செவ்வாழையின் சிறப்பு
செவ்வாழை மரம் செம்மண் பகுதியில் செழித்து வளரும். இதன் தாயகம் தென் மேற்கு ஆசியா. இது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிகளவில் விளைவிக்கப்படுகின்றது. இது மற்ற வாழை மரங்களை விட தண்டு பகுதியில் சற்று சிவந்து காணப்படும்.
இதில் ஆன்தோசயனின் மற்றும் பீட்டா கரோட்டின் போன்றவை அதிக அளவில் இருப்பதால் மஞ்சள் நிறத்தில் இருக்கும் தோலின் மேல் பகுதியில் சிவப்பு நிறம் படியும். இது செவ்வாழையில் இயற்கையாக நடக்கும் இரசாயன மாற்றம் ஆகும்.
ஊட்டச்சத்துக்கள் விபரம்
செவ்வாழையில் 90 கிராம் கலோரி, 21 கிராம் மாவுச்சத்து, 1.3 கிராம் புரோட்டின், 3 கிராம் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
மருத்துவ குணங்கள்
செவ்வாழையில் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தினம் ஒரு செவ்வாழைப்பழம் உண்டு வர இரத்த அழுத்தம் குறைவதாக ஆய்வில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
கண்களுக்கு
செவ்வாழையில் உள்ள பீட்டா கரோட்டீன் கண் நோய்களை குணமாக்குகிறது. மாலைக்கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இரவு உணவுக்குப்பின் தினம் ஒரு செவ்வாழைப்பழம் என 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வரலாம்.
சரும ஆரோக்கியத்திற்கு
தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவதால் சருமப் பொலிவு மற்றும் இளமையான தோற்றத்தை பெறலாம்.
பல் சார்ந்த நோய்களான பல்வலி, பல்லசைவு, சருமம் சார்ந்த சொரி, சிரங்கு, சரும வெடிப்பு, நகத்தில் ஏற்படும் புள்ளி போன்ற கோளாறுகள் என பல்வேறு நோய்களுக்கு செவ்வாழை மிகச்சிறந்த மருந்தாகும்.
சிறுநீரகக் கோளாறுகளுக்கு
செவ்வாழையில் உள்ள உயர்தர பொட்டாசியம் சிறுநீரகக் கோளாறுகளை குணப்படுத்துகிறது. சிறுநீரகத்தில் கல் ஏற்படுவதை தடுக்கிறது. இதனை தொடர்ந்து 20 நாட்கள் சாப்பிட்டு வர உடல் ஆரோக்கியம் மேம்படும்.
கருத்தரிக்க
குழந்தை இல்லாத தம்பதியினருக்கு செவ்வாழை மிகச்சிறந்த மருந்தாகும். இதனை கணவன், மனைவி இருவரும் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வர கருத்தரிக்கும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆன்மைக் குறைவு உள்ளவர்கள் தினம் ஒரு செவ்வாழை பழம் சாப்பிடுவது அவசியமாகும். இதனை 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிடலாம். இது மூளையின் செயல்திறனை அதிகரிக்கின்றது.
கர்ப்பிணி பெண்களுக்கு
செவ்வாழைப்பழம் கர்ப்ப காலத்தில் ஏற்படும் இரத்த சோகைக்கு நல்ல மருந்தாகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து இரத்த சோகை வராமல் பாதுகாக்கிறது. இதனால் தாய் சேய் இருவரும் ஆரோக்கியமுடன் வாழலாம்.
கர்ப்பிணிப் பெண்கள் தினமும் ஒரு செவ்வாழை பழம் சாப்பிட்டு வர காலை எழுந்ததும் ஏற்படும் வாந்தி, மயக்கம் நீங்கி உடல் ஆரோக்கியம் மேம்படும்.
குளுக்கோஸ், பிரக்டோஸ் மற்றும் சுக்ரோஸ் போன்ற எளிய சர்க்கரை கொண்ட செவ்வாழைப்பழம் ஆற்றல் அளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கர்ப்ப காலத்திற்கு முன் அல்லது கர்ப்ப காலத்தில் நீரிழிவு பிரச்சனை உள்ளவர்கள் செவ்வாழைப் பழம் சாப்பிடுவதை தவிர்த்தல் நல்லது.
குழந்தையின் எலும்பு உறுதியாக
வயிற்றில் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கு கால்சியம் மிகவும் அவசியமாகும். இது தாயிடம் இல்லாத நிலையில் தாயின் எலும்புகளிலிருந்து உறிஞ்சப்படுகிறது. எனவே கால்சியம் சத்தை ஈடுசெய்ய செவ்வாழைப்பழம் மிகச்சிறந்ததாகும். இதனை தினமும் ஒரு வாழைப்பழம் என்று கர்ப்பிணி பெண்கள் சாப்பிட்டு வர குழந்தையின் எலும்புகள் நன்கு வலுப்பெறும். இது குழந்தையின் மூளை வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் மிகச் சிறந்ததாகும்.
செவ்வாழைப்பழ சாலட்
தேவையான பொருட்கள்
செவ்வாழைப்பழம் – 2
ஆப்பிள் – 1
மாதுளை – 1
திராட்சை – 1/4 கப்
தேன் – 5 டீஸ்பூன்
செய்முறை
செவ்வாழைப் பழம், ஆப்பிள், மாதுளை, அனைத்தையும் தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும். பின் இதனுடன் திராட்சை மற்றும் தேன் சேர்த்து அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். சுவையான பழம் சாலட் தயார்.
செவ்வாழைப்பழ உருண்டை
தேவையான பொருட்கள்
செவ்வாழை – 2
துருவிய தேங்காய் – கால் கப்
ஏலக்காய் பொடி – கால் டீஸ்பூன்
பொடித்த வெல்லம் – அரை கப்
முந்திரி, திராட்சை, நெய்- தேவையான அளவு
செய்முறை
செவ்வாழைப்பழத்தை தோலுடன் ஆவியில் வேக வைக்கவும். நன்கு வெந்ததும் தோலை நீக்கி மசிக்கவும்.
சிறிதளவு தண்ணீர் சேர்த்து பனை வெல்லத்தை பாகு எடுக்கவும். இதனுடன் துருவிய தேங்காய், நெய், ஏலக்காய் பொடி, முந்திரி, திராட்சை சேர்த்து பூரணமாக செய்யவும்.
பின் வேக வைத்த வாழைப்பழத்தை சிறு உருண்டையாக்கி அதன் நடுவே பூரணத்தை வைத்து மூடி மீண்டும் உருண்டைகளாகப் பிடிக்கவும்.
பின் கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் உருண்டைகளை சேர்த்து பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
சுவையான இனிப்பு உருண்டை தயார்.
எண்ணிலடங்கா நன்மை கொண்ட செவ்வாழைப்பழத்தை வாங்கி உண்போம்..ஆரோக்கியமான வழவு வாழ்வோம்.
ஆயுர்வேதம்.காம்