்களிலும், கர்நாடகா, மேற்கு தொடர்ச்சி மலைச்சாரல்களிலும் (மஹாராஷ்ட்ராவிலும்) விளைகிறது.
பயன்படும் பாகங்கள் – பழம், விதை
பயன்கள்
· வாயு விளங்கம், வட்டப்புழு போன்று வயிற்றுப் பூச்சிகளை ஒழிக்கும். விதையை பொடி செய்து, 4-16 கிராம் எடை அளவு தேனில் குழைத்து ஒரு நாளைக்கு 2-3 முறை கொடுத்தால், அடுத்த நாள் விளக்கெண்ணை (ஆமணக்கு எண்ணெய்) கொடுக்க வயிற்றுப்புழுக்கள் இறந்து வெளிப்படும். பொடியில் 2-4 கிராம் எடுத்து பாலில் கலக்கி சிறுவர்களுக்கு கொடுத்தால், அஜீரணம், வயிற்றுவலி நிற்கும்.
· சுஸ்ருதர், வாயு விளங்கத்தை இருமலுக்கு மருந்தாகவும், வயிற்றுப்பூச்சி, புழுக்களை அகற்றவும் சிபாரிசு செய்கிறார். தவிர சுஸ்ருதர் “விதாங்க ரசாயனம்” என்ற ஆயுளை நீடிக்கும் சிகிச்சை முறையை குறிப்பிடுகிறார். அதில் வாயுவிளங்கம் முக்கிய பங்கு வகிக்கிறது. வாயுவிளங்கம் வயிற்றுப்பூச்சிகளை திறம்பட அழிக்கிறது என்பது பரிசோதனைகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. தவிர கல்லீரல் கோளாறுகளுக்கும் மருந்தாகிறது.
· வாகபட்டரும் வாயுவிளங்கத்தை பல நோய்களின் மருந்தாகவும், குறிப்பாக குஷ்டரோகம், காமாலை, சுவாசக்கோளாறுகள் போன்ற நோய்களுக்கு மருந்தாகவும் கூறுகிறார்.
· தோல் வியாதிகளுக்கு மருந்தாகவும் விளங்கம் உபயோகப்படுத்தப்படுகிறது. விதைப் பொடியை படர் தாமரை, கொப்பளங்கள் மீது தூவினால் குணம் தெரியும். சோரியாஸிஸ், எக்சிமா, போன்றவற்றுக்கும் நல்ல மருந்தாகும்.
· விதையை அரைத்து, வெண்ணையில் குழப்பி, தலைக்கு பற்றுபோட்டால், தலைவலி நீங்கும்.
· பழங்களை அரைத்து சாப்பிட அஜீரணம் நீக்கும். சிறுவர்களுக்கு பழங்களை பாலில் போட்டு கொடுக்க, ‘வாய்வு’ நீங்கும்.
· வேர்களின் கஷாயம், ‘ஃப்ளூ’ போன்ற ஜீரங்களுக்கு, தினம் 2 வேளை குடிக்கலாம். ஜீரம் குறையும்.
· வாயுவிளங்கம் தற்போது முக்கியத்துவம் அமைந்துள்ளது. காரணம் குடும்பக்கட்டுப்பாட்டுக்கு மருந்தாக பயன்படக்கூடும் என்று, எலிகளை வைத்து நடத்திய சோதனைகளில் தெரியவந்துள்ளது. இதிலிருந்து எடுக்கப்பட்ட ‘எம்பலின்’ (Embelin) என்ற பொருள் கருத்தரிப்பதை தடுக்கிறது.
வாயுவிளங்கம் மிளகு போல் இருப்பதால் மிளகில் கலப்படம்
செய்யப்படுகிறது. இதனால் ‘அசல்’ வாயுவிளங்கம் கிடைப்பது கடினம். தமிழ்நாடு, டெல்லி, உத்திரபிரதேசங்களில் வாங்கிய வாயுவிளங்கத்தை சோதித்து பார்த்ததில், அவை வாயுவிளங்கமே அல்ல, அவை ‘எம்லியா
‘ரோபஸ்டர்’ (Embelia robusta) என்று தெரியவந்தது.
