Santhanam benefits
சந்தன மரமானது தென் இந்தியாவில் இலையுதிர் காடுகளில் அதிகளவில் காணப்படுகின்றது. தமிழக காடுகளில் இது தானாகவே வளரக் கூடியதாகும். இது ஒரு சிறு மரமாகும். இது விதை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.
இலையின் மேற்பகுதியில் கரும்பச்சை நிறமும், அடிப்பகுதியில் வெளிறியும் காணப்படும். இதன் இலைகள் மாற்றடுக்கில் அமைந்திருக்கும். இது துவர்ப்பு தன்மையுடையதாகும். இதன் உலர்ந்த நடுக்கட்டை நன்கு மணமுடன் காணப்படும். சந்தன எண்ணெய்அதிக நறுமணம் உடையதாகும். சந்தன மரம் 20 ஆண்டுகளுக்குப் பின் தான் முழுமையான பலனை தருகிறது.
தாவர விபரம்
மூலிகையின் பெயர் | சந்தனம் |
தாவரப்பெயர் | SANTALUM ALBUM |
தாவரக்குடும்பம் | SANTALACEAE |
வேறு பெயர்கள் | முருகுசத்தம் |
பயன் தரும் பாகங்கள் | சேகுக்கட்டை, வேர் |
சந்தன மரங்கள் குளிர்ச்சியை இலைகள் மூலம் வெளியிடுகின்றது. இதன் காரணமாக சந்தன மரங்கள் அடர்ந்து வளரும் இடங்களில் தொடர்ச்சியான மழைப்பொழிவு மற்றும் குளிர்ச்சித் தன்மை ஏற்படும்.
மருத்துவ பயன்கள்
இதய படபடப்பு குறைய
சந்தனப் பொடி 20 கிராம் அளவில் எடுத்து அதனை 300 மில்லி லிட்டர் நீருடன் கலந்து நன்கு காய்ச்சவும். இது பாதியாக வற்றியதும் இதனை மூன்று வேளையாக 50 மில்லி என்ற அளவில் குடித்து வர நீர்க்கோவை, காய்ச்சல், மார்புத் துடிப்பு, மந்தம், இதய படபடப்பு குறைந்து இதயம் வலுப்பெறும்.
கண் கட்டிகள் மறைய
சந்தனத்தை நன்கு அரைத்து அதனை எலுமிச்சை சாறுடன் கலந்து இரவில் தூங்கும் முன் கண்களின் மேல் தடவலாம். இவ்வாறு தொடர்ந்து செய்வதால் சில நாட்களில் கண் கட்டிகள் மறையும்.
தலைவலி நீங்க
நம் உடலின் வெப்பம் மற்றும் ஆற்றல் தலைவலிக்கு முக்கிய காரணமாகும். இது உடலில் உள்ள பீட்டாவை சமநிலைப்படுத்துவதால் நிகழ்கிறது. இதற்கு சிவப்பு சந்தனத்தை நன்கு மையாக அரைத்து அதனை நெற்றியில் பற்றுப் போடலாம். இது தலைவலியை குறைத்து, மன அமைதியை உண்டாக்கும்.
நீரழிவு கட்டுப்பட
சந்தனத்தை நன்கு அரைத்து அதனை 5-10 கிராம் அளவு எடுக்கவும். பின் இதனுடன் 50 மில்லி அளவு நெல்லிக்காய் சாறு கலந்து காலை, மாலை என இருவேளையும் தொடர்ந்து 48 நாட்கள் வரை குடித்து வர நீரிழிவு கட்டுப்படும்.
மதுமேகம் நீங்க
சிறிதளவு சந்தன விழுதுடன் 15 மில்லி அளவு நெல்லிக்காய் சாறு கலந்து அதனை 40 நாட்கள் வரை தொடர்ந்து குடித்து வர மதுமேகம் தீரும்.
புற்றுநோய்க்கு
ஆய்வின்படி சிவப்பு சந்தனத்திலிருந்து எடுக்கப்படும் ஸ்டெரோலினஸ் கே, ஸ்டெரோலினஸ் எல் ஆகியவை புற்றுநோய்க்கு எதிரான பண்புகளை உடையது என்று கண்டறியப்பட்டுள்ளது. இது மார்பு, பெருங்குடல், கணையம் மற்றும் புரோஸ்டேட் போன்ற பகுதிகளில் ஏற்படும் புற்றுநோயை குறைக்க உதவுகிறது.
