நீரிழிவை நிறுத்துமா? கோவைக்காய்

Spread the love

இந்தியாவில் தான் உலகிலேயே அதிகமான நீரிழிவு நோயாளிகள் உள்ளனர். உணவு பழக்க வழக்கங்கள், உடல் உழைப்பு குறைந்த வாழ்க்கை முறைகள் மற்றும் பரம்பரை இவற்றால் உண்டாகும் வியாதி நீரிழிவு. இந்த வியாதி நெடுங்காலமாக, ஆயிரக்கணக்கான வருடங்களாக மனிதர்களை பாதித்து வரும் நோய். இவ்வளவு நாட்கள் இருந்தும், நீரிழிவுக்கு முழு நிவாரணம் இல்லை. எனவே மாற்று மருத்துவ முறைகள் தற்போது பிரபலமாகி வருகின்றன. இயற்கை மூலிகைகள், தாவரங்கள் இவைகள் நீரிழிவு வியாதியை குணப்படுத்த முடியுமா என்பது தற்போது ஆராயப்பட்டு வருகின்றன. பாகல்காய், வெந்தயம் இவைகள் நீரிழிவு நோயை கட்டுப்படுத்த உதவும் என்று தெரியவந்துள்ளது.

கோவைக்காய் பழங்காலத்திலிருந்தே நீரிழிவு நோய் மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் காய்கறிகளில் ஒன்று. வெள்ளரிக்காய் குடும்பத்தை சேர்ந்த இந்த எளிமையான காய்கறி கொடியினத்தை சேர்ந்தது இந்தியாவில் எங்கும் கிடைக்கும்.

இந்திய ஆராய்ச்சியாளர்களால் கோவைக்காயை வைத்து, ஒரு நீரிழிவு ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. 60 டைப் – 2 நீரிழிவு நோயாளிகள் (வயது – 35 லிருந்து 60 வயது வரை) இந்த ஆராய்ச்சிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் 33 நபர்கள் ஆண்கள். 26 – பெண்கள். இவர்களின் ரத்த சர்க்கரை அளவு 110 – 180 மிகி. / டெ.லி. (பட்டினியின் போதுள்ள அளவு) இவர்களில் ஒருவர்  விலகி விட்டார். மீதி 59 பேரில் 29 நோயாளிகளுக்கு கோவைக்காய் சாறும், 30 நோயாளிகளுக்கு வெற்றுமருந்தும் கொடுக்கப்பட்டன. கொடுக்கப்பட்ட கோவைக்காய் சாறு இலையிலிருந்தும், கோவைக்காய் / பழங்களிலிருந்து எடுக்கப்பட்டது. இந்த ஆராய்ச்சியின் தலைவர் Dr. ரெபேக்கா குரியன், பெங்களூரில் உள்ள ஆராய்ச்சி கூடத்தில் மேற்கொள்ளப்பட்டது.

90 நாட்கள் இந்த சிகிச்சை தொடர்ந்தது. அதன் பிறகு பார்த்ததில் நீரிழிவு நோயாளிகள் ரத்த சர்க்கரை அளவு கணிசமாக குறைந்திருப்பது தெரியவந்தது. 16% சதவிகித குறைவு ஏற்பட்டிருந்தது. கோவைக்காய் சிகிச்சை பெறாதவர்களின் சர்க்கரை அளவு அதிகமாகிருந்தது. தினசரி 1 கிராம் கோவைக்காய் சாறு, உணவுக்குப் பின் எடுத்த சர்க்கரை அளவை 18% சதவிகிதம் குறைந்திருப்பது தெரியவந்தது. பல வருடங்களுக்கு முன்பே, அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பள்ளியில் நடத்திய ஆய்வில் கோவைக்காய் நீரிழிவு வியாதியை குறைக்கும் குணமுடையது என்பது சொல்லப்பட்டது. பெங்களூரில் நடத்திய மேற்சொன்ன ஆராய்ச்சியிலும் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. தீவிரமில்லாத சர்க்கரை வியாதிக்கு கோவைக்காய் நல்ல பலனை அளிக்கும். கோவைக்காய் சாறு எடுத்துக் கொள்வதால் பக்க விளைவுகளும் அதிகம் ஏற்படுவதில்லை. ஆராய்ச்சிக்கு உட்பட்ட நோயாளிகளுக்கு சிறிய வயிற்றுக் கோளாறுகள் ஏற்பட்டாலும், அவை 1 வாரத்தில் மறைந்து விட்டன.