வாழ்வளிக்கும் வாயு விளங்கம்
பல வியாதிகளை குணப்படுத்தும் மூலிகையாக தொன்று தொட்டு பயனளித்து வரும் ‘வாயு விளங்களம்’, ஆயுர்வேத மேதைகளான சரகர், சுச்ருதர் மற்றும் வாகபட்டர் இவர்களின் மருத்துவ நூல்களில் வெகுவாக விவரிக்கபட பெருமை பெற்றதாகும்.
தாவர விவரங்கள்:- கொடி வகையை சேர்ந்த புதர்செடி. இலைகள் 6 – 14 செ.மீ. நீளமும் 2 – 4 செ.மீ. அகலமும் கொண்டவை. மலர்கள் கொத்து கொத்தாக மஞ்சள் நிறத்துடன் பூக்கும். முழுமையாக பூத்த மலர்கள் 3 மி.மி. விட்டம் அளவு இருக்கும். நன்றாக வளர்ந்த சொடியின். தண்டுகள் மனிதனின் தொடையளவு பருமன் இருக்கும். ஸ்ரீலங்காவில் 45 – 72 செ.மி. தடிமன் கொண்ட கொடிகள் காணப்படகின்றன. மேகாலாயாவில் 22 – 31 செ.மி. பருமன் கொண்ட கொடிகள் இருக்கின்றன. வேர்கள் பழுப்பு நிறத்துடன் 7 – 20 செ.மி. சுற்றளவுடன், பூமியில் ஆழ்ந்து இருக்கும். பழங்கள் 2.4 – 4 மி.மி. அளவு இருக்கும்.
இதில் இன்னொரு வகையும் உண்டு. காடுகளில் வளரும் செடி வகையை சேர்ந்தது. உயரமாக வளரக்கூடியது. மகிழ மர இலைகளை போன்ற இலைகளுடன் காணப்படும். இலை இந்த வகை Embelia tsjeriam – cottam எனப்படும். சிவந்த நிற மலர்கள் கொத்து கொத்தாக காணப்படும்.
வாயு விளங்கம் கற்கள் நிறைந்த ஈரப்பிரதேசங்கள், மலைச் சரிவிலுள்ள காடுகள் இவற்றில் மிகுதியாக காணப்படும். இந்தியாவின் வடமேற்கு பிரதேசங்களில் (ஜம்மு – காஷ்மீர், இமாச்சல பிரதேசம், உத்திரப்பிரதேசம்) வாயு விளங்கம் காணப்படுவதில்லை. கிழக்குப் பகுதிகளில் – நேபாளம், இக்கிம், அஸ்ஸாம், மேகாலாயா, மத்திய பிரதேசம், ஆந்திரபிரதேசம், தமிழ் நாடு (பழனிமலை, ஆனை மலை, கூனூர், ஏற்காடு, திருநெல்வேலி), கர்நாடகம் மற்றும் மஹாராஷ்ராவில் காணப்படுகிறது.
ரசாயனம்: வாயு விளங்கத்தில் எம்பெலின் – 2.5 லிருந்து 3.1%, க்வெட்சிடால் (Quercital) – 1.0%, கொழுப்பு – 5.2%, இவைதவிர, க்ரிஸ்டம்பைன் (Quercital Quercital – பிசின்), சீக்கிரம் ஆவியாகக்கூடிய எணையும் உள்ளன. இந்த ‘எம்பெலின்’ அமிலம் வயிற்றுப் பூச்சிகளில் ஒன்றான நாடிப்புழுவை அழிக்க வல்லது. இரண்டு வகை வாயு விளங்கங்களிலும், இந்த அமிலம் உள்ளது.
பொது குணங்கள்
உலர்ந்த பழங்கள் – வயிற்றுப் பூச்சிகளை அழிக்கும். டானிக். பாம்பு, தேள் கடிகளுக்கு பயன்படும்.