இரத்தம் சுத்தமாக
சந்தனத்தை நீரில் சேர்த்து நன்கு கரைத்து அதனை பருகலாம். இவ்வாறு செய்வதால் இரத்தம் தூய்மையாகும். இது மனதை அமைதிப்படுத்தி சுறுசுறுப்பாக இயங்க வைக்கிறது. உடல் குளுமை பெறும்.
சந்தன எண்ணெய் தைலம் எசன்ஸ் 2- 3 துளிகள் பாலுடன் கலந்து குடித்து வர உடல் குளிர்ச்சி அடையும்.
சந்தனம் விதைகள் மருத்துவங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
சந்தனக் கட்டையின் நன்மைகள்
கோடை வெயிலில் தலையில் ஏற்படும் கொப்புளங்கள் நீங்க சந்தன கட்டைகளை நன்கு அரைத்து அதனை தலையில் தடவலாம்.
வெள்ளை சந்தன மரக்கட்டைகள் சரும பராமரிப்பு மற்றும் உடல் உள்ளுறுப்புகளின் சீரான இயக்கத்திற்குத் துணை புரிகின்றது.
சிவப்பு சந்தனத்தில் ஜென்டிசிக் அமிலம், 3 ஹைட்ராக்ஸி பென்சோயிக் அமிலம், ஆல்ஃபா, ஸ்டெரோ ஸ்டில்பீன் மற்றும் வெண்ணிலிக் அமிலம் நிறைந்துள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைக்கும் தன்மையுடையது.
சந்தனக் கட்டை முகப்பூச்சு, நறுமணத் தைலம், அலங்கார பொருட்கள், மாலைகள், சோப்புக்கள், ஊதுவத்திகள் என பலவற்றில் பயன்படுத்தப்படுகின்றது. இது கிருமி நாசினியாகவும், உடல் அலர்ஜியை குறைக்கும் தன்மை உடையதாகும். இது தலைவலி, மூளை பாதிப்பு, இதய பாதிப்புகளை சீர்ப்படுத்தி உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.
சிவப்பு சந்தனம் மரங்களில் இருந்து எடுக்கப்படும். சந்தனக் கட்டை பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருந்துகளில் பயன்படுத்தப்படுகிறது.
சிவப்பு சந்தன மரத்தில் உள்ள ஆண்டிமைக்ரோபியல் பண்புகள் நோய்க்கிருமிகளை அழித்து, கிருமிகளால் உருவாகும் தொண்டைப் புண், சளி மற்றும் இருமல் ஆகியவற்றிற்கு நல்ல மருந்தாகும். இதன் அழற்சி எதிர்ப்பு பண்புகள் வீக்கத்தை குறைக்கின்றது.
இது நீரிழிவு நோய், இரத்த அழுத்தம் அல்லது நாள்பட்ட கோளாறுகளுக்கு பயன்படுத்தும் முன் மருத்துவரை அணுகவும்.
கலைநயமிக்க புகைப்படங்கள், டேபிள் பேப்பர், வெயிட் கள் போன்றவை தயாரிப்பிலும் சந்தன மரக்கட்டைகள் பயன்படுத்தப்படுகின்றது.
சந்தனப் பொடியின் பயன்கள்
சந்தனப் பொடியானது சரும அழகை மேம்படுத்துவதில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. இதனை எவ்வாறெல்லாம் உபயோகிக்கலாம். என்பது பற்றி பார்க்கலாம்.
சிவப்பு சந்தனப் பொடியை தயிர், மஞ்சள், ரோஸ் வாட்டர், எலுமிச்சை சாறு மற்றும் எண்ணெய் இவற்றில் ஏதேனும் ஒன்றுடன் கலந்து பயன்படுத்தலாம்.
இது சருமத்தில் ஏற்படும் முகப்பரு, எண்ணெய்த் தன்மை, வயதான தோற்றம், அரிப்புகள், சொரியாசிஸ், பதனிடப்பட்ட தோல், ஹைபர்பிக்மென்டேஷன் போன்ற சரும பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வாக அமைகிறது.
முகப்பரு நீங்க
சந்தனப் பொடியுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் பூசி வர சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, பருக்கள் வருவது தடுக்கப்படும்.
சருமம் மென்மையாக
தயிருடன் சந்தனப் பொடியை சேர்த்து முகத்திற்கு தடவி வர சரும நிறம் மாறும்.