கோவைக்காய்ப் பொடி

தேவையானவை

கோவைக்காய்       – கால் கிலோ

மஞ்சள் பொடி        3 ஸ்பூன்

உப்புத் தூள்          – தேவையான அளவு

புளித்த மோர்        – காய்கள் ஊறும் அளவு,

மிளகுத் தூள்         – 15 கிராம்

சீரகம்                – 15 கிராம்

முழு பூண்டு           2 (அ) 3

உளுத்தம் பருப்பு     – 50 கிராம்

எலுமிச்சைப் பழம்    – 4

செய்முறை

ஒரு பாத்திரத்தில் கோவைக்காய்களை சிறு துண்டுகளாக நறுக்கி போடவும். புளித்த மோரை ஊற்றவும். உப்பைத் தூள் செய்து போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். இரண்டு நாள் ஊற வேண்டும். எலுமிச்சைப் பழத்தை பிழிந்து ஊற்றவும். இரண்டு இரவு ஊற விட்டு மறுநாள் காயப் போடவும். தினம் காயப்போட்டு மறுபடி, மறுபடி இரவில் கலந்துள்ள மோரில் ஊறவிட வேண்டும். இது போல் தினம் ஊறப் போட்டு, காய வைத்து எடுக்கவும். இவ்வாறு காய வைத்த காய்களுடன், மிளகு, சீரகம் இவற்றை வெய்யிலில் இரண்டு நாள் காய வைத்து அதைத் தூள் செய்து காய்ந்த கோவைக்காய்களையும், மிக்ஸியில் போட்டு பொடி செய்யவும். இவ்வாறு பொடி செய்த பொடியுடன் ஒரு ஸ்பூன் (அ) இரண்டு மூன்று ஸ்பூன் சூடான சாதத்தில் போட்டு நெய் இரண்டு ஸ்பூன் விட்டு பிசைந்து சாப்பிடவும். இப்பொடியை பாட்டிலில் வைத்து பத்திரப்படுத்தவும்.

கோவைக்காய் எரிசேரி

தேவையானவை

கோவைக்காய் பொடியாக

நறுக்கியது                 1 கப்

மிளகு                     – 2 ஸ்பூன்

சீரகம்                     – 2 ஸ்பூன்

மஞ்சள் தூள்              – 1 ஸ்பூன்

உப்புத் தூள்               – தேவையான அளவு

புளி (அ) எலுமிச்சை பழம்  – 2

பசு நெய்                   200 கிராம்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் பொடியாக நறுக்கிய கோவைக்காயை போடவும். புளியை கரைத்து ஊற்றவும் (அ) எலுமிச்சைப்பழத்தை பிழிந்து ஊற்றவும். உப்பைப் போடவும். மஞ்சள் பொடியைப் போடவும். மிளகு, சீரகம் இவற்றைப் பொடி செய்து போடவும். தண்ணீர் இல்லாமல் பகல் (அ) இரவு முழுவதும் பிசிறி ஊற விடவும். மறுநாள் சமைக்கும் முன் 10 மணியிலிருந்து 11 (அ) 12 மணி வரை வெய்யிலில் தாம்பாளத்தில் கொட்டிப் பரப்பி வைத்து காய வைக்கவும். அரை மணி நேரம் கழித்து மறுபடி காய்களை புரட்டி வைத்து காய்ந்ததும், எடுத்து வாணலியில் நெய்யை ஊற்றி காய்ந்ததும் காய வைத்த கோவைக்காய்களை நெய்யில் பொரித்து எடுக்கவும். இதுவே கோவைக்காய் எரிசேரி என்பது.

