உணவும் சீரகமும் ஒன்றுடன் ஒன்று, உறவு கொண்டவை. சீரகம் இல்லாமல் உணவில்லை. சீரகச் செடி 35 – 45 செ.மீ. உயரம் வளரும் சிறு செடி. இதன் தண்டு பல கிளைகளுடன் கூடியதாகவும், இலைகள் நீட்டமாக, நன்கு பிரிந்து பச்சையாகவும் (கொத்தமல்லி இலையைப் போல்) இருக்கும்.
செடியின் உருண்டையான பகுதிகளில் வெண்ணிறமுள்ள சிறுமலர்கள் தோன்றும்.
பூத்ததும் இந்த உருண்டையான முடிச்சுகள் பிளந்து அவற்றில் மூன்று அங்குலம் நீளமான பழங்கள் தோன்றும். அவற்றில் விதைகள் மிகுந்திருக்கும். கோள வடிவில் 6 மி.மீ. நீளமாக மஞ்சள் – பழுப்பு நிறத்தில் காணப்படும். இந்த விதைகள் தான் சீரகம். நல்ல நறுமணத்துடன் இருக்கும்.
பழைய காலங்களிலிருந்தே உபயோகத்தில் இருக்கும் சீரகம், எகிப்து, சிரியா, துருக்கி, மத்திய தரைக்கடல் பிரதேசங்களில் தோன்றியது. இப்போது வடஆப்ரிக்கா, இந்தியா, சீனா தேசங்களில் பயிரிடப்படுகிறது.
100 கிராம் சீரகத்தில் ஈரப்பசை 6.2%, புரதம் 17.7%, கொழுப்பு 23.8%, நார்ச்சத்து 9.1%, மாவுப்பொருள் 35.5%, தாதுப்பொருட்கள் 7.7% உள்ளன.
தவிர கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, சோடியம், பொட்டாசியம், தியாமைன், ரிபோஃப்ளேவின், நியாசின், வைட்டமின்கள் சி, ஏ, இவைகளும் உள்ளன. கலோரிகள் 460 காய வைத்த சீரகப் பழத்திலிருந்து Distilation என்ற முறைப்படி, நறுமணமுள்ள, காற்றில் ஆவியாகக்கூடியதும், இலேசானதும் மஞ்சள் நிறம் கொண்டதுமான எண்ணெய் எடுக்கப்படுகிறது. இவ்வெண்ணெய்யில் Cumic aldehyde 52% உள்ளது.
பலவகை ரசாயன பொருட்கள் கலந்துள்ள இவ்வெண்ணெய்யைக் கொண்டு செயற்கை ‘தைமோல்’ (Thymol) செய்யப்படுகிறது. மற்றும் சீரகத்தில் 10% சீரக எண்ணெய்யும் (Cumin Oil), Pentosan 6.7% உள்ளன.
தைமோலின் பயன்கள்
தைமோல் வயிற்றுப்பூச்சிகளை கொல்ல வல்லது. ஒரு ஆன்டி – செப்டிக் மருந்தாகும். சீழையும், கிருமியையும் போக்க வல்லது. அதுவும் கொக்கிப்புழுக்களை (Hook – Worm) ஒழிக்கும். வாய்வு உப்புசத்தை போக்கும். சிறுநீர் பிரிய உதவும்.
ஜீரணத்திற்கு
சீரகம் பல வகைகளில் ஜீரணத்திற்கு உதவும். அஜீரணம், பித்தம், பேதி இவற்றைப் போக்கும்.
ஒரு கிளாஸ் தண்ணீரில் ஒரு தேக்கரண்டி சீரகத்தைப் போட்டு கொதிக்க வைத்து, இத்துடன் கொத்தமல்லி சாறையும் (ஒரு தேக்கரண்டி) சிறிது உப்பு சேர்த்து குடிக்க வயிற்று கோளாறுகள் குறையும். தண்ணீரை கொதிக்க வைத்து, அதில் கால் ஸ்பூன் சீரகத்தைத் தூள் செய்து கலந்து நீரை பருகினால் தொற்று நோய்கள் வராமல் தடுக்கலாம்.
இது சுத்திகரீக்கப்பட்ட தண்ணீரைப் போல் பாதுகாப்பானது.
வயிற்று வலிக்கு ஒரு ஸ்பூன் சீரகம், ஒரு ஸ்பூன் வெந்தயத் தூள் செய்து மோரில் கலந்து குடிப்பது வழக்கம்.
தூக்கமின்மை
வாழைப்பழத்துடன் ஒரு ஸ்பூன் சீரகப் பொடியுடன் இரவில் சாப்பிட தூக்கம் வரும்.
ஜலதோஷம்
மேற்சொன்னபடி, சீரகத்தண்ணீர் குடித்து வந்தால், ஜலதோஷம், அதன் கூடி வரும் ஜூரமும் குறையும். தொண்டை கட்டிவிட்டால் சீரகத்தண்ணீருடன் இஞ்சி கலந்து பருக தொண்டை எரிச்சல் குறையும்.
விஷ முறிவு
தேள் கடித்தால் வெங்காய சாறுடன் அரைத்த சீரகம் கலந்த உணவை, தேள் கடித்த இடத்தில் தடவ வலிக்குறையும்.
கருஞ்சீரகம்
சீரகத்தின் ஒரு வகையான கருஞ்சீரகமும் மூலவியாதி, ஞாபக மறதி போன்றவற்றுக்கு நல்லது. சீரகத்தைப் போலவே பயன்படும்.
இதர பயன்கள்
குளிர் ஜூரம், காமாலை, வாய்நாற்றம், வாயில் எச்சில் ஊறுவது, பெண்களின் சூதகத்தை கோளாறுகள் இவற்றுக்கு மருந்தாக சீரகம் உதவும்.
தவிர உணவுகளுக்கு சுவை கூட்டவும், மணமளிக்கவும் பயன்படுகிறது. வாசனை பொருட்கள் தயாரிப்பில் சீரக எண்ணெய்யும் (Cumin Oil) பயன்படுகிறது.
சரகசம்ஹிதையின் படி சீரகம்
வெண் சீரகத்தை வெல்லத்துடன் உட்கொள்ளச் செய்தால் விஷக்காய்ச்சல் சடராக்னிக் குறைவு வாத நோய்கள் ஆகியவை தணியும்.
சீரகத்தையும், இந்துப்பையும் மைய அரைத்து சிறிதளவு நெய்விட்டு சூடாக்கித் தேள் கொட்டிய இடத்தில் பூசினால் நஞ்சு இறங்கும்.
சீரகத்தில் வெல்லம் கலந்து அல்லது சீரக விழுதுடன் தேன் கலந்து மோரைத் துணை மருந்தாக உட்கொள்ளச் செய்து உடல் வியர்க்கும் வரை வெயிலில் இருக்கச் செய்தால் காய்ச்சல் தணியும்.
சீரகாதி சூரணம்: இது கிரஹணி அதிசாரம் காமாலை சோகை சடராக்னிக் குறைவு ஆகியவற்றைத் தணிக்கும்.
சீரக கிருதம்: எண்ணெய்க் குளியலுக்குப் பயன்படுத்தினால் நெருப்பால் சுட்ட விரணம் நீங்கும்.
சீரகாயத்யரிஷ்டம்: கிரஹணி அதிஸாரம் சடராக்னி மாறுபாடு பிள்ளைப்பேற்றினால் தோன்றும் நோய்கள் நீங்கும்.