குழந்தைகள் பெற்றவுடன் குண்டாகாமல் இருக்க

Spread the love

பிரசவம் என்பது பெண்களின் மறுபிறப்பு என்றே கூறலாம். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மகத்தான தருணம் தாயாவது. தாய், சேய் இருவரின் உடல் நலத்தை பேணிக்காக்க நம் நாட்டில் பிரசவ சமயத்தில், பெண் தன் தாய்வீட்டுக்கு சென்று விடுவது வழக்கம். ஆனால் ஒரு கர்ப்பிணிக்கு தரும் கவனம் குழந்தை பிறந்த பின்னும் தொடர வேண்டும். பிரசவத்துக் பின் பெண்கள் குண்டாகி விடுவது சகஜம். அதை தவிர்க்க வேண்டும்.

பிரசவத்துக்கு பின் பெண்கள் குண்டாவதற்கு முதல் காரணம் – “நார்மல்” பிரசவம் ஆன பெண்களுக்கு அதிக கொழுப்பு, ஸ்டார்ச் நிறைந்த உணவுகள் தருவது. குழந்தை பிறந்திருப்பதால் ஏற்பட்ட பலவீனத்தை போக்க இது தான் வழி என்று பெற்றோர்கள் அதிக ஊட்டச்சத்து உணவை பிரசவமான பெண்களுக்கு திணிக்கிறார்கள். சில பெண்கள் பிரசவத்துக்குப் பின் “ஒய்விலேயே” இருக்கின்றனர். பிரசவத்திற்கு பின்னும் லகுவான, சிரமமில்லாத உடல் உழைப்பு (அல்லது) உடற்பயிற்சி தேவை. இதை தாயின் பெற்றோர் கவனிக்க வேண்டும். நமது நாட்டில், பிரசவமான பெண்ணை வீட்டில் வேலை செய்யவே மற்ற குடும்பத்தினர் விடவே மாட்டார்கள். இந்த அதீத அன்புத் தொல்லையால் உடல் எடை கூடும்.

“சிசேரியன்” செய்து பிரசவித்த பெண்களால் உடனடியாக நார்மல் செயல்களை செய்ய முடியாது. உடற்பயிற்சியிலும் ஈடுபட இயலாது. அதனால் அவர்களின் கர்பப்பை நார்மல் நிலைக்கு சுருங்குவது தாமதமாகும். இதனால் அடிவயிறு பெருத்து விடும். கூடவே போஷாக்கான, கொழுப்பு / இனிப்பும் சேர்ந்த உணவுகளும் கொடுக்கப்படுகின்றன. இதனால் ‘ஓபிசிடி’ உண்டாகும்.

சில பெண்கள், பிரசவ காலத்தில் ஏற்படும் டென்ஷன், ஸ்ட்ரெஸ் இவற்றால் மனோரீதியாக பாதிக்கப்படுகின்றனர். எல்லோரிடமும் எரிந்து விழுதல், அநாவசியமாக கோபப்படுதல் போன்ற குணமாற்றங்கள் ஏற்படுவது அதிசயமல்ல. பிரசவ பாதிப்புகளில் இதுவும் ஒரு அங்கம். மனபாதிப்பினால் இத்தகைய பெண்கள் அதிகம் உண்ணத் தொடங்கி, உடல் எடையை கூட்டிக் கொள்கின்றனர்.

ஆயுர்வேத சிகிச்சை முறைகள்

உணவு கட்டுப்பாடு – உங்களின் செல்லக் குழந்தை பிறந்த பின் ஏறும் எடையை குறைக்கலாம். அதற்கு முதல் தேவை “பத்தியம்” அல்ல. குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். அது அவசியம். தாய்ப்பால் கொடுக்கும் போது உங்களுக்கு சத்தான உணவு தேவை. எனவே அவசரப்பட்டு “டயட்” டில் இறங்கி விடாதீர்கள். உங்கள் உணவு ஆரோக்கியமானதாக இருக்க வேண்டும். அதே சமயத்தில் தேவையின்றி “எக்ஸ்ட்ரா” கலோரிகளை ஏற்றிக் கொள்ள வேண்டாம்.

நிறைய தண்ணீர் குடிக்கவும். உணவுடனும் குடிக்கவும். தண்ணீர் அதிகமாக குடிக்க, உணவு குறைவாகும்.

உணவில் நார்ச்சத்தை அதிகமாக சேர்த்துக் கொள்ளவும். நார்ச்சத்து சாப்பிட்ட பின் சர்க்கரை உட்கிரகிக்கப்படுவதை தாமதப்படுத்தும். நார்ச்சத்தினால் வயறு சீக்கிரமே நிறைந்தது போல் உணர்வீர்கள். பழங்கள், காய்கறி, பீன்ஸ், பழுப்பு அரிசி (கைக்குத்தல் அரிசி, முழுத்தானியங்கள், பார்லி, ஓட்ஸ்) முதலியவை நார்ச்சத்து அதிகமுள்ள உணவுகள்.

சர்க்கரையை கூடிய வரையில் தவிர்க்கவும். சர்க்கரையில் எந்த விதமான ஊட்டச்சத்தும் இல்லை. சர்க்கரைக்கு பதில் தேனை பயன்படுத்தலாம்.

கொழுப்பு உணவுகளை தவிர்க்கவும்.

உணவு உண்ணும் போது நன்றாக மென்று விழுங்கவும்.

ஆயுர்வேதம் தாய்க்கும் சேய்க்கும் ஏற்ற வாசனை திரவியங்கள் கலந்த உணவை வலியுறுத்துகிறது. உணவுகள் புதிதாக தயாரிக்கப்பட வேண்டும். ஈரப்பசை உடையதாக இருக்க வேண்டும். இளம் சூட்டுடன் பரிமாறப்பட வேண்டும். சீரகம், கருஞ்சீரகம், இஞ்சி, கடுகு, துளசி, மஞ்சள், வெந்தயம், இலவங்கப்பட்டை, பூண்டு (வறுத்து உபயோகிக்க வேண்டும் பச்சையாக அல்ல) முதலியவை உணவில் இடம் பெற வேண்டும். மாமிசம் இரு வாரங்களுக்கு ஒரு முறை போதும். காப்பி, டீ, வெள்ள¬ சீனி, பச்சை காய்கறிகள், உலர்ந்த உணவுகள் போன்றவற்றை தவிர்க்கவும்.


Spread the love