சீரைத் தேடின் ஏரைத் தேடு என்பார்கள். உடல் சீரைத் தேட வேண்டுமானால் கீரைகளைத் தான் தேட வேண்டும். நோயை விரட்டுவது மட்டுமல்ல.. நோய் வராமல் தடுக்கும் மகத்தான சக்தியும் கீரைகளுக்கு உண்டு. ஒவ்வொரு கீரையும் உடலுக்கு சக்தியளித்து, ஆரோக்கியத்துக்கு அத்தாரிட்டியாக செயல்படுகின்றன.
கீரைகளில் பலவகைகள் உள்ளன. நமக்கு அதிகம் தெரிந்தது அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை மட்டும்தான். காரணம், தெருவில் விற்பவர் தொடங்கி, மார்க்கெட்டில் விற்பவர்கள் வரை நாம் பார்ப்பது இந்தக் கீரைகளைத்தான்.
கீரைகளில், அரைக்கீரை, சிறுகீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கன்னி, பசலை, புளிச்சக்கீரை, தண்டுக்கீரை, புதினா, முள்ளங்கிக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளி, வெந்தயக்கீரை, முடக்கற்றான், குப்பைமேனி, வல்லாரை, தூதுவளை, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, தாளிக்கீரை, பசலை, ஆரைக்கீரை, முசுமுசுக்கை, கரிசலாங்கண்ணி, பண்ணைக்கீரை, காசினி போன்ற பல்வேறு கீரைகள் உள்ளன. இந்தக் கீரைகள் அனைத்தும் மகத்தான மருத்துவ குணங்கள் உள்ளன.
நம் நாட்டில் தடுக்கி விழுந்தால் சர்க்கரை நோயாளியையும், ரத்தக் கொதிப்பு நோயாளியையும் பார்க்கலாம். பலருக்கும் சுகர் ஏறியிருக்கும்; கொதிப்பு எகிறியிருக்கும். இதுபோன்ற நோய்கள் அதிகரித்திருப்பதற்கு முக்கிய காரணம் முறையான உணவு சாப்பிடாததும், வாழ்க்கை மாற்றங்களும்தான். தினமும் ஒரு கீரை உணவில் சேர்த்துக் கொண்டு வருபவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி பெருகி எந்த நோயும் அண்டாது. உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
வீட்டிலேயே நமக்கு கிடைக்கும் குறைவான இடத்திலும் மற்றும் தொட்டிகளிலும் கீரைகளை வளர்த்து சமையலுக்குப் பயன்படுத்தலாம். சிறுதோட்டங்களில் கோவை, மூக்கற்றை, துத்தி, குப்பைக்கீரை, முள்ளுக்கீரை, குப்பைமேனி போன்றவை களைச்செடிகளாகவே முளைத்து கிடக்கும். இவற்றை வளர்ப்பது எளிதானது. தொட்டிகளில் பிரண்டை, தூதுவளை, கரிசலாங்கண்ணி, முடக்கற்றான் போன்றவற்றை வளர்க்கலாம்.
சிறுவர்களுக்கு விட்டமின் குறைபாட்டினால் வாயின் ஓரங்களில் புண்கள் ஏற்படும். அத்துடன் உள்தாடைப்பகுதிகள் மற்றும் நாக்கில் வெண்ணிற புண்கள் உண்டாகும். இதற்கு, கல்யாண முருங்கை துளிர் இலைகளை பறித்து வெறுமனே மென்று தின்னலாம். அல்லது துளிர் இலைகளை பருப்பு சேர்த்து கூட்டுச் செய்து கொடுக்கலாம். இதனால் நல்ல பலன் தெரியும்.
சளித்தொல்லையால் அவதிப்படுபவர்கள் முசுமுசுக்கை கீரையை அரைத்து தோசைமாவில் கலந்து தோசையாக வார்த்து சாப்பிடலாம். அல்லது ஊறவைத்த பச்சரிசி, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கைப்பிடி முசுமுசுக்கை இலை, பொரித்த பெருங்காயம், உப்பு சேர்த்து கரகரப்பாக அரைத்து அடை செய்து சாப்பிட, சளித்தொல்லை நீங்கும்.
வறட்டு இருமலுக்கு தூதுவளை சிறந்த மருந்து. இதைத் துவையலாகச் செய்து சாப்பிட்டு வர இருமல் காணாமல் போகும். முருங்கையின் பயன் ரொம்ப அதிகம். முருங்கையை வீட்டிற்கொரு மரமாக வளர்த்திருப்பார்கள். அதன் பயன் மிக மிக அதிகம். முருங்கை கீரை உடலுக்கