கிட்டத்தட்ட, பசுமையான எல்லா தாவரங்களுமே ஓரளவு சர்க்கரை உள்ளவைதான். ஆனால் வியாபார ரீதியில் சர்க்கரை தயாரிப்புக்காக பயன்படுபவை கரும்பும், சர்க்கரை பீட் (Sugar beet) ஆகியவைகளாகும். இதர ‘சர்க்கரை’ பயிர்கள் – பனை, பேரீச்சை மரம், சுகர் மேபில் (Sugar Maple) போன்றவை.
கரும்பு
கரும்பு என்றாலே இனிமை. தோகையுடன் கூடிய கரும்பு, பொங்கல் பண்டிகையில் வீடுதோறும் காணப்படும். கரும்பின் விஞ்ஞானப் பெயர் Sacchrarum Officinarum புல் வகையை சேர்ந்தது. பல வகைகளுள்ள கரும்பு 2 லிருந்து 6 மீட்டர் உயரம் வரை வளரும். கணுக்கள் உள்ள துண்டுகளை நட்டு பயிரிடப்படும். ஒரு தடவை நட்டால், பல தடவை அறுவடை செய்யலாம். முதல் அறுவடையில் கிடைக்கும் கரும்பின் அளவு அடுத்த அறுவடைகளில் குறைந்து கிடைக்கும். விவசாய முறைகளின் படி, 2 லிருந்து 10 அறுவடைகள் வரை கிடைக்கலாம்.
உலகிலேயே கரும்பு அதிகம் விளைவது தென் அமெரிக்க கண்டத்திலுள்ள ‘பிரேஸில்’ நாட்டிலாகும். அடுத்தது இந்தியா, பிறகு சீனா, மற்றபடி தென் அமெரிக்க நாடுகள், மேற்கிந்திய தீவுகள், க்யூபா இவைகளிலும் கரும்பு பயிரிடப்படுகிறது.
உலகில் கிட்டத்தட்ட 200 தேசங்களில் கரும்பு பயிரிடப்பட்டு, 1324 மில்லியன் டன்கள் சர்க்கரை உற்பத்தி செய்யப்படுகிறது. முதலில் இந்தியாவில் தான் 2500 வருடங்களுக்கு முன் சர்க்கரை உருவாக்கப்பட்டது. கி.பி. 8 ம் நூற்றாண்டில் அரேபியர்கள் மத்திய தரைக்கடல் தேசங்களில் சர்க்கரையை அறிமுகப்படுத்தினர். ஸ்பெயினில் ஆரம்பித்த கரும்பு, அங்கிருந்து வட தென் அமெரிக்காவுக்கு, பரவியது. கிரிஸ்டோபர் கொலம்பஸ்ஸால் மேற்கிந்திய தீவுகளில் பயிரிடப்பட்டது. கரும்புத் தோட்டங்களில் வேலை செய்ய போதிய உள்ளூர்வாசிகள் இல்லாததால், ஆப்பிரிக்க, இந்தியா தேசங்களிலிருந்து அடிமைகள் கொண்டு செல்லப்பட்டனர்.
கரும்பின் குணங்கள்
உள்ளழலாற்றும். குளிர்ச்சி தரும். உடலுக்கு புஷ்டி தரும். சிறுநீர் பெருக்கு. கரும்பின் வேர்களுக்கும் இந்த குணங்கள் உண்டு
இதன் தண்ணீர் சேர்த்து செய்யப்பட்ட கஷாயம் சிறுநீர் எரிச்சலை குறைக்கும்.
சரகஸம்ஹிதையின் படி கரும்பு 13 வகைப்படும். கரும்பு வாத பித்தங்களை தணிக்கும். சிறுநீரை வெளியேற்றும். மற்றும் சரக ஸம்ஹிதையின் படி கரும்பின் சிறப்பான தன்மைகள்:- கரும்பு மலத்தை வெளியேற்றும், உடலுக்கு செழிப்பையும், மகிழ்ச்சியையும் தரும். இரத்த தோஷத்தை வெளியேற்றும். பாணிதம் எனப்படும் பாகுபோல் காய்ச்சிய கருப்பஞ்சாறு உடலை வளர்க்கும். விந்துவையும் கபத்தையும் வளர்க்கும். சிறுநீர்ப்பையை தூய்மைப்படுத்தும்.
சித்த வைத்திய பொருட்பண்பு நூல்களின் படி கருப்பஞ்சாறை புளிக்க வைத்து ஒரு வகை காடி செய்யலாம். இது கருப்பங் காடி எனப்படும். இது பசியை உண்டு பண்ணி, செரிமானத்தை அதிகரித்து, தாகத்தை போக்கும். தலைவலி, மயக்கம், தொண்டைப்புண், மூக்கில் நீர் பாய்தல் முதலியவற்றுக்கு இந்த காடியின் ஆவியை மூக்கினால் நுகர்ந்தால், குணமுண்டாகும்.
நம்நாட்டு மருந்துகளில் கரும்பின் பாகு முக்கிய அம்சம் வகிக்கிறது. சூரணம், லேகியம் எதுவாகினும், கரும்புச்சர்க்கரை பாகுதான் உபயோகிக்கப்படுகிறது. கரும்பை நிலத்தி லிருந்து பிடுங்கி பற்களால் கடித்து உண்பதில் பற்கள், ஈறு பலப்படுகின்றன. வெய்யில் காலத்தில் கிடைக்கும் இஞ்சி, எலுமிச்சம் சாறு சேர்ந்த கரும்பு ‘ஜுஸ்’ வெப்பத்தை தணிக்கும். தினசரி சாப்பிடாமல் வாரம் 3 நாட்கள் இந்த சாற்றை பருக பித்தம், உடல் வறட்சி குறையும்.
கரும்பு சாற்றில் அத்திப்பழத்தை வேக வைத்து பருக மூல நோய் சரியாகும். கல்கண்டு சேர்த்து காய்ச்சிய பாலில், 1 ஸ்பூன் முருங்கைப்பூ சேர்த்து பருகிவர தாதுவலிமை பெருகும். முருங்கைப்பூவிற்கு பதில் பேரீச்சம் பழமும் சேர்க்கலாம். பொதுவாக மஞ்சள், கற்கண்டு கலந்து காய்ச்சிய பால், தொண்டை வலி இருமலுக்கு நல்லது. கருப்பஞ்சாறு வாதத்தையும் கபத்தையும் போக்கும்.