முகா லேபம்

Spread the love

முகாலேபம் என்றால் பூச்சுக்களால் முகத்தை அழகு செய்து கொள்ளும் கலை. பழங்கால வைத்திய நூல்களில் குறிப்பிடப்படும் இந்த பூச்சுக்களை பருவ காலத்திற்கு ஏற்றவாறு உபயோகிக்க வேண்டும்.

ஹேமந்த ருதுவில் (மார்கழி – தை)

இலந்தை விதையின் உட்பருப்பு, ஆடாதோடையின் வேர், வெள்ளி லோத்திப் பட்டை, வெண்கடுகு -இவற்றை தண்ணீரில் அரைத்து முகப்பூச்சாக உபயோகிக்கவும்.

சிசர ருதுவில் (மாசி – பங்குனி)

கண்டங்கத்திரியின் வேர், எள், மரமஞ்சளின் வேர்ப்பட்டை, உமி நீக்கிய பார்லி இவற்றை நீரில் அரைத்து விழுதாக முகத்தில் பூசிக் கொள்ளவேண்டும்.

வசந்த ருதுவில் (சித்திரை – வைகாசி)

வெண் சந்தனம், வெட்டிவேர், வாகைப் பூ, சதகுப்பை, சம்பா அரிசி, தர்ப்பத்தின் வேர் இவற்றை அரைத்த விழுது.

கிரீஷ்ம ருதுவில் (ஆனி – ஆவடி)

தாமரைக்கிழங்கு, அல்லிக்கிழங்கு, அருகம்புல், அதிமதுரம், சந்தனம் இவற்றின் விழுது.

வர்ஷ ருது (ஆவணி – புரட்டாசி)

அகில்கட்டை, எள், வெட்டிவேர், ஜடமான்சி, தகரை வேர், செம்மரம் இவைகளை அரைத்து செய்த விழுது.

சரத் ருது (ஐப்பசி – கார்த்திகை)

தாளிசபத்ரி, நாம கரும்பினை வேர், அதிமதுரம், நாணல் வேர், தகரை வேர், அகில் கட்டை இவற்றை அரைத்த விழுது.

உபயோகிக்கும் முறை

இந்தப் பூச்சுக்களை தயார் செய்யும் போது நன்றாக வெண்ணை போல் விழுதாக அரைக்கவும். விழுது  குளிர்ச்சியாக இருக்க வேண்டும். திக்ஷீவீபீரீமீ  இருப்பதால் அதில் வைத்துக் கொள்ளலாம்.

ஒரு விரலின் பாதிக்கனத்தின் முகம் மேல் இருக்கும் படி தடவிக் கொள்ள வேண்டும்.

முகத்தில் தடவிய பூச்சு பாதி உலர்ந்தும் உலராமலும் இருக்கும் போதே அதை ஈரமாக்கி, களைந்து விட வேண்டும். முழுவதும் உலரும் வரை விடக்கூடாது.

ஜலதோஷம், மூக்கடைப்பு, கணை, அஜீரணம் உள்ளவர்கள் இந்த பூச்சுக்களை உபயோகிக்க வேண்டாம்.

பூச்சுக்களை தடவும் முன்பு முகத்தை தண்ணீரில் கழுவிக் கொள்ளவும். களையும் போது, தண்ணீரில் கழுவி எடுக்கவும். பயத்தம் மாவினாலும் (அ) துணியாலும் துடைத்து எடுக்கலாம். எடுத்த பின் முகத்தில் லேசாக பிண்ட தைலம் தடவிக் கொள்வது நல்லது. இந்த பூச்சுகளை உபயோகிப்பதால் முகம் பொலிவு பெறும்.

மூலிகை ஸ்நான பவுடர்

இயற்கையான மூலிகைகளைக் கொண்டு வீட்டிலேயே மூலிகை ஸ்நான பவுடர் தயாரித்து வைத்து உபயோகிப்பது மிக மிக நல்லது. சாதாரண தினசரி உபயோகத்திற்கு சீயக்காய் கலக்காமலும் எண்ணெய் குளியல் அல்லது எண்ணெய் பிசுக்கை அகற்ற சீயக்காய் கலந்து வைத்துக் கொண்டும் உபயோகிக்கலாம். மூலிகை ஸ்நான பவுடரை தயிர், பால், தண்ணீர், இளநீர், பன்னீர், வெள்ளரி, ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் கலந்து பிசைந்து வைத்து பின்னர் தடவி குளித்திட சிறந்த பலன் கிடைக்கும்.

தேவையான பொருட்கள்

                கஸ்தூரி மஞ்சள்         –           10 கிராம்

                சோம்பு                        –           10 கிராம்

                பச்சிலை                      –           10 கிராம்

                கோஷ்டம்       –           10 கிராம்

                இலவங்கம்      –           10 கிராம்

                தாளிசபத்திரி –           10 கிராம்

                கோரைக்கிழங்கு         –           50 கிராம்

                நன்னாரி வேர் –           50 கிராம்

                சந்தனத் தூள்  –           150 கிராம்

                மாகாளி கிழங்கு          –           10 கிராம்

                விலாமிச்சை வேர்       10 கிராம்

                மஞ்சிட்டா                  10 கிராம்

                ரோஜா மொட்டு          –           10 கிராம்         

                பூலாங்கிழங்கு –           50 கிராம்

                வெட்டி வேர்              50 கிராம்

                மரிக்கொழுந்து            –           100 கிராம்

                மகிழம் பூ                     -100 கிராம்

                உலர்ந்த எலுமிச்சம்    -350 கிராம்

                பழத் தோல்

செய்முறை

இவை அனைத்தையும் நிழலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். எலுமிச்சம் பழச்சாறு பிழிந்த தோல்களை மட்டும் வெயிலில் உலர்த்தி எடுத்துக் கொள்ளவும். அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நைசாக அரைக்கவும். இதனை தினசரி குளியலுக்கு அப்படியே உபயோகிக்கலாம். அல்லது பால், தயிர், இளநீர், பன்னீர், வெள்ளரி ஜூஸ் போன்ற ஏதேனும் ஒன்றில் அரை மணி நேரம் ஊற வைத்தும் உபயோகிக்கலாம். எண்ணெய் பிசுக்கைப் போக்குவதற்கு சீயக்காய்த்தூள் அல்லது அரப்புத் தூளுடனும் சேர்த்து உபயோகிக்கலாம். பயத்த மாவு, கடலை மாவு, அரிசி மாவு சாதம் வடித்த கஞ்சி ஆகியவற்றுடனும் சேர்த்து உபயோகிக்கலாம்.

இது வியர்வை துர்நாற்றம், தோல் வறட்சி, அரிப்பு எரிச்சல் போன்றவற்றை நீக்கி, மேனிக்கு பொலிவும், மணமும், பாதுகாப்பும் திசுக்களுக்கு வலுவும் அளிக்கக்கூடியது.


Spread the love
error: Content is protected !!