ஆரோக்கியமான, சத்துக்கள் நிறைந்த உணவு உடலுக்கு நன்மை தரும் என்பது அனைவரும் அறிந்தது. ஆனால் சிலருக்கு ஆரோக்கிய உணவே பொருந்தாமல், உணவு இணக்கமின்மை ஏற்படும். இணக்கமில்லாத உணவு கலவைகள் உடலில் நச்சுப் பொருட்களை தேக்கி விடும்.
உணவு பொருந்தாமை (இணக்கமில்லாதவை)
உடல் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்காமல், நன்மை பயக்கும் உணவுகள் உடலுக்கு இணக்கமில்லாமல் போதல் அபூர்வம். சிலருக்கு இந்த பொறுக்கமுடியாத நிலை ஏற்பட்டுவிடுகிறது. எதிர் மறையான பக்க விளைவுகள் தோன்றுகின்றன. இவை தலைவலி, ஒற்றை தலைவலி, உப்புசம், வயிற்றுக் கோளாறுகள், களைப்பு, எடை அதிகமாதல் போன்ற பல அறிகுறிகள் தோன்றுகின்றன.
இந்த மாதிரி உணவு இணக்கமின்மையால் ஏற்படும் பிரச்சனைகள் முதலில் அவ்வளவு தெரியாவிட்டாலும், போகப் போக, நாட்பட்ட தீராத வியாதியாகி விடும். இது தான் உணவு இணக்கமின்மை என்பதற்கும் உணவு ஒவ்வாமை என்பதற்கும் உள்ள வித்தியாசம். உணவு ஒவ்வாமையின் அறிகுறிகள் உடனே தென்பட்டு விடும். தவிர உணவு ஒவ்வாமை அபாயமானது. உடனே கவனிக்காவிட்டால் உயிருக்கு ஆபத்து நேரிடலாம்.
உணவை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையின் அறிகுறிகள்
அதீத வயிறு உப்புசம்
இனந் தெரியாத வியாதிகள் – வயிற்றெரிச்சல்
மலச்சிக்கல்
நுண்ணியிர்களால் வரும் தொற்றுக்கள்
கீழ்வயிறு, முதுகு வலிகள்
இடைவிடாத தலைவலி
சரும வியாதிகள்
வயிற்றில் அமிலம் அதிகம் சுரத்தல்
ஒரே உணவை அபரிமிதமாக உண்ணுதல்
தொடர்ச்சியாக ஒரே உணவை சார்ந்து அதையே உண்பது, அந்த உணவை பொறுக்க முடியாமல் போகலாம். இதை கவனித்து, நீங்கள் அதிகமாக சேர்த்துக் கொள்ளும் உணவை கண்டுபிடியுங்கள்.
கீழ்க்கண்ட உணவுகள் பாக்டீரியாவை தோற்றுவிக்கும்
சர்க்கரை (கேக், பிஸ்கட், சாக்லேட்) தேன், சில பழங்கள், சோடா பானங்கள் தவிர ஈஸ்ட் (ரொட்டி, பன், சீஸ், ஆல்கஹால் மற்றும் காளான்).
பாக்டீரியா தாக்கினால் தெரியும் அறிகுறிகள்
தொற்றுநோய் (ஃபங்கஸ்ஸால் வரும்), அடிவயிறு உப்புசம், களைப்பு, மூளை சுணக்கம் போன்றவை.
அமிலத்தை அதிகரிக்கும் உணவுகள்
பழங்கள், சர்க்கரை, ஈஸ்ட், சீஸ், காஃபி, ஆல்கஹால் போன்றவை. அமிலம் ஏறுமாறனால் தெரியும் அறிகுறிகள் – வயிற்றுப்புண்கள், வயிற்றெரிச்சல், அமிலம் மேலேருதல், தலைவலி, சிறுநீர்ப்பையில் எரிச்சல், களைப்பு.
இணக்கமில்லாத உணர்வை உண்டாக்கும் உணவுகள்
தானியங்கள், பால் சார்ந்த உணவுகள், சாத்துக்குடி, ஆரஞ்ச் போன்ற‘சிட்ரஸ்‘ பழங்கள், தக்காளி, கடற் உணவுகள், சர்க்கரை, பக்குவப்படுத்தப்பட்ட உணவுகள். இந்த பிரச்சனைகளின் அறிகுறிகள் – ஒற்றை தலைவலி, திடீர் தலைவலி, உண்ட பின் களைப்பு, உப்புசம், அடிவயிறு வலி, தோலில் சொறி, போன்றவை.
உடலால் ஏற்று கொள்ள முடியாமல் போகும் சில உணவுகள்
கோதுமை, தானியம், பால் சார்ந்த உணவுகள், பழங்கள். இவற்றால், எக்ஸிமா, தோல் வியாதிகள், சருமம் உலர்ந்து, காய்ந்து போதல், வயிற்றுக் கோளாறுகள், ஒற்றை தலைவலி போன்றவை.
உண்ண அடங்காத ஆவலை உண்டாக்கும் உணவுகள்
சர்க்கரை உள்ள உணவுகள், உப்புச்சுவை உள்ள பக்குவப்படுத்தப்பட்ட கலோரி நிறைந்த உணவுகள் கொழுப்பு வகைகள் இவற்றை உட்கொள்வதால் மூட்டுவலி, தசை தொய்வு, சக்தியின்மை, தோல் பளபளப்பை இழந்து போதல், த்ரஷ், சொறி, கவனக்குறைவு போன்றவை ஏற்படும்.
ஊக்குவிக்கும் உணவுகள்
நிகோடின், பழ ரகங்கள், ஆல்கஹால், சர்க்கரை, உப்பு, காஃபி, டீ, சோடா பானங்கள். இவை இணக்கம் இல்லாமல் போனால் தோன்றும் அறிகுறிகள், இதயத்துடிப்பு அதிகரித்தல், மார்வலி, தசை புண்ணாதல், ஜீரண கோளாறுகள், தூக்கமின்மை, உணர்ச்சி வசப்படுதல் போன்றவை.
ஆயுர்வேதம் சொல்லும் ஏற்றுக் கொள்ள முடியாத கலவை உணவுகள்
வாழைப்பழத்துடன் பால் அருந்தினால் உடலின் “அக்னி” குறையும். நச்சுப் பொருட்கள் தோன்றி, சைனஸ், ஜலதோஷம், இருமல் இவற்றை உண்டாக்கும்.
பழங்களுடன் ஸ்டார்ச் அதிகம் உள்ள உணவு (உருளைக்கிழங்கு போன்றவைகளை) உண்டால், இரண்டுக்கும் உள்ள ஜீரணிக்கும் நேர வித்யாசத்தால், பாதிப்புகள் உண்டாகும்.
தர்ப்பூசணி, முலாம்பழம் போன்றவைகளுடன் தானியங்களை சேர்த்துக் கொள்ளக் கூடாது. ஜீரணமாக தாமதாகும் பொருட்களுடன் சுலபமாக ஜீரணிக்கும் பழங்களின் கலவை கூடாது. தேனை சூடுபடுத்தி உண்ணக் கூடாது. இது விஷப் பொருட்களை உண்டாக்கும். மாமிசத்தையும், பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. மாமிசம் சூட்டை அதிகரிக்கும் உணவு. பால் உடலை குளிர்விக்கும். இரண்டும் பொருந்தாதவை. ஜீரண அக்னி பாதிக்கப்படும்.
முலாம் பழத்தையும், தானியத்தையும் சேர்க்க முடியாதது போல், முலாம்பழத்தையும் பாலையும் சேர்த்து உண்ணக்கூடாது. இரண்டும் குளிர்ச்சியானவை. ஆனால் பால் மலமிளக்கி. முலாம் பழம் சிறுநீரை பெருக்கும். பால் ஜீரணிக்க நேரமாகும். வயிற்றில் திரிந்து விடும்.
மாமிசம், நீர் வாழும் பிராணிகளின் மாமிசம் இவற்றுடன் தேன், எள்எண்ணை, வெல்லம், பால், உளுத்தம் பருப்பு, முள்ளங்கி, கொழுப்பு இவற்றை சேர்க்கக்கூடாது.
இதர சேர்க்கக் கூடாத கலவைகள்
சர்க்கரை – மீன், வாழைப்பழம் – பேரீச்சம்பழம், வாழப்பழம் – தயிர்.
உணவுச் சத்து குறைபாடுகள்
ஆயுர்வேதத்தின் படி கீழ்க்கண்ட ஐந்து கோளாறுகள் உணவுச்சத்து சரியில்லாமல் போவதால் உண்டாகும். உணவின் அளவு போதாமை, பற்றாக்குறை உணவு, போதிய அளவு உணவு கிடைக்காமை, பட்டினியால் உணவுக் குறைவு. இதனால் ஆரோக்கிய நலிவு.
சாப்பிடும் உணவின் தரம் குறைவினால் (பொருத்தமில்லா கலவை உணவுகள்) உடலில் தங்கும் நச்சுக்கள். அதிகமாக தரமான உணவை, அளவுக்கு மீறி உட்கொள்ளுவது. இதனால் அதிக உடல் எடை, கொழுப்பு அதிகமாதல் போன்ற குறைபாடுகள் ஏற்படும். உடலில் சேரும் நச்சுப் பொருட்களால் நேரிடும் பாதிப்புகள். உங்கள் உடலுக்கு பிடிக்காத உணவுகளை சாப்பிடுவது.