கோவைக்காய் பால் கறி

தேவையானவை

கோவைக்காய்       – கால் கிலோ

முற்றிய தேங்காய் துருவல்     – 2 மூடி

சோம்பு              – 2 ஸ்பூன்

பச்சை மிளகாய்      – 5

தக்காளி              – 4 (அ) 5

கறிவேப்பிலை       – 3 இணுக்கு

மல்லித் தழை        – 1 கொத்து

உப்பு                 – தேவையான அளவு

பட்டை               – 1 துண்டு

கிராம்பு              – 2

பூண்டு பல்                – 4

இஞ்சி               – 1 துண்டு

பசுநெய்              – 10 மில்லி

கசகசா               – 2 ஸ்பூன்

மல்லித் தூள்        – 2 ஸ்பூன்

செய்முறை

கோவைக்காயை அலசி விட்டு, உப்பு போட்டு, மல்லித்தூள், மஞ்சள் தூள் போட்டு வேக விடவும். காய் வெந்ததும், வாணலியில் பட்டை, சோம்பு இவற்றை தூள் செய்து போட்டு, நெய் விட்டு, கிராம்பை தட்டிப் போட்டு, கசகசாவை தூள் செய்து போட்டு வறுத்து, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித்தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தேங்காயில், சோம்பு வைத்து தாளித்த காயில் அரைத்து ஊற்றவும். மற்றொரு மூடி தேங்காய்த் துருவலை திக்கான பாலெடுத்து வெந்த காயை இறக்கி வைத்து பாலை ஊற்றவும். இந்தக் கோவைப்பால் கறியை சாதத்தில் போட்டுப் பிசைந்து சாப்பிட ருசியாக இருக்கும்.

கோவைக்காய் பொரிச்ச குழம்பு

தேவையானவை

தேவையான (அதாவது) குழம்பு வைக்க போதுமான அளவு

மல்லித் தூள்         – 4 ஸ்பூன்

மிளகாய்த் தூள்       1 ஸ்பூன்

பூண்டு பல்                  10

இஞ்சி                – ஒரு பெரிய துண்டு

தேங்காய் துருவல்   – 11/2 மூடி

சின்ன வெங்காயம்   – பொடியாக நீளவாக்கில் நறுக்கியது

தக்காளி               – ஐந்து

மஞ்சள் பொடி         1 ஸ்பூன்

கசகசா                2 ஸ்பூன்

சோம்பு                11/2 ஸ்பூன்

பட்டை                1 துண்டு

கறிவேப்பிலை         3 இணுக்கு

மல்லி இலை        1 கொத்து

உப்பு                  – தேவையான அளவு

கடலைபருப்பு          5 ஸ்பூன்

பசுநெய்                4 ஸ்பூன்

செய்முறை

அரிசி களைந்த நீரில் மிளகாய்த் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள் இவற்றை போட்டு நன்கு கலக்கி விடவும். கோவைக்காயை அலசி சிறு துண்டுகளாக கொஞ்சம் நீளவாக்கில் நறுக்கி போட்டு வேகவிடவும். காய் வெந்ததும், சோம்பு ஒரு ஸ்பூன், தேங்காய் துருவலை அரைத்து ஊற்ற வேண்டும். நன்கு கொதித்ததும் உப்பைப் போட வேண்டும். வாணலியில் நெய் விட்டு சோம்பு, பட்டை, வெங்காயம், தக்காளி, கறிவேப்பிலை, மல்லித் தழை இவற்றைப் போட்டு வதக்கி தாளிக்கவும். தாளிக்கும் போது பூண்டு இஞ்சியை தோல் சீவி கரகரப்பாக அரைத்து போட்டு வதக்கி தாளிக்கவும்.