முட்டை மற்றும் தேன்
முட்டையுடன் தேன் மற்றும் சந்தனப் பொடி சேர்த்து நன்கு அடித்து கலக்கவும். பின் இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். நன்கு காய்ந்ததும் முகத்தை கழுவவும். இவ்வாறு செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி அழுக்குகள் வெளியேறும். இதனால் சரும அழகு மேம்படும்.
முகம் பொலிவு
சந்தனப் பொடியுடன் மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு மற்றும் தேவையான அளவு பால் கலந்து முகத்தில் பூசி வர முகப்பொலிவு உண்டாகும்.
சிவப்பு சந்தன எண்ணெய்
சிவப்பு சந்தனத்தில் இருந்து எடுக்கப்படும் எண்ணெயானது வீடுகளில் நறுமண சிகிச்சையில் பயன்படுத்தப்படுகின்றது.
சந்தன எண்ணெயானது மன அமைதி மற்றும் மன அழுத்த பாதிப்புகள், சரும நோய்கள் போன்றவற்றிற்கு பெரிதும் பயன்படுகின்றது.
சிவப்பு சந்தன எண்ணெயை சரும ஆரோக்கியத்திற்கு நேரடியாகவோ அல்லது லோஷனுடன் கலந்தும் பயன்படுத்தலாம். தினசரி நாம் உபயோகிக்கும் எண்ணெய்களிலும் டிஃப்பி யூஷர்களிலும் இதனை பயன்படுத்தலாம்.
சந்தன எண்ணெயை முடக்கு வாதம், பக்க வாதம் போன்ற வாத நோய்களுக்கு உள் மருந்தாகவும், வெளிப்பூச்சு எண்ணெயாகவும் பயன்படுத்தலாம். இது நல்ல பலனை தரும்.
சித்த மருத்துவத்தில் உடல் சூட்டை குறைக்கும் மருந்துகள் சந்தன எண்ணெய்கள் மூலம் தயாரிக்கப்படுகின்றது. இதனை உடலில் பூசி வர வெயிலினால் கருத்த முக நிறம் மாறும்.
சந்தன எண்ணெய் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
சந்தனப் பொடி – தேவையான அளவு
கன்னி ஆலிவ் எண்ணெய் அல்லது
சாதாரண ஆலிவ் எண்ணெய் – அரை கப் சிறிய கண்ணாடி குடுவை அல்லது பாட்டில்
செய்முறை
ஒரு கப் ஆலிவ் எண்ணெயுடன் சந்தனப் பொடியை சேர்க்கவும். பின் இதனை ஒரு கண்ணாடி குடுவையில் சேர்த்து கட்டி விழாதபடி நன்கு கரைத்து விடவும். இதனை வாரத்திற்கு ஒரு முறை சுத்தமான மற்றும் உலர்ந்த இடங்களில் வைக்கவும். அடிக்கடி கிளறிக் கொண்டே இருக்கவும்.
பின் எண்ணெய் கலவையை ஒரு வாரம் சென்றபின் சல்லடை செய்து, இவற்றை மற்றொரு சுத்தமான கண்ணாடி குடுவையில் சேகரித்து குளிர்ந்த இடத்தில் பாதுகாக்கவும்.
குறிப்பு
சந்தன எண்ணெயை இறுக்கமான கொள்கலனில் சேமித்து வைப்பதன் மூலம் அதிக ஆண்டுகள் பாதுகாப்பாக வைக்கலாம்.
சிவப்பு சந்தனத்தை நேரடியாக சருமத்தில் உபயோகிப்பதால் சிலருக்கு ஒவ்வாமை ஏற்படலாம். எனவே இதனை பயன்படுத்துவதற்கு முன்பு பேட்ச் டெஸ்ட் செய்யலாம்.
சிவப்பு சந்தனத்தை சரும பிரச்சனைகளுக்கு மருத்துவ ஆலோசனைப்படி பயன்படுத்தலாம்.
எச்சரிக்கை
கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்கள் சந்தனத்தை தவிர்க்கவும்.
சந்தனத்தை உட்கொள்ளும் முறையினால் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படலாம். இதைக் குறித்து ஆராய்ச்சி ஏதுமில்லை.
ஒவ்வாமை பிரச்சனை உள்ளவர்கள் சந்தனத்தை தவிர்க்கவும். இல்லையேல் அரிப்பு அல்லது தடிப்பு ஏற்படலாம்.
அதிகளவில் பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏற்படலாம்.
தீவிர சிகிச்சைக்கு சந்தனத்தை பயன்படுத்தல் கூடாது. மருத்துவ ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.
ஆயுர்வேதம்.காம்