பழங்களின் கஷாயம் – ஜுரங்களுக்கு, தோல், நுரையீரல் கோளாறுகளுக்கு மருந்து.
வேர்களின் கஷாயம் – இருமல், பேதிக்கு, மருந்து.
மருத்தவ குணங்கள்
பல வியாதிகளுக்கு இந்த மூலிகை, மருந்தாக பயன்படுகிறது. சுஸ்ருதா இதை வயிற்று பூச்சி கொல்லியாகவும் இருமல் மருந்தாகவும் பயன்படும் என்கிறார். ‘விதாங்க ரசாயன்’, – என்ற வாயு விளங்கம் நிறைந்த மருந்தை சுஸ்ருதா ஆயுளை நீடிக்கும் மருந்தாக குறிப்பிடுகிறார். ஆசார்ய வாகபட்டா, குஷ்டம், மஞ்சள் காமாலை, மூச்சுக் குழாய் உபாதைகள் – இவற்றுக்கு மருந்தாகும் வாயு விளங்கம் என்றார். யுனானி மருத்துவத்திலும் வயிற்றுப்பூச்சிகளை அழித்து, ஜுரணத்தை பெருக்கி, பசியை தூண்டும் மருந்தாக வாயுவிளங்கம் குறிப்பிடப்படுகிறது. முக்கியமாக இந்த மூலிகை ஒரு அற்புதமான, பூச்சி, பழுக்கொல்லி மற்றும் கிருமி நாசினியாகும். விதையை (உலர்ந்த பழம்) பொடி செய்து 4 – 16 கிராம் எடை தேனில் குழைத்து, ஒரு நாளுக்கு 2 – 3 முறை கொடுத்து, அடுத்த நாள் சிற்றாமணக்கு எண்ணெய் கொடுக்க, வயிற்றுப்புழுக்கள், அதுவும் நாடாப்புழுக்கள், இறந்து வெளியேறும்.
பொடியில் 2 – 4 கிராம் எடுத்து, பாலிற்கலந்து சிறுவர்களுக்கு கொடுக்க, வயிற்றுப் பொருமல், செரியாமையால் வரும் வயிற்றுவலி நீங்கும்.
தலைவலி, காக்காய் வலிப்பு, தூக்கமின்மை, சரும வியாதிகள், (சொறி, ரணம், புண்கள், நமைச்சல்) இவற்றுக்கு வாயுவிளங்கம் நல்ல மருந்து.
வாயு விளங்கத்தின் வேரை, அரிசி கழுவிய நீருடன் அரைத்து உட்கொள்ள செய்தால் ஸர்ப்ப விஷம் நீங்கும்.
ஜலதோஷத்தை போக்கும். இதன் கஷாயம் ஃப்ளு ஜுரத்தை குறைக்கும்.
தற்போது மேற்கொண்ட ஆராய்சிகளின் படி, வாயு விளங்கம் குடும்பகட்டுப்பாடு உதவும் மருந்தாக பயன்படுத்தப்படலாம். எலிகளை வைத்து ஆராய்ச்சிகளில் இது தெரியவந்துள்ளது. மேற்கொண்டு ஆராய்ச்சிகள் நடந்துவருகின்றன.
வாயு விளங்க ஆயுர்வேத மருந்துகள் – விடங்கசாரதி லேகியம் – குஷ்டநோய், வெண் குஷ்டம், இருமல், பெருவயிறு, மூல நோய் நீரிழிவு, கட்டி, குன்மை ஆகியவற்றை தணிக்கும். விடங்காரிஷ்டம் – இது கட்டி, ஊருஸ்தம்ப வாதம், நீரிழிவு, சிறுநீர்ப்பையில் கல், பௌத்திரம், கண்டமாலை, தாடைப் பிடிப்பு, இவற்றை நீக்கும்.
விடங்காதி குடிகை – இது குஷ்டத்தை போக்கும்.
வாயு விளங்க விதைகள் கருமிளகில், கலப்படமாக சேர்க்கப்படுகிறது.