கோவைக்காய் மோர் குழம்பு

தேவையானவை

கெட்டித் தயிர்             – 2 கப்

சீரகம்                     – 1 ஸ்பூன்

பெருங்காயம்              – 1 துண்டு

பச்சை மிளகாய்            4

பச்சரிசி                    1 ஸ்பூன்

துவரம் பருப்பு              2 ஸ்பூன்

கடுகு                           1 ஸ்பூன்

கறிவேப்பிலை             3 இணுக்கு

மல்லிக் கொத்து            2

மஞ்சள் பொடி              1 ஸ்பூன்

காய்ந்த மல்லி விதை       1 ஸ்பூன்

காய்ந்த மிளகாய்          – 2

கோவைக்காய்             200 கிராம் (அ) கால் கிலோ

உப்பு                     – தேவையான அளவு

கடலை பருப்பு           5 ஸ்பூன்

தாளிக்க

தேங்காய் எண்ணெய்      – 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம்        – நீளவாக்கில் நைசாக நறுக்கியது 2 கைப்பிடி

தக்காளி                    3

செய்முறை

காய்ந்த மல்லியை தனியாக ஊறவைக்கவும். துவரம் பருப்பை தனியாக ஊற வைக்கவும். பச்சரிசியையும் தனியாக ஊற வைக்கவும். கோவைக்காய்களை நீரில் அலசி தண்ணீரை வடிய விட்டு மெல்லியதாக, வட்டமாக நறுக்கிக் கொண்டு தயிரில் போடவும். உப்பைத் தூள் செய்து போடவும்.

வாணலியில் தேங்காய் எண்ணெயை விட்டு, பெருங்காயம் போட்டு, மிளகாய் காய்ந்ததை கிள்ளிப் போட்டு வறுபட்டதும், கடுகைப் போட்டு பொரிந்ததும், வெங்காயம் போட்டு, தக்காளியைப் போட்டு (நறுக்கி போடவும்) வதக்கி, மல்லித் தழையை பொடியாக நறுக்கி போட்டு, கறிவேப்பிலையை உருவிப் போட்டு வதக்கி, மிளகாய், பெருங்காயம் போடும் போதே கடலைபருப்பைப் போட்டு சிவந்ததும் கடுகைப் போடணும். கறிவேப்பிலை, மல்லித் தழை போட்டு, காய்ந்த மல்லி, பச்சை மிளகாய் இவற்றை அரைத்து இத்துடன் சீரகம் வைத்து அரைத்துப் போட்டு, மஞ்சள் பொடி ஒரு கொதி வந்ததும் – கொதி அடங்கியதும் தயிரில் கலக்கவும். பச்சரிசி, துவரம் பருப்பு அரைத்து தயிரில் போடவும். இந்த கோவைக்காய் மோர்க்குழம்பு வைக்கும் முன், காலையிலேயே (அ) முதல் நாள் இரவே கெட்டித் தயிரில் உப்புத் தூள் போட்டு கோவைக்காயைப் பொடியாக நறுக்கி போட்டு, தேவையானால் மிளகுப் பொடி ஒரு ஸ்பூன் போட்டு ஊற விட்டு அதன் பிறகே மதியம் கோவைக்காயில் மோர்க்குழம்பு வைக்கவும்.

கோவைக்காய் வற்றல்

தேவையானவை

கோவைக்காய்       – தேவைக்கேற்ப

மஞ்சள் பொடி        – தேவையான அளவு

உப்பு தூள்            – தேவையான அளவு

புளித்த மோர் வற்றல்     – மூழ்கி ஊறும் அளவு

மிளகு பொடி         – தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை பறித்து அலசி மெலிதாக வட்டமாக அரியவும். ஒரு நாள் வெய்யிலில் காய போடவும். அன்று இரவு மோரில் உப்பு, மஞ்சள் பொடி, மிளகுதூள் போட்டு நன்கு கலக்கி, காயை ஊறப் போடவும். இரண்டு நாள் ஊறியதும் வெய்யிலில் பாலிதீன் கவரில் காயப் போடவும். காய் தினம் காய வைத்து எடுத்து இரவில் உப்பு, மஞ்சள், மிளகு பொடி கலந்துள்ள மோரில் போட்டு கிளறிவிடவும். இது போன்று மோர் சுண்டும் வரை போட்டு காய வைக்கவும். நன்கு ஈரமின்றி காய் காய்ந்ததும் எடுத்து இரண்டு நான்கு மாதங்கள் கழித்து வறுத்து தொட்டுக் கொள்ளவும். இந்த வற்றலை குழம்பு சாதம், மோர் சாதம் எல்லாவற்றுக்கும் தொட்டுக் கொள்ளலாம்.


Spread the love
error: Content is protected !!