இன்று உண்ணும் உணவுகளால் அஜீரணக் கோளாறுகளில் அல்லலுறும் மக்களே அதிகம்.
சிலர் பசிக்காக உண்பதும் சிலரோ ருசிக்காக உண்பதும் உண்டு. நாம் உண்ணும் உணவு ஒழுங்காக செரிக்கா விட்டால் உடல் நலத்துக்கு பாதிப்பு ஏற்படும். இது மட்டுமல்லாது, செரிமானக் கோளாறுகளால் வயிற்று வலி, புளித்த ஏப்பம் போன்றவை ஏற்பட்டு சிரமத்தை தரும்.
எனவே, வயிறு சுத்தம் என்பது அவசியம். அப்போது தான் செரிமான மண்டலத்தின் செயல்பாடும் இயக்கமும் சிறப்பாக இருக்கும். கூடுமானவரை பச்சைக் காய்கறிகளை உணவில் எடுத்துக் கொள்ளுங்கள். அவ்வாறு எடுத்துக் கொள்ளப்படும் பச்சைக் காய்கறிகள் வயிற்றைச் சுத்தமாக்கும். கீரைகள், செலரி, பிரக்கோலி போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
அதே போல, கேரட், வெங்காயம், பட்டாணி, உருளைக் கிழங்கு போன்ற உயர் தர கார்போஹைட்ரேட் சத்து நிறைந்த உணவுகள் வயிற்றுக்கு ஏற்றவை. புளிப்பு சுவையுள்ள சிட்ரஸ் பழங்கள் செரிமான மண்டலத்தை நல்ல நிலையில் வைத்திருக்கும். பழங்களில் உள்ள நார்ச்சத்து வயிற்றுக்கு ஏற்றது.
எலுமிச்சை ஆரஞ்சு திராட்சை ஸ்ட்ராபெர்ரி ஆகியவை செரிமான மண்டலத்துக்கு ஏற்ற உணவுகள். அதேபோல் தினசரி இரண்டு வாழைப்பழம் சாப்பிடுவது மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கும். தானிய உணவுகள் கோதுமை ரொட்டி, போன்றவை எளிதில் ஜீரணமாகும்.
தேவையற்ற கழிவுகள் வெளியேற உதவும். அதே போல அன்றாடம் உண்ணும் உணவுகள், எளிதில் செரிப்பதற்கு நிறைய தண்ணீர் பருக வேண்டும். பால், பழரசங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
சத்தான உணவு சாப்பிடுவதன் மூலம் உடம்பில் தேவையற்ற கொழுப்பு சேர்வது தவிர்க்கப்படும். தொப்பை ஏற்படாது வயிறு தட்டையாக இருக்கும். வாயில் வைக்கும் உணவில் நாம் கவனமாக இருந்தால், வயிற்றில் பிரச்சனைகள் வராது.
அ. பாரதி
மேலும் தெரிந்து கொள்ள…