நன்னாரி ‘சர்பத்’ கோடையில் உடலை குளிர வைக்கும் பானம். கொதிக்கும் வெய்யிலை தாங்கக்கூடிய சக்தியை அளிக்கும் ஒரு மூலிகை சரசபரில்லா எனும் இந்த நன்னாரி.
நன்னாரி ஒரு வாசனையுள்ள தாவரம்.
சமஸ்கிருதம் ஸல்ஸா, சரிவா
தமிழ் நன்னாரி
தெலுங்கு கடி சுகந்தி
கன்னடம் நாமத பேரு
ஆயுர்வேதத்தில் நன்னாரி “ சுகந்த திரவியங்கள்” குழுவில் சேர்க்கப்பட்ட மணமூட்டும் செய்கையுடைய மூலிகை. இதன் பெயரே நல் + நாரி. அதாவது நல்ல மணமுடையது என்று பொருள். இதை பாதாள மூலிகை என்றும் சொல்வதுண்டு.
பொது குணங்கள்- ஆயுர்வேதப்படி நன்னாரி, மதுர ( இனிப்பு) குணமும் கசப்பும் இணைந்தது. கனமானது. குளிர்ச்சியூட்டும். பசியின்மை, உணவு கசப்பது, இருமல், ஜுரம், உதிரப் போக்கு, இவற்றுக்கு நல்லது.
குணங்களும், பயன்களும்
நன்னாரி செடியில், வேர்களுக்குத்தான் முக்கியத்துவம். இதன் இலை, கொடி, காம்பு எதிலும் நறுமணமில்லை. மருத்துவ பயன்களும் இல்லை. நன்னாரி இனிப்பானது. எரிச்சலை குறைத்து சமனப்படுத்தும்.
வியர்வையை உண்டாக்கி, உடல் உஷ்ணத்தை தணிக்கும். சிறுநீர் பிரிய உதவும். ரத்தத்தை சுத்திகரிக்கும்.
நன்னாரி சேர்க்கப்படும் ஆயுர்வேத மருந்துகள் அஸ்வகந்தா சூரணம், அஸ்வகந்தாதி லேஹம், சந்திரனஸவா போன்றவை.
தாவர விவரங்கள்
நன்னாரி படரும் புதர்ச் செடி/ கொடி. கங்கை சமவெளி, அஸ்ஸாம், மத்திய, மேற்கு மற்றும் தென்னிந்தியாவும் வளரும். நன்னாரி விஞ்ஞான ரீதியாக பயிரிடப்படுவதில்லை. ஆனால் பரவலாக காட்டுச் செடியாக வளருகிறது. சரியான முறையில் பயிரிட்டு வளர்த்தால், இந்த மூலிகை மேலும் மேன்மையாகும்.
நன்னாரி வேர் – புதிய வேர் நல்ல நறுமணத்துடன் இருக்கும். காரணம் அல்டிஹைட். முதிர்ந்த வேர்களில் நறுமணம் குறைவு.
நன்னாரி குடும்பத்துடன் பரவல்லி, கிருஷ்ண சரிவா மற்றும் மாகாளி கிழங்கு சேர்ந்தவை.