வெயிலை சமாளிக்க வழிகள்..

Spread the love

தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் கொளுத்திக் கொண்டிருக்கிறது. வெயில் மாவட்டமான வேலூர் மற்றும் திருவண்ணாமலை, கரூர் என பல மாவட்டங்களில் வெயில் செஞ்சுரியை தாண்டி தகித்துக் கொண்டிருக்கிறது. வெயில் காலத்தில் வெளியில் சென்றால் தலைசுற்றல், மயக்கம், வாந்தி, வயிற்று வலி போன்ற சன் ஸ்ட்ரோக் பாதிப்புகள் ஏற்படும். மூத்த குடிமக்கள் பெரிதும் திண்டாடிப் போவார்கள்.

உடலில் நீர்ச்சத்து குறைவதால் சோர்வு, தலைவலி, உடல்வலி, காய்ச்சல் போன்றவை ஏற்படும். வைரஸ் பாதிப்பால் அம்மை, தொண்டை வலி, சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்றவையும் கோடையில் தாக்குகிறது.

டைபாய்டு, மஞ்சள் காமாலை போன்ற நோய்களும் ஏற்படுகிறது. இந்த கோடை நோய்கள் வராமல் தடுக்க சில வழிமுறைகளை பின்பற்றினால் போதும்.

ஏசி அறையில் இருந்தவர்கள் உடனடியாக வெயிலில் வெளியே செல்லக் கூடாது. சிறிது நேரம் நிழலில் இருந்து விட்டு பின் செல்ல வேண்டும்.

வெயில் காலத்தில் தண்ணீர் மூலம் நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால், வெளியிடங்களில் தண்ணீர் அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால் வயிற்றில் பாதிப்பு ஏற்படும்.

அதேபோல் கரும்புச்சாறு குடிப்பதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் விற்கும் பலர் அதன் தோல் பகுதியை முழுவதுமாக நீக்குவதில்லை. அதில் உள்ள அழுக்குகள் மற்றும் பூஞ்சைகள் கரும்பு ஜூஸில் கலக்கும் அபாயம் உள்ளது. இதனால் வயிற்றுபோக்கு, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படலாம். தெருவோர கடைகளில் வெட்டி வைத்து விற்கப்படும் பழங்களை வாங்கி சாப்பிடுவது, கண்ட இடங்களில் தண்ணீர் குடிப்பது போன்றவற்றை தவிர்க்க வேண்டும். வீட்டில் தண்ணீரை சுட வைத்து குடிக்க வேண்டும்.

தண்ணீர், திரவ உணவுகளை அதிகளவில் சாப்பிட வேண்டும். தர்பூசணி, பப்பாளி பழம், மாம்பழம், வாழைப்பழம் போன்றவற்றை சாப்பிடலாம். கோடையில் மாம்பழம் சிறந்தது என்றாலும், அதிகம் சாப்பிடக் கூடாது. வியர்வை மூலம் உடலில் உள்ள தாதுக்கள் வெளியேறும் என்பதால், அதை ஈடுகட்ட எலுமிச்சை ஜூஸ் குடிக்கலாம்.

கடைகளில் விற்கப்படும் ஐஸ்கட்டிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது. அதன்மூலம் காலரா, மஞ்சள் காமாலை போன்றவை ஏற்படுகிறது. கோடையில் உணவு சீக்கிரம் கெட்டுவிடும் என்பதால், தயாரித்தவுடன் சாப்பிட வேண்டும். தாமதமாக பிரிட்ஜில் வைக்கப்படும் உணவு நஞ்சாக மாறும் வாய்ப்பு உள்ளது. கோடையில் மலச்சிக்கல் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், நார்சத்துள்ள உணவுகளை அதிகம் சாப்பிட வேண்டும். ஆடை விஷயத்திலும் கவனம் தேவை. மெல்லிய நிறத்தினாலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது. ஒரு நாளைக்கு இரண்டு முறையாவது குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டும்.

மெத்தை, சோபாக்களில் படுப்பதை தவிர்த்து, கோரைப் பாய்களில் படுக்க வேண்டும். கோடையில் கொசுக்கள் மூலமும் பரவும் மலேரியா, டெங்கு போன்ற நோய்கள் தாக்க வாய்ப்புள்ளது. ஏர்கூலர் பயன்படுத்துபவர்கள், அதில் பயன்படுத்தும் தண்ணீரை தினமும் மாற்ற வேண்டும். இல்லையென்றால் அந்த தண்ணீர் மூலம் கொசுக்கள் பெருகும்.

பொதுவாக வெயில் காலங்களில் பசி எடுக்காது. அதற்காக பட்டினி கிடந்தால் உடல் பலவீனமாகிவிடும். மனதுக்குப் பிடித்த உணவுக்கு பதிலாக, உடலுக்குத் தேவைப்படும் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பருவகாலங்களுக்கு ஏற்ப கிடைக்கும் உணவுகள் மற்றும் பழங்கள் மருந்தாகவும் செயல்படும். கோடையில் இயற்கை உணவுகள் இதமளிக்கும். தர்பூசணி கோடையின் வரப்பிரசாதம்.

80 சதவீத தண்ணீர் சத்து உள்ள தர்பூசணி, உடலில் தண்ணீரின் அளவை சமன்படுத்தி புத்துணர்வை அளிக்கிறது. கிர்ணிப்பழமும் கோடைக்கு ஏற்றது.

பச்சைக்காய்கறிகளை சாலட்டாக எடுத்துக்கொள்வது ஆரோக்கியத்தை அதிகரிக்கும். அவற்றில் உள்ள சத்து சூரிய வெப்பத்தால் தோல் பாதிக்கப்படுவதை தடுக்கிறது. பசியையும் கட்டுப்படுத்துகிறது.

கோடை காலத்தில் சமையலில் பூண்டு அவசியம் இடம் பெற வேண்டும். இதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்ஸ் ரத்தத்தை சுத்திகரித்து செரிமானத்தை சீராக்கும். வயிற்று உப்பிசம், மலச்சிக்கல் குணமாகும்.

கீரையை அதிக அளவில் சேர்க்க வேண்டும். வெள்ளரி, இளநீர், மோர், நுங்கு உடலுக்கு குளுமையை தரும்.

அவசியம் வெளியில் சென்றே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் இருப்பவர்கள், வெயில் ஏறுமுன் வெளியில் செல்லுங்கள். அல்லது வெயில் இறங்கிய பின்பு வெளியில் செல்லுங்கள். காலையில் 11 மணிக்கு முன்போ அல்லது மாலை 3 மணிக்கு பிறகோ வெளியில் சென்று உங்கள் வேலையை முடித்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக குடை இல்லாமல் வெளியில் செல்லாதீர்கள்.


Spread the love