மூலிகையின் பெயர் கட்டுக்கொடி
பயன்தரும் பாகங்கள் இலை மற்றும் வேர்
வளரியல்பு
கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். இது முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் 45 அடி நீளம் வரை படர்ந்து வளரக்கூடியது. இது தமிழகத்தில் அனைத்துப்பகுதிகளிலும் வளர்கிறது. இதன் தாயகம் வட அமரிக்கா, ஆசியா, மற்றும் ஆப்பிரிக்கா ஆகும். இலைச் சாற்றை நீரில் கலந்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதில் சிறு கட்டுக்கொடி, பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். பூத்துக் காய்காய்க்கும். தன் மகரந்தச் சேர்க்கையால் பழம் விடும். பழம் நீல நிறமாக 4 எம்.எம். உருண்டையானது. மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும். இதன் கொடியானது கூடைகள் செய்ய பயன்படுகிறது.
மருத்துவப் பயன்கள்
கட்டுக்கொடியானது குளிர்ச்சியூட்டியாகவும், உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயல்படுகிறது. இதன் இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும். இதன் இலையை சமைத்து சாப்பிடுவதன் மூலம் மாலைக்கண் நோய் வராமல் பாதுகாக்கலாம்.
கட்டுக்கொடியின் இலையை பாக்களவு மென்று சாப்பிட்டு வர இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.
இதன் இலை மற்றும் வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்து காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்க்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.
இலையுடன் மாம்பருப்பு சம அளவு அரைத்து பால், சர்க்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.
சிறுதளவு கட்டுக்கொடி வேருடன், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகு சேர்த்து காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.
இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.
கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.
மேலும் தெரிந்து கொள்ள…