மாம்பழம் ஆரோக்கியமான சருமத்தை உண்டாக்கும் குணம் உடையது. இதில் உள்ள வைட்டமின் ‘ஏ’ அபரிமிதமானது. முகப்பரு, தோல் சுருக்கங்கள் போன்றவற்றுக்கு தினம் மாம்பழம் சாப்பிடுவது நல்லது.
நோய் எதிர்ப்பு சக்தி
மாம்பழ சீசனில், மாம்பழம் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் தடுப்பு ஊக்கமடையும். கிருமிகளின் தாக்குதலை எதிர்க்க இயலும்.
பொது ‘டானிக்’
தேன், பால் கலந்த மாம்பழ ஜுஸ் அமிர்தம் போல் சுவையில் மட்டுமல்ல, உடலை வளர்ப்பதிலும் உதவும். எல்லா வயதினருக்கும் ஏற்றது.
இதர மருத்துவ பயன்கள்
1. மாம்பருப்பு:-
Astringent ( துவர்ப்பு, சுருங்கச் செய்யும் தன்மை) குணத்தால், பெண்களின் உடல் குறைபாடுகளுக்கு கொடுக்கப்படும் ஆயுர்வேத மருந்துகளான புஷ்யாநுக சூரணம், போன்றவற்றில் மாம்பருப்பு பயன்படுகிறது.
2.இலைகள்:-
மங்கல நிகழ்ச்சிகளில், விசேஷ நாட்களில், வாயிலில் தோரணம் கட்ட இலைகள் பயன்படுத்தப்படுகின்றன.
3.பூக்கள்:-
ஆண்களின் தானாகவே விந்து வெளியேறும் கோளாறுகளுக்கு, மாம் பூக்களுடன், தேன் ( ஒவ்வொன்றும் ஒரு மேஜைக் கரண்டி அளவில்) கலந்து உட்கொள்ளலாம். கொசுத்தொல்லைகளிலிருந்து விடுபட, பூக்களை ‘கரி’யில் இட்டு சூடாக்கி வரும் புகையை உபயோகிக்கலாம்.
4.பட்டை:-
மாதவிடாய், வெள்ளைப்போக்கு போன்ற பெண்கள் பிரச்சனைகளுக்கு தரப்படும் ஆயுர்வேத மருந்துகளில் மாம்பட்டை சேர்க்கப்படுகிறது.
5.மாமர பிசின்:-
இந்த பிசினை எடுத்து, எலுமிச்சம் சாறு, மஞ்சள் பொடி கலந்து சுடவைக்கவும். இந்த களிம்பை மூட்டுவலி, சுளுக்கு இவற்றுக்கு சிகிச்சையாக பயன்படுத்தலாம்.
உணவாக:-
- கனிந்த மாம்பழங்களின் சுவை ஒரு தனியான, இனிமையான, தேவாமிருத சுவை. பழங்களுக்கு பழம் மாறுபடும். சாறு அபரிமிதமாக இருப்பதால் பருக, பருக புத்துணர்ச்சி உண்டாகும்.
- மாங்காய் இல்லாத ஊறுகாய்கள் இருந்தாலும், மாங்காய் உள்ள ஊறுகாய்காய் எவ்வளவு? அதுவும் ‘ஆந்திர ஆவக்காய்’ சுவையை ஒரு தடவையாவது உணராதவர்கள் இல்லை. மாங்காய் கதுப்பில் சட்னி செய்யலாம்.
- மாம்பழ துண்டுகளிலிருந்து “அரிவா” செய்யலாம். “காட்பரீஸ்” சாக்கலேட் போல் “பார்கள்” (Bars) செய்யலாம்.
- சாறு அதிகம் இருக்க வேண்டும் என்றே விளைவிக்கப்படும் “ரசாது” என்ற மாம்பழத்தை அப்படியே சிறு துளையிட்டு, உறிஞ்சி குடிக்கலாம்.
- கேரளாவில், மாம்பழத்தால் செய்யப்படும் “மாம்பழ காலான்” சுவை மிக்கது.
- பல வகை தானிய தயாரிப்புகளில் ( Mueseli, Oat granola) மாம்பழம் பயன்படுத்தப்படுகிறது.
- பாட்டில், டெட்ரபேக், மாம்பழ சாறுகள் வருடம் முழுவதும் கிடைக்கின்றன. மில்க்ஷேக், ஐஸ்கிரீம் இவற்றில் மாம்பழ சுவை விரும்பப்படுகிறது.
- தாய்லாந்து, இதர தென்கிழக்கு ஆசிய தேசங்களில், இனிப்பு அரிசி சாதத்துடன், தேங்காய், மாம்பழ துண்டுகள் பரிமாறப்படுகின்றன.
- உலர வைத்த மாங்காயிலிருந்து “ஆம்சூர்” என்ற மாங்காய் பொடி தயாரிக்கப்படுகிறது. இது ஒரு “மசாலா பொருள்”.
மா ரகங்கள்:-
பல நூறு ரகங்கள் இருப்பதால், “ஒட்டு” (hybrid) செய்யப்பட்ட மரங்கள் பரவலாக உபயோகிக்கப்படுகின்றன. மஹாராஷ்டிராவில் “அல்ஃபான்ஸோ” பயிரிடப்படுகிறது. உலக அளவில் விரும்பப்படும் ரகத்தில் இது ஒன்று. பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. மஹாராஷ்டிராவின் ரத்னகிரி, தேவகாட் பகுதிகளிலிருந்து வரும் “அல்ஃபான்ஸோ” பழங்கள் சிறந்தவை, பெயர் பெற்றவை. அதே போல் லக்னோவின் சேரி, அதன் வாசனைக்கு புகழ் பெற்றது. சுவைக்கும், நறுமணத்துக்கும் பெயர் பெற்றது லங்ரா”. இது கிழக்கு உ.பி. யிலிருந்து வருவது. ஆனால் இது சீக்கிரமே கெட்டு விடுவதால், ஏற்றுமதிக்கு ஏற்றவை அல்ல. இவை இருக்கட்டும் அதிக அளவில் நியாயமான விலையில், எல்லோரும் வாங்கும் படியாக, அதே சமயம் சுவை குன்றாத “பங்கான பள்ளி” ( ஆந்திரா) க்கு ஈடு இணை இல்லை. மேற்கு வங்காளத்தில் பிரசித்தி பெற்றது “மால்தா”. “சேலத்து மல்கோவா” பாடல்களில் புகழ் பெற்றது. சுவையிலும் அபாரமானது. கனிந்த பழமும், பச்சை நிற தோலுடன் காணப்படும் வித்தியாசமான கனி.
மாம்பழ உற்பத்தி
அதிகமாக மாம்பழம் உற்பத்தி செய்யும் நாடு இந்தியா. 16000 சதுர கிலோமீட்டரில் மாமரங்கள் பயிரிடப்பட்டு, 10 . 8 மில்லியன் டன் மாங்கனிகள் உற்பத்தியாகிறது. இந்தியாவில், ஆந்திராவில் தான் அதிகமாக மாம்பழங்கள் உற்பத்தியாகின்றன. ( 3500 சதுர கி.மீ). வட இந்தியாவில் உத்திர பிரதேசத்தில் அதிக விளைச்சல்.