கேச ஆரோக்கியத்திற்கு உதவும் மூலிகை தைலங்கள்

Spread the love

ஆயுர்வேத மூலிகை மருத்துவ முறையில் எண்ணற்ற மூலிகைகள், கூந்தலை பராமரிப்பிற்காக உள்ளன. பாரம்பரிய முறையில் அவரவர்களுடைய அனுபவ முறையில் மூலிகைகளை காய்ச்சி தைலங்கள் தயாரிக்கப்படுகின்றன.

1. நீலி பிருங்காதி தைலம்

நீலி பிருங்காதி தைலம் பழமையான, கூந்தல் வளம் தரும் அற்புத தைலம்.

தேவையானவை: அ

நல்லெண்ணெய் (அ) தேங்காய் எண்ணெய் – 2 லிட்டர்

அவரி இலை சாறு – 150

நெல்லிக்காய் சாறு – 150 மி.லி

முடக்கத்தான் சாறு – 150 மிலி

கரிசாலை சாறு – 150 மிலி

ஆட்டுப்பால் – 150 மிலி

பசும்பால் – 150 மிலி.

எருமைப்பால் – 150 மிலி

– – – –

தேவையானவை: ஆ

அதிமதுரம் – 5 கிராம்

அஞ்சனக்கல் – 5 கிராம்

குண்டுமணி – 5 கிராம்

இரும்புப் பொடி – 5 கிராம்

மாம் பருப்பு – 8 கிராம்

தாணிக்காய் தோல் – 8 கிராம்,

அ-வில் உள்ளவற்றை இரும்புச்சட்டியிலிட்டு காய்ச்சவும். ஆ-வில் உள்ளவற்றை மை போல் அரைத்து, அந்த விழுதையும் இரும்புச்சட்டியில் இட்டு சுண்டக் காய்ச்சினால் நீர் சுண்டி தைலம் பிரியத் துவங்கும், நெருப்பைக் குறைத்து நன்கு காய்ச்சினால் தைலம் தனியாகவும் சக்கை தனியாகவும் பிரிந்து விடும்.

தைலத்தை வடிகட்டி புட்டியில் அடைத்து வைத்துக்கொண்டு தினசரி தடவி வர தலை குளிர்ச்சியாகவும், முடி கருமையாகவும் நன்கு ஆரோக்கியமாக வளரும். அதிகம் தேய்த்தால் சளி பிடிக்கும். குளிப்பதற்கு முன்பும் தடவி குளிக்கலாம். தொடர்ந்து உபயோகித்து வர பொடுகு நீங்கும், முடி உதிர்தல், கண் எரிச்சல், தலைவலி, பித்தக்கொதிப்பு, செம்பட்டைத்தலைமுடி, தூக்கமின்மை போன்ற பற்பல பிரச்சனைகள் தீர்ந்து போகும்.

மசாஜ் செய்யும் முறை

மசாஜ் எண்ணெய் இளஞ்சூடாக இருக்க வேண்டும். கை விரல்களையும் உள்ளங்கைகளையும் பயன்படுத்தவும். தலையில் வட்டமாக, நிதானமாக முடியை பாகங்களாக பிரித்து, எண்ணெயை தடவி நீவிவிடவும்.

எண்ணெய் தலையில் 30-60 நிமிடம் ஊற வேண்டும்.

எண்ணெய் மசாஜ்ஜை வாரம் 2 முறை செய்யவும்.

மூலிகை செறிந்த ‘மஹா பிருங்கராஜ் எண்ணெய், நெல்லி எண்ணெய், ஆர்னிகா எண்ணெய்’ இவை மிகுந்த பலனை அளிக்கும்.

2. கரிசிலாங்கண்ணி தைலம்

தேவையானவை

கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 700 மி.லி.

சுத்தமான நல்லெண்ணை அல்லது தேங்காய் எண்ணெய் – 350 மி.லி.

