வில்வம்
இறைவனுக்கு உகந்த மூலிகை வில்வமாகும். உடல் தாதுகளை ஊக்குவிக்கிறது. உடலுக்கு வலிமையையும், வனப்பையும் தருகிறது. தாது நஷ்டத்தைப் போக்கி, உடலுக்கு புஷ்டி தரும்.
வில்வ சூப்
தேவை
- வில்வ இலை – 1 கப்
- (அ) பொடி – 3 டீஸ்பூன்
- தக்காளி – 1
- வெங்காயம் – 1
- கொத்தமல்லி – சிறிது
- இஞ்சி, பூண்டு – சிறிது
- மிளகுத்தூள், சீரகத்தூள் – 1 டீஸ்பூன்
- கம்பு மாவு – 2 டீஸ்பூன்
- எலுமிச்சைச்சாறு – 1/2 டீஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு முதலியவற்றை நறுக்கிக் கொள்ளவும். வில்வ இலையுடன் தண்ணீர் கலந்து வேக வைத்து கொள்ளவும். கம்பு மாவை தண்ணீரில் கரைத்து கலக்கவும். கொதி நிலையில் பிற வெட்டிய காய்கறிகள், கலந்து கொதித்த பின்பு மசித்து சூடு ஆறுமுன்பு வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், எலுமிச்சைச் சாறு சேர்த்துப் பரிமாறவும்.
ஆவாரம் பூ
அழகை வர்ணிக்க ‘ஆவாரம் பூவே’ என்கிறோம். ஆவாரம் பூ பொன் நிறத்தில் பூக்கும் அழகான பூ. உடலுக்கு வீரியமளிக்கும் தங்கபஸ்பத்திற்கு இணையாக கூறப்படுகிறது. இதை தினமும் உண்டு வந்தால், மேனி மிளிரும் உடல் உரமடையும்.
ஆவாரம் பூ சூப்
தேவை
- ஈர ஆவாரம்பூ – 1 கப்
- (அ) உலர்ந்த பொடி – 2 டீஸ்பூன்
- தண்ணீர் – 250 மி.லி
- கேரட் – 1
- பீன்ஸ் – 5
- தக்காளி – 1
- வெங்காயம் – சிறிது
- இஞ்சி – சிறிது
- பூண்டு – 2 பல்
- கொத்தமல்லி, புதினா – சிறிது
- மிளகுத்தூள், சீரகத்தூள், உப்பு தேவைக்கு
செய்முறை
கேரட், பீன்ஸ், தக்காளி, வெங்காயம், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினா முதலியவற்றை பொடியாக நறுக்கவும். தண்ணீரில் பூவைக்கலக்கவும். பிற காய்கறி கீரைகளைக் கழுவி நறுக்கி தண்ணீரில் கலந்து வேக வைக்கவும். நல்ல மணம் வரும் போது மசித்து அடுப்பை நிறுத்தி சூடு ஆறும் முன் வடிகட்டி உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள் சேர்த்து பரிமாறவும்.
முடக்கற்றான்
இதன் பெயருக்கேற்ப முடக்குவாத நோய்களை தீர்க்க வல்லது. சிறுநீரை பெருக்கும். மூட்டு சம்பந்தப்பட்ட பாதிப்புகளை நீக்கும். பசியை தூண்டும். உடலை உரமாக்கும் குணம் கொண்டது.
முடக்கற்றான் சூப்
தேவை
- முடக்கத்தான் கீரை 1 கப்
- துவரம் பருப்பு – 2 டீஸ்பூன்
- மிளகு – 1 டீஸ்பூன்
- சீரகம் – 2 டீஸ்பூன்
- எண்ணெய் – 1 டீஸ்பூன்
- கடுகு – 1 டீஸ்பூன்
- மிளகாய் வற்றல் – 3
- புளி -எலுமிச்சை அளவு
- பெருங்காயம் – சிறிதளவு
- பூண்டு – 1
- உப்பு – தேவையான அளவு
செய்முறை
கீரையை நன்கு கழுவி, ஆய்ந்து தேவையான தண்ணீர் ஊற்றி நன்றாக வேக வைக்கவும். துவரம் பருப்பு, மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், பூண்டு ஆகியவற்றை நன்கு அரைத்து வைத்துக் கொள்ளவும். நான்கு டம்ளர் தண்ணீரில் உப்பு, புளியைக் கரைத்து கீரையில் விடவும். அரைத்து வைத்த விழுதையும் கீரையில் போட்டு நன்கு கொதிக்க வைக்கவும். பின்பு இதனை இறக்கி வைத்து கடுகு பெருங்காயம் ஆகியவற்றை தாளித்துச் சேர்க்கவும். சூடாகப் பரிமாறவும்.