வழக்குப் பெயர் : முடக்கத்தான்
தாவரப் பெயர் : கார்டியோஸ்பெர்பம் ஹாலிக்காகபூம் (Cardiospermum Halicacabum )
குடும்பப் பெயர் : Sapindaceae ( ஸபிண்டாஸியே)
காணப்படும் இடங்கள் : பரவலாக இந்தியா முழுவதும்.
முடக்கு + அறுத்தான் = முடக்கறுத்தான் என்பதிலிருந்து உருவானது. முடக்கத்தான் கீரையை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம். அதன் பயன்கள் என்ன என்பதை முழுமையாகப் பார்க்கலாம்.
நம் முன்னோர்கள், 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட இக் கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை. மூட்டு வலிக்கு இயற்கையிலே மிகச்சிறந்த மருந்தாக உள்ளது. மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரையை பயன்படுத்தினால் நிச்சயம், எந்த ஒரு பக்கவிளைவுகளும் இன்றி மூட்டுவலி குணமாகும்.
நரம்பு தளர்ச்சி, முடக்குவாதம் போக்க சிறந்த மருந்து!
முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய கீரை வகையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில் அதிகமாக படர்ந்து வளரும் படர் கொடி வகையைச் சேர்ந்தது. இதை மாதம் இரு முறையாவது, உணவில் சேர்த்துக் கொண்டால், மூட்டு வலியிலிருந்து விடுதலை பெறலாம்.
முடக்கத்தான் கீரையை சமைத்து சாப்பிட்டால், கீல் பிடிப்பு, கீல் வாதம், கால்களை நீட்டி, மடக்க முடியாமல் இருப்பது, நடக்க முடியாமல் இருப்பது போன்றவை குணமாகும்.
கை, கால்கள் முடங்கிப் போய்விடாமல், இந்தக் கீரை தடுப்பதால், இதற்கு முடக்கு அற்றான் என்றக் காரணப் பெயர் வந்தது. அது மருவி முடக்கத்தான் என்று இப்பொழுது அழைக்கப்படுகிறது.
இந்த கீரையில் தோசை செய்வதுதான் வழக்கம். துவையலும் செய்யலாம். பச்சைக் கீரை சிறிது கசக்கும். ஆனால் சமைத்தப்பின் அவ்வளவாகத் தெரியாது.
முடக்கத்தான் கீரை தோசை
இரண்டு கப் புழுங்கல் அரிசியை ஊறவைத்து, அத்துடன் இரண்டு கைப்பிடி கீரையையும், சிறிது உப்புடன் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்து, தோசைப் போல் செய்து சாப்பிடலாம். இது சற்று மருந்து வாசனையுடன் இருக்கும்.
இரண்டு கைப்பிடி கீரையை, மிக்ஸியில் போட்டு மை போல் அரைத்தெடுத்து, சாதாரணத் தோசைமாவுடன் (ஒரு பெரிய கிண்ணம் அளவு) கலந்து, தோசை செய்தால், கசப்பு சிறிதும் தெரியாது. காரமான சட்னியுடன் சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.
இந்தியாவில், 65 சதவிகித மக்கள் மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில், 85 சதவிகிதம் பெண்கள். பல முறைகளில், இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை.
முடக்கத்தான் கீரையின் சிறப்பு:
முடக்கத்தான் கீரையை எண்ணை இட்டு காய்ச்சி மூட்டு வலிக்கு பூசினால் மூட்டு வலி விரைவில் குணமாகும்.
முடக்கத்தான் இலைகளை நெய்யில் வதக்கி, இஞ்சி, கொத்தமல்லி, உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து சட்னி அல்லது துவையல் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் மூட்டு சம்மந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.
முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ், ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை, இந்திய ஆராய்ச்சியாளகளும், ஆஸ்திரேலிய பல்கலை ஆராய்ச்சியாளர்களும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர். இதன் சிறப்புக் குணம், நமது மூட்டுகளில் யூரிக் ஆசிட் எங்கிருந்தாலும் அதைக் கரைத்து, சிறுநீரகத்தில் சேர்த்துவிடும்.
