அடுப்பில் வெந்ததை உண்டு பசியாறுவது தான் இதுவரை நமது வழக்கமாக இருக்கிறது. அடுப்பில் வேகாத உணவை உண்டால் எப்படி இருக்கும்?
அடுப்பூட்டாத சமையலுக்கான சில டிப்ஸ்
கார அவல் சாதம்
நன்கு ஊற வைத்த கெட்டி அவலுடன் தேங்காய்ப் பூ, கொத்துமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றை புளிக்கரைசலுடன் கலந்துக் கொள்ளவும்.
சிறிது நேரத்திற்குப் பின் அந்தக் கலவைகள் அனைத்தும் ஒன்றிணைந்து கார அவல் சாதமாக மணமணக்கும்.
ஆனால், எனக்கு தித்திப்பாக வேண்டுமே என்கிறீர்களா, டோண்ட் வொர்ரி, இருக்கவே இருக்கு, இனிப்பு அவல் சாதம். இதற்கு ஊற வைக்காத லேஸ் அவலை எடுத்துக் கொண்டு அதனோடு தேங்காய்பூ, வெல்லப் பாகு, ஏலக்காய்ப் பொடி எல்லாவற்றையும் சேர்த்துக் கலந்து பரிமாறவும். பெரியவர்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
வெள்ளரிக்காய் சாலட்
பிஞ்சு வெள்ளரிக்காயுடன் ஸ்லைசாக வெட்டப்பட்ட குடை மிளகாய், இஞ்சித் துருவல், தேங்காய்ப் பூ, தாளிதம், உப்பு, மிளகுத் தூள், கொத்துமல்லி, கருவேப்பிலை ஆகியவற்றைக் கலந்து கொள்ளவும். ஃபைனல் டச்சாக இந்த வெள்ளரிக்காய் சாலட்டின் மேல் எலுமிச்சை சாற்றைப் பிழிந்து விடவும். இப்போது சாப்பிட்டுப் பாருங்கள். செம டேஸ்ட்டாக இருக்கும்.
இப்போது சம்மர் சீசன் ஆச்சே. வெள்ளரிக்காய் தாராளமாகக் கிடைக்கும்.
காரட் சாலட்
காரட்டை துருவிக் கொள்ளுங்கள். இதனுடன் முளைக்கட்டிய பச்சைப் பயிறை சேர்த்துக் கலக்குங்கள். இந்தக் கலவையுடன் சிறிது இஞ்சித் துருவல், தேங்காய்ப்பூ, எலுமிச்சை சாறு, தாளிதம், உப்பு, மிளகுத்தூள், கொத்துமல்லி, கருவேப்பிலை சேர்த்துப் பரிமாறவும். ருசித்துப் பாருங்கள். வேண்டாம் என்று சொல்லவே மாட்டீர்கள்.
நிலக்கடலை கூழ்
ஊற வைத்த நிலக்கடலை, வாழைப்பழம், சர்க்கரை, ஏலக்காய் இவற்றை மிக்சியில் போட்டு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். புரதச் சத்துமிக்க இந்தக் கூழைக் குடித்தால் நீண்ட நேரம் பசிக்காமல் இருக்கும். உடலும் குளிர்ச்சியாய் இருக்கும். நீண்ட தூரப் பயணம் மேற்கொள்வோருக்கு இது சிறந்த உணவு.
கொத்தமல்லி காபி
சம அளவு மிளகு, சீரகம், கொத்தமல்லி, சிறிய துண்டு சுக்கு மூன்றையும் நன்றாகப் பொடி பண்ணவும். 200 மி.லி. நீரில் ஒரு டீஸ்பூன் பொடி கலந்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். பின்னர் அதனை வடிகட்டி ருசிக்கேற்ப வெல்லம் அல்லது சர்க்கரை சேர்க்கவும். தேவையானால் எலுமிச்சை சாறும் சேர்த்துக் கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் நீங்கள் இந்த காபியைக் குடிக்கலாம். உடனடி உற்சாகத்திற்கு கொத்தமல்லி காபிதான் உத்திரவாதம்.