“ஆயிரந் தெய்வங்களுண்டென்று தேடி
அலையுமறிவிலிகாள் – பல்
லாயிரம் வேதமறிவென்றே தெய்வமுண்
டாமெனில் கேளீரோ?” – என்றார் பாரதியார்
உலகில் வாழும் கோடிக்கணக்கான ஜீவராசிகளில் மனிதனுக்கு மட்டும் தான் எது நல்லது, எது கெட்டது என்று பகுத்தறியும் அறிவுத்திறன் உள்ளது. இது நமக்கு இறைவன் கொடுத்த வரம். இந்த அறிவை நாம் நல்ல வழியில் செலுத்த வேண்டும்.
அறிவை வளர்ப்பது கல்வி. எனவே எப்பாடுபட்டாவது கல்வியை பெற வேண்டும். கல்வியால் பெறும் அறிவினால் மனிதன் நற்பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெற்ற அறிவை பயன்படுத்தாவிடில், மனது கீழான எண்ணங்களால் அலைபாயும். மனதை அடக்க அறிவை உபயோகிக்க வேண்டும். அறிவினால் செல்வமும், செழிப்பும் உண்டாகும்.
ஒருவர் தான் செய்யும் வேலை, எந்த வேலையானாலும் சரி, அதில் ஆர்வம் காட்டி அதை செவ்வனே செய்ய அறிவு பூர்வமான முயற்சிகளை மேற்கொண்டால் வெற்றி நிச்சயம். அதற்கு அறிவுடன் கூடிய உழைப்பு தேவை.
மனித வாழ்வின் சரித்திர முன்னேற்றங்கள் அறிவு பூர்வமான கண்டுபிடிப்புகளால் ஏற்பட்டவை. “அறிவுடை ஒருவனை அரசனும் விரும்பும்“ என்கிறது வெற்றி வேற்கை.
உணவே மருந்து; மருந்தே உணவு என்பது ஆன்றோர் வாக்கு. நம் உடலிலேயே நமக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. அதையும் மீறினால்தான் நோயாக வெளிப்படுகிறது. நாம் உண்ணும் உணவு முறைகளாலேயே அந்த நோயை சரிப்படுத்தி விடலாம். மேலும் உணவுப் பழக்கத்தை முறையாக அமைத்துக் கொண்டால், பெரிய பெரிய நோய்கள் வராமல் தடுக்கலாம். அப்படியே வந்தாலும் உணவுப் பழக்கம் சரியான முறையில் இருந்தால்.. நாம் சமச்சீரான உணவை உட்கொண்டால் அந்த நோயின் பாதிப்புகளில் இருந்து பெருமளவில் தப்பிக்கலாம்.
மனிதன் உயிர் வாழ்வதற்காகத்தான் சாப்பிடுகிறான். சாப்பிடுவதற்காக உயிர் வாழ்வதில்லை. நம் பேச்சு, மூச்சு, செயல் எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை சக்தி. அந்த சக்தியை அளிப்பது உணவு. அந்த உணவு சரியான உணவாக.. சத்துணவாக இருக்க வேண்டும். உணவே மருந்து; மருந்தே உணவு என்ற சீரிய கொள்கையின் அடிப்படையில், ‘உணவு நலம்’ கடந்த 6 ஆண்டுகளாக வெற்றிகரமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. சிறப்பான வரவேற்பை பெற்று வருகின்றது. எங்களால் முடிந்த வரை பயனுள்ள பல தகவல்களை திரட்டி வழங்கி வருகின்றோம். அவற்றை வாசசர்களும் சிறப்பாக ஏற்றுக் கொள்கின்றனர்.
உணவு நலம் செய்யும் இத்தொண்டு வெற்றி பெற வேண்டுமானால் வாசகர்கள் நாம் வழங்கி வரும் தகவல்களை அறிந்து (உணவே மருந்து; மருந்தே உணவு) அவற்றை நடைமுறையில் பயன்படுத்தும் பொழுது தான் எமது பணி சிறக்கும். நாம் முழு வெற்றி பெறுவோம்.
உங்கள் நலன் கருதி
ஆயுர்வேதம் Dr. S. செந்தில் குமார்