Siriyanangai uses
சிறியாநங்கை நீர் பாங்கான இடங்களிலும், வயல்வெளிகளிலும் அதிகளவில் வளரக்கூடிய மூலிகையாகும். இது கசப்புத் தன்மையுடையது. இலை மென்று தின்றால் கசப்பாக இருக்கும். இது விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. சிறியாநங்கை செம்மண், கரிசல் மண்ணில் நன்கு வளரக் கூடிய குறுஞ்செடி ஆகும்.
இதன் இலைகள் எதிர் அடுக்கில் வெட்டு இல்லாத இலைகளைக் கொண்டது. இதன் இலைகளில் பீட்டா-சட்டோ ஸ்டீரால் கால்மேகின் என்ற கசப்பு பொருள் அடங்கியுள்ளது. இதை விதைத்து 45 நாட்கள் சென்ற பின் நாற்று நடலாம். இதன் காய்கள் காய்ந்தவுடன் வெடித்து விதைகள் சிதறிவிழும்.
சிறியாநங்கை செடி பாம்பு வராமல் தடுக்க உதவுகிறது. இச்செடியின் இலை மீது பட்டு வரும் காற்று பாம்பின் மீது பட்டால், அதன் செதில்கள் சுருங்கி விரியாது பாம்புகள் ஓட முடியாமல் நிற்கும். எனவே இச்செடியை வீட்டிலும் வளர்க்கலாம்.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சிறியாநங்கை |
தாவரப்பெயர் | ANDROGRAPHIS PANICULATA |
தாவரக்குடும்பம் | ACANTHACEAE |
பயன் தரும் பாகங்கள் | இலை,வேர் |
மருத்துவ பயன்கள்
சிறியாநங்கை இலையை நன்கு அரைத்து அதன் சாற்றினை தனியாக வடிகட்டி இதனுடன் காய்ச்சாத பசும் பால் அல்லது மோர் கலந்து காலை வெறும் வயிற்றில் பருகி வரலாம்.
இவ்வாறு பதினைந்து நாட்களுக்கு ஒரு முறை அல்லது மாதத்தில் ஒரு முறை குடித்து வரலாம். இரத்தம் சுத்திகரிக்கப்படும், கல்லீரலில் உள்ள கெட்ட கழிவுகள் வெளியேறும், குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல், பூச்சிக்கடி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகள் குணப்படும். சரும பிரச்சனைகளுக்கு சிறந்த தீர்வு அளிக்கிறது.
இதனை குழந்தைகளுக்கு 3ml மேல் கொடுக்கக்கூடாது. பெரியவர்களுக்கு 10 ml போதுமானது.
உடல் பலம் பெற
சிறியாநங்கை 5 இலைகளை பறித்து அதனை நன்கு அரைத்து புளியங்கொட்டை அளவு எடுத்து பாலில் கலந்து குடித்து வர உடல் அதிசயத்தக்க பலம்பெறும்.
தேமல் பிரச்சனை நீங்க
சிறியாநங்கை வேறுடன் அருகம்புல் சாறு சம அளவு சேர்த்து நன்கு அரைத்து சாப்பிட்டு வர தேமல் சம்பந்த பிரச்சனைகள் நீங்கும். இந்த மருந்து உட்கொள்ளும் சமயத்தில் உணவுகளில் கத்திரிக்காய் தவிர்த்தல் வேண்டும்.
விஷக்கடிக்கு
சிறியாநங்கை விஷப் பூச்சிகள் கடிக்கு மிகச்சிறந்த தீர்வாகும். பாம்புகடிக்கு இதன் இலையை அரைத்து சிறு உருண்டை அளவு விழுங்கவும். இவ்வாறு உண்பதால் இரத்தத்தில் உள்ள விஷத்தன்மை முறியும்.
சிறியாநங்கை உண்ணும் முறை
சிறியாநங்கை மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை வகைகளில் ஒன்றாகும். சிறியாநங்கை இலைகளை நீரழிவு நோயாளிகள் உட்கொண்டு வர உடலில் சர்க்கரை அளவு சீராகும்.
சர்க்கரை நோயாளிகள் சிறியாநங்கை இலை பொடியுடன் காய்ந்த நெல்லிக்காய் பொடி, வெந்தயப் பொடி, சிறு குறிஞ்சான் இலைப் பொடி இவற்றை சம அளவு சேர்த்து அரைத்து ஒரு ஸ்பூன் அளவு எடுத்து ஒரு தம்ளர் தண்ணீரில் சேர்த்து காலை, மாலை என இருவேளையும் குடித்து வரலாம். இதனால் நீரிழிவு கட்டுப்படும்.
குறிப்பு
விஷக்கடிக்கு மருந்தாகும் இந்த அரிய மூலிகைச் செடியை வீட்டில் வளர்த்து வரலாம் அல்லது நாட்டு மருந்து கடைகளில் இதன் பொடி வாங்கி உபயோகிக்கலாம்.
இதனை நீண்ட நாட்கள் உள்ளுக்குள் எடுக்கக்கூடாது. மண்ணீரல், கல்லீரல் சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் இப்பொடியை மருத்துவ ஆலோசனைப்படி எடுத்துக் கொள்ளலாம்.
ஆயுர்வேதம்.காம்