செம்பருத்தி இலைகள், மலர்கள் இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டவை என்று நமக்கு தெரியும். செம்பருத்தி உடல் வெப்பத்தைக் கட்டுப் படுத்தும். செம்பருத்தி மலமிளக்கும், வறட்சியை அகற்றும், உள்ளுறுப்புகளின் புண்களை ஆற்றும், காமத்தை பெருகும், மாதவிடாயைத் தூண்டுகிறது.
செம்பருத்தி முடியை வளர வைக்கிறது, நரைமுடிப் பிரச்சனைகளைக் குணமாக்குகிறது. பல பதிவுரிமை செய்யப்பட்ட மருந்துகளில் செம்பருத்தி முக்கிய பங்கு வகிக்கின்றது. செம்பருத்தி புதர் செடி வகையைச் சேர்ந்த தாவரம் ஆகும்.
செம்பருத்தி சிவப்பு நிறமான பெரிய மலர்களுடன் காணப்படும். தமிழகமெங்கும் வீட்டுத் தோட்டங்களில் பெரும்பாலும் அழகுச் செடியாகவும், இதனுடைய அலங்காரமான மலர்களுக்காகவும் வளர்க்கப்படுகின்றது.
செம்பருத்திச் செடியின் மலர்களிலிருந்து காலணிகளை மெருகேற்றப் பயன்படும் ஒரு வித சாயம் பெறப்படுகின்றது. இதனால் ஆங்கிலத்தில் செம்பருத்திப் பூவை ஷு ஃப்ளவர் என்கிற பெயரால் அழைக்கின்றனர்.
செம்பரத்தை, தாசானிப் பூ, ஜப புஷ்பம் ஆகிய முக்கியமான வேறு பெயர்கள் உண்டு. ஒற்றை அடுக்கில் 5 இதழ்களைக் கொண்ட சிவப்பான பூக்கள் கொண்ட செடியே மருத்துவத்தில் உபயோகிக்கத் தகுந்தது.
கொத்தான அடுக்கில் பல இதழ்களைக் கொண்ட அடுக்கு செம்பருத்தி அழகிற்கு மட்டுமே பயன்படுகிறது. செம்பருத்தி செடியின் முழுத் தாவரமும் மருத்துவப் பயன் கொண்டதாகும். முக்கியமாகப் பூக்களும் இலைகளும் அதிக அளவில் உபயோகமாகின்றன.
செம்பருத்தி பூவின் சாற்றுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து வாணலியில் இட்டு காய்ச்சி, வடி கட்டி, கண்ணாடி பாட்டில்களில் பத்திரப்படுத்த வேண்டும். இந்த எண்ணெயை தினமும் காலையில் தலையில் தடவி வர தலை முடி கருத்து அடர்த்தியாக வளர தொடங்கும்.
சிறுநீர் எரிச்சல் குணமாக 4 செம்பருத்தி இலைகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி, வடிகட்டி வைத்துக் கொண்டு கற்கண்டு சேர்த்து கலக்கி குடிக்க வேண்டும். அல்லது 4 செம்பருத்தி பூ மொட்டுகளை 2 டம்ளர் நீர் விட்டு காய்ச்சி வடிகட்டி மேலே குறிப்பிட்ட முறையில் குடிக்க வேண்டும்.
மாதவிடாய் சரியாக வருவதற்கு நான்கு புதிய செம்பருத்தி பூக்களை அரைத்து, பசையாக அரைத்து கொள்ள வேண்டும். வெறும் வயிற்றில் காலை நேரத்தில் இந்தப் பசையை உட் கொள்ள வேண்டும். 7 நாட்களுக்கு இவ்வாறு செய்ய வேண்டும். அல்லது செம்பருத்தி பூக்களை நிழலில் உலர்த்தி தூள் செய்து கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி அளவு தூளை காலையிலும், மாலையிலும் 7 நாள்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.
செம்பருத்தி பூ இதழ்கள் 15, ஆடாதோடை தளிர் இலைகள் 3 இரண்டையும் நசுக்கி 2 டம்ளர் நீரில் இட்டு கொதிக்க வைத்து வடிகட்டி ½ தேக்கரண்டி அளவு தேன் கலந்து தொடர்ந்து குடித்து வர வேண்டும். தினமும் காலை மாலை வேளைகளில் 3 நாட்களுக்கு குடித்து வந்தால் இருமல் தீரும்.
செம்பருத்தி பூக்களை அரைத்து தலையில் தடவி ஊற வைத்துக் குளிக்க தலைப் பேன்கள் குறைய தொடங்கும். 10 செம்பருத்திப் பூ இதழ்களை நீரில் போட்டு காய்ச்சி குடித்து வந்தால் சிறு நீர் கழிக்கும் போது ஏற்படும் எரிச்சல் குணமாகும்.
செம்பருத்திப் பூவில் குறிப்பிடத்தக்க அளவு தங்கச் சத்து உள்ளதாக மருத்துவ நூல்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது. தலைமுடி கறுப்பாகவும், நீண்டு வளர காலம் காலமாக செம்பருத்தி இலைகள் தான் உபயோகப்படுத்துகின்றோம்.
செம்பருத்தி பூ இதய நோய் அணுகாமல் தடுக்கும் அற்புதமான டானிக். செம்பருத்தி பூவைப் பசுமையாகவோ, காய வைத்து பொடி செய்தோ வைத்துக் கொண்டு, பாலில் கலந்து காலை, மாலை என இரு வேளையும் குடித்து வந்தால் இதய உறுதியாக இருக்கும்.
செம்பருத்தி பூத்தூளுடன் சம அளவு மருதம் பட்டைத் தூளை கலந்து 1 தேக்கரண்டி அளவு காலை, மாலை சாப்பிட, இரத்தத்தில் இரும்புச் சத்து அதிகரித்து இரத்த சோகை குறைய தொடங்கும்.