உடல் வலி தீர்க்கும் பூசணிக்காய்

Spread the love

சாப்பாட்டில் சேர்த்துக் கொள்கிறார்களோ இல்லையோ, அமாவாசை, ஆயுதபூஜை மற்றும் விசேஷ தினங்களில் மற்றும் திருஷ்டி கழிய நம்மவர்கள் பூசணிக்காயை சுற்றி உடைக்காமல் இருக்க மாட்டார்கள்.

பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயர்களும் உள்ளன. பூசணிக்காய் பல்வேறு மருத்துவ குணங்களையும் கொண்டுள்ளது. காய்கறி வகைகளில் ஒன்றான இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும்.  உடல் சூட்டைத் தணிக்கும், சிறுநீர் வியாதிகளை நீக்கும். சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் நீர்விதை பயன்படுத்தப்படுகின்றது. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.  ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் மற்றும் சிறுநீரக நோய்கள் போன்றவற்றை குணப்படுத்த வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.  

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும், ரத்த சுத்தியாகும்.   பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது இரத்தக்கசிவு ஏற்பட்டால் இரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் இரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும். 

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும்(தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்கவேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2, 3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும்.   பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும்.

மருத்துவ குணமிக்க பூசணிக்காயை அடிக்கடி சமையலில் சேர்த்துக் கொள்ள மறக்காதீர்கள்.


Spread the love