வெள்ளை கோஷ்டம் (Costus Specesis) – 15 கிராம் சிறிது பாலில் அரைத்தது

செய்முறை

இவற்றையெல்லாம் கலந்து, அடுப்பில் வைத்து காய்ச்சவும். ‘மெழுகு’ பதம் வந்தவுடன் இறக்கி, வைத்துக்கொள்ளவும். இந்த எண்ணெயை எண்ணெய் குளியலுக்கு (தலை, உடலில் தடவிக்கொண்டு) வாரம் இருமுறை பயன்படுத்தவும்.

3. பிருங்காமல தைலம்

தேவையானவை

கரிசிலாங்கண்ணி இலைச்சாறு – 500 மி.லி.

நெல்லிக்காய் சாறு – 500 மி.லி.

நல்லெண்ணை – 500 மி.லி.

பசும் பால் – 1 லிட்டர்

அதிமதுர விழுது – 200 கிராம்

செய்முறை

கரிசிலாங்கண்ணி, நெல்லிக்காய் இவற்றின் சாறு எடுக்க – தனித்தனியாக இடித்து, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒவ்வொன்றிலிருந்து 500 மி.லி. சாறு எடுக்கவும். (நெல்லிக்காயை இடிக்கும் முன் விதைகளை எடுத்து விடவும்). கிடைத்த மொத்தம் 1 லிட்டர் சாற்றை 500 மி.லி. எண்ணெயுடன் நீர் வற்றும் வரை காய்ச்சவும். எண்ணெய் பதம் கெட்டியாகும் போது, கொஞ்சம் கொஞ்சமாக பாலை சேர்க்கவும். நீர் வற்றகாய்ச்சி, கலவை கெட்டியாகும் போது அதிமதுர விழுதை சேர்க்கவும். கலவையின் பதம் “மணல்” போல் வரும் வரை காய்ச்சி, பின் இறக்கவும். மஸலின் துணியால், 2,3, முறை வடிகட்டி, உபயோகிக்கவும். இந்த தைலம் முடிக்கு பளபளப்பை தரும். முடி உதிர்தல், இளநரையை நிறுத்தும்.

4. தூர்வாதி தைலம்

 தேவையான பொருட்கள்

சுத்தம் செய்யப்பட்ட அருகம்புல் – 1 கிலோ

அருகம் புல் (கல்கம் செய்ய) – 200 கிராம்

தேங்காய் எண்ணெய் – 1 லிட்டர்

செய்முறை

ஒரு கிலோ அருகம்புல்லை இடித்து, 10 லிட்டர் நீரில், பாதியாக சுண்டும் வரை காய்ச்சவும். காய்ச்சி எடுத்த கஷாயத்தில் 1 லிட்டர் தேங்காய் எண்ணெயை கல்கமாக காய்ச்சி தைல பதத்தில் இறக்கி வைத்துக் கொள்ளவும். இந்த தைலம் முடி அழற்சி, பொடுகு இவற்றை போக்கும்.

5. பிரம்மி தைலம்

தேவையான பொருட்கள்

சுத்தமான தேங்காய் எண்ணெய் – 16 பாகம்

வல்லாரை இலைச்சாறு – 16 பாகம்

கிராம்பு, ஏலக்காய் –  1 பாகம்

இவற்றை கலந்து, நீர்வற்றும் வரை காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். இத்துடன் 16 பாகம் நெல்லிக்காய் சாற்றை சேர்த்துக் கொண்டால் நல்லது.

6.      மூவிலைத் தைலம்

தேவையானவை

மருதாணி இலைச்சாறு – 25 கிராம்

பொன்னாங்கண்ணி இலைச்சாறு – 25 கிராம்

கரிசிலாங்கண்ணி இலைச்சாறு –  5 கிராம்

நல்லெண்ணெய் – 50 கிராம்

செய்முறை:மேற்சொன்னவற்றை பெரிய பாத்திரத்தில் இட்டு, காய்ச்சவும்.


Spread the love