குறைந்த தாமிரம் அதிக பயன்

Spread the love

மிகக் குறைந்த அளவில் தேவைப்படும் தாதுஉப்புக்களுள் ஒன்று தாமிரம். ஆனால், ரத்தச் சிவப்பணு உற்பத்தி முதல் சீரான இதயத் துடிப்பு வரை இதன் பயன் மிகப்பெரியது. பெரியவர்களுக்கு, ஒரு நாளைக்கு 900 மைக்ரோ கிராம் என்ற அளவில் தாமிரம் தேவை. மரபியல் குறைபாடு, அதிக அளவில் துத்தநாகம் உள்ள உணவை உண்பது, வைட்டமின் சி சப்ளிமென்ட் எடுத்துக்கொள்வது போன்ற காரணங்களால் தாமிர தாதுஉப்புக் குறைபாடு ஏற்படலாம்.

விலங்குகளின் கல்லீரல், இறைச்சி, கடல் உணவு, முழுதானியங்கள், சோயா, பாதாம், அவகேடோ, பார்லி, பூண்டு உள்ளிட்டவற்றில் இருந்து தாமிரம் கிடைக்கிறது.

தாமிரம் ஒரு மிகச்சிறந்த ஆன்டிஆக்ஸிடன்ட். இது ஃப்ரீராடிக்கல்ஸ் பாதிப்பில் இருந்து சருமத்தைக் காக்கிறது. கொலாஜன் உற்பத்திக்கு உதவுவதன் மூலம் கருவளையம், சுருக்கம் போன்றவற்றைத் தவிர்க்க உதவுகிறது.

சிறுகுடலில் இருந்து இரும்புச்சத்தை கிரகிக்கவும், அதன் மூலம்  ரத்தச்சிவப்பணு உற்பத்திக்கும் உதவுகிறது. இதனால்தான் ரத்தச் சோகை ஏற்பட்டவர்களுக்குத் தாமிர அளவுப் பரிசோதனையும் மேற்கொள்ளப் படுகிறது.

உடல் திசுக்களின் குளூக்கோஸ் பயன்பாட்டைத் தூண்டுகிறது. ரத்த வெள்ளை அணுக்களின் உற்பத்திக்கு உதவுவதன் மூலம், நோய் எதிர்ப்புச் சக்தியை மேம்படுத்துகிறது. ஆஸ்டியோபொரோசிஸ் வாய்ப்பைத் தடுக்கிறது. கெட்ட கொழுப்பு படிவதைத் தடுக்கிறது.

மூளையைத் தூண்டுகிறது: மூளையை ஆரோக்கிய மாகவும் துடிப்புடனும் வைத்திருக்க உதவுகிறது. புரிந்துகொள்ளும் திறன் அதிகரிக்க உதவுகிறது. கர்ப்பிணிகள் போதுமான அளவு தாமிரச்சத்து எடுத்துக்கொள்வதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

தாமிரம் அதிகஅளவு இருந்தாலும் சரி, போதுமான அளவில் இல்லை என்றாலும் சரி… மூளை செல்கள் பாதிக்கப்படும். அதிக அளவில் தாமிரம் கிடைத்தால், வில்சன்ஸ் என்ற நோய் ஏற்படும். அதாவது, கல்லீரல், மூளை மற்றும் முக்கிய உறுப்புக்களில் தாமிரம் படியும். மூளையில் அளவுக்கு அதிகமாகத் தாமிரம் பபடிவதால்கூட அல்ஸைமர் ஏற்படலாம்.


Spread the love
error: Content is protected !!