சிறுநீர் கழிக்கவேண்டும் என்று சிறுநீரகம் எச்சரித்தவுடன் அதை உடனடியாக செய்யாமல், நாம் அடக்கி வைத்திருப்பது ஆபத்தான ஒன்று என்பதை நாம் அறிவதில்லை. நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைத்தால் அது உடலின் பிற பகுதிகளுக்கு சென்று விடுகிறது. அவ்வாறு செல்லும்போது, ரத்தத்தில் உள்ள யூரிக் அமிலமானது கிரிஸ்டல்ஸ் மூட்டுகளில் படிகிறது. சிறுகச் சிறுக இது சிறு, சிறு கற்களாக உருவெடுத்து, சினோரியல் மெம்கிரேம் என்ற இடத்தில் தங்கிவிடுகிறது. இது பல வருடங்களாக தொடரும் பொழுது சிறுநீரகக் கற்களாகி, சிறுநீரகத்திற்கே ஆபத்தாகிறது.
சிலருக்கு, 35 வயதுக்கு மேல், காலையில், படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலியாயிருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின் ஆரம்ப நிலை.
அதற்கு இந்த முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசையாக செய்து சாப்பிடலாம். கீரையை கொதிக்க வைத்து சாப்பிட கூடாது. கொதிக்க வைத்தால் அதன் உள்ள மருத்துவ சத்துக்கள் அழிந்து விடும்.
முடக்கத்தான் கீரை சூப் செய்யும் முறை:
முடக்கத்தான் கீரையை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் அலசி ஒரு தடவை அரிந்து ஒரு கோப்பை நீரில் கொதிக்கவைத்து முக்கால் கோப்பை நீராக்கி, அதில் சிறிது உப்பு, மிளகு பொடி போட்டால் சூப் ரெடி. காபி, டீக்கு பதிலாக இந்த சூப்பைக் குடிக்கலாம். இதை தொடர்ந்து காபி, டீக்குப் பதிலாக சாப்பிட்டு வந்தால், முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை நெருங்காது.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டி முடக்கத்தான் கீரையிலுள்ள “தாலைட்ஸ்” ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்பு குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு அனுப்பிவிடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான நம் உடலில் சக்தியை ஏற்படுத்தும். இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு சக்தியும் கிடைக்கிறது.
முடக்கத்தான் துவையல் :
தேவையான பொருள்கள்
முடக்கத்தான் கீரை – ஒரு கட்டு
புளி – சிறிது
உப்பு – தேவையான அளவு
வெல்லத் துருவல் – 3 தேக்கரண்டி
எண்ணெய் – 2 தேக்கரண்டி
பூண்டு – 10 பல்
காய்ந்த மிளகாய் 5
இஞ்சி – சிறு துண்டு
சீரகம்- அரைதேக்கரண்டி மிளகு – அரை தேக்கரண்டி நல்லெண்ணெய் – 4 தேக்கரண்டி
கடுகு, உளுந்து – ஒரு தேக்கரண்டி பெருங்காயப்பொடி – சிறிது
செய்முறை
வாணலியில் எண்ணெய் ஊற்றி பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, சீரகம், மிளகு சேர்த்து நன்கு வதக்கவும். அதனுடன் சுத்தம் செய்துள்ள முடக்கத்தான் கீரையையும் சேர்த்து நன்கு வதங்கியதும் சிறிதளவு புளி, தேவைக்கேற்ப உப்பு சேர்த்து ஆற வைக்கவும். ஆறியதும் வெல்லத் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
வாணலியில் சிறிது நல்லெண்ணை சேர்த்து கடுகு, உளுந்து தாளித்து அரைத்த விழுதுடன் பெருங்காயப் பொடி சேர்த்து கிளறவும். தேவைப்பட்டால் இடையிடையே எண்ணெய் சேர்க்கவும். எண்ணை பிரியும் வரை நன்கு கிளறி இறக்கினால் சத்தான முடக்கத்தான் கீரை துவையல் தயார்.
முடக்கத்தான் இட்லி
தேவையான பொருள்கள்
புழுங்கலரிசி – 400 கிராம்
தோலுள்ள உளுந்து – 100 கிராம்
ஆய்ந்த முடக்கத்தான் இலை – 8 கைப்பிடி
உப்பு தேவைக்கு
செய்முறை
புழுங்கலரிசி, தோல் உளுந்து இரண்டையும் தனித்தனியாக மூன்று மணி நேரம் ஊறவைக்கவும். பிறகு நன்றாக கழுவி அரிசி, உளுந்து, முடக்கத்தான் இலை அனைத்தையும் சேர்த்து அரைத்து உப்பு சேர்த்து கரைக்கவும். புளித்ததும் இட்லிகளாக வார்த்தெடுத்து சாம்பார், சட்னி, பொடியுடன் சூடாக பரிமாறவும்.
முடக்கத்தான் பொடி :
முடக்கத்தான் கீரை ஒரு கட்டு, நன்றாக சுத்தம் செய்து இலைகளை மட்டும் ஆய்ந்து நிழலில் உலர்த்தவும்.
ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இரண்டு டேபிள் ஸ்பூன் முழு உளுந்து, புளி, ஏழெட்டு வற்றல் மிளகாயை எண்ணெய் விடாமல் வெறும் வாணலியில் தனித் தனியாக பொன்னிறத்துக்கு வறுத்து ஆறவைத்து ஒரு தேக்கரண்டி கல் உப்பு சேர்த்து மிக்சியில் பொடியாக்கிக் கொள்ளவும். தேவைப்பட்டால் உலர்ந்த கருவேப்பிலை சேர்த்துக் கொள்ளலாம்.
தினமும் உணவுக்கு முன் ஒரு கைப்பிடி சுடு சாதத்தில் ஒரு டீஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, பொடியை கலந்து சாப்பிடலாம். இந்தப் பொடியில் எண்ணை சேர்க்கப்படாததால், இரண்டு வாரம் வரை உபயோகப்படுத்தலாம்.
முதுகு, தண்டுவடம் தேய்ந்ததால் அல்லது வலி, தோள்பட்டை/கழுத்து எலும்புகளில் வலி, மெனோபாஸ்சிற்கு பிறகு பெண்களுக்கு ஏற்படும் bone density குறைபாடுகள், மற்றும் மூட்டு எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்களால் உண்டாகும் உடல் உபாதைகள் குறையும். முதல் ஒன்று இரண்டு நாட்களுக்கு சிலருக்கு பேதி ஆகலாம். அதனால் ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது.
முடக்கத்தான் சூப்
தேவையான பொருட்கள்
முடகத்தான் கீரை – 100 கிராம்
சீரகம் – 1 தேக்கரண்டி
மிளகு – 1 தேக்கரண்டி
தக்காளி 1
பூண்டு – 5 பற்கள்
சாம்பார் வெங்காயம் – 5
கறிவேப்பிலை – சிறிதளவு
கொத்தமல்லி – சிறிதளவு
உப்பு தேவையான அளவு
செய்முறை:
முடக்கத்தானை அலசி சுத்தம் செய்து அதன் காம்புடன் சேர்த்து நறுக்கி வைத்துக் கொள்ளவும். கீரையில் தண்ணீர் ஊற்றி, சீரகம், மிளகு, வெங்காயம், தக்காளி, பூண்டு இவைகளைச் சேர்த்து வேக வைத்து நன்கு கொதித்த பின் இறக்கி வடிகட்டி, அதனுடன் நறுக்கிய கறிவேப்பிலை, கொத்தமல்லி இலைகளை சேர்த்து பரிமாறவும்.
மூட்டு வலிக்கு காரணங்களாக கருதப்படுவது மூட்டுகளில் தங்கும் யூரிக் அமிலம், புரதம், கொழுப்புத் திரட்சி, சுண்ணாம்பு, பாஸ்பரஸ் படிவங்கள் தான். இவைகளை கரைத்து வெளியேற்றும் சக்தி முடக்கத்தான் கீரைக்கு உண்டு. முடக்கத்தான் சூப் வாரம் ஒருமுறை பருகி வந்தால் முடக்கு வாதம், நரம்பு தளர்ச்சி போன்ற வியாதிகள் நம்மை அண்டாது என்பது நிதர்சனமான உண்மை.