நாம் செய்யும் செயல்கள் தான் நமக்கு நன்மையையோ அல்லது தீமையையோ தருகின்றன. நடைமுறை வாழ்க்கையில் நாம் செய்யும் தொழில் என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதை சரியாக செய்தால் நமக்கு நன்மை தரும். நம் பணியை நாம் ஊக்கமுடன் செய்ய வேண்டும். எல்லோரிடமும் சுமுகமாக, இனிமையாக பேச வேண்டும். நட்புடன் பழக வேண்டும். அதே சமயத்தில் நாம் நண்பர்களையும், தீயவர்களையும் இனங்கண்டு கொள்ள வேண்டும். எவரால் நமக்கு நன்மை வரும் என்று அறிவதை விட, எவரால் நமக்கு தீங்கு ஏற்படும் என்பதை அறிவது புத்திசாலித்தனம். நம் மனம் தான் நமக்கு மாபெரும் உதவி செய்கின்றது. நாம் நமக்கு வரும் தீங்குகளை அறிந்து செயல்பட்டால் தீங்கின் விளைவுகளிலிருந்து தப்பிக்கலாம்.
நாம் அன்றாட வாழ்க்கையில் பல மிருகங்கள் பல சிறிய மிருகங்களை உண்டு வாழ்வதை பார்க்கின்றோம். இவற்றிற்கு எல்லாம் காரணம் என்ன? கருணை மிகுந்த கடவுள் ஏன் காப்பற்றவில்லை என்பதற்கு பதில், ஊழ்வினை தான். தான் விதித்த விதிகளை கடவுளே மீறமாட்டார். சில சமயங்களில் ஐந்தாறு சிங்கங்கள் காட்டெருமை குட்டியை தாக்கும் போது, மற்ற பெரிய காட்டெறுமைகள் ஒன்று சேர்ந்து, சிங்கங்களை விரட்டி அடித்து, எருமை குட்டியை காப்பாற்றுகின்றன.
நன்மையும், தீமையும் நமக்கு பிறர் தருவதாக நாம் நினைத்தால் அது நமது தவறு தான். நாம் வீட்டில் அமர்த்தும் வேலையாள் நமது நகை, பணத்தை திருடிச் சென்றால், சரியாக விசாரிக்காமல் அவனை வேலைக்கு வைத்த நாம் தான் தவறு செய்தவர்கள். தங்க ஆபரணங்களுடன் அகால வேலையில் வெளியில் செல்வது, ஒருவராக சென்று வங்கியில் பெருந்தொகைகளை எடுப்பது ஆகியவற்றை எல்லாம் தனியாக செய்யக் கூடாது. அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, பல சீட்டு கம்பெனிகளில் பணத்தை போட்டு ஏமாந்ததைப் பற்றி நமக்கு நன்றாக தெரியும். எனவே நல்லவராக இருங்கள். அதே சமயம் புத்திசாலித்தனம் தேவை. தீங்கு நேரிட்டால் அதை சமாளிக்க உதவும் நண்பர்களை, உறவினர்களை ஏற்படுத்தி அன்பு கொள்ளுங்கள்.
தங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் Dr. S. செந்தில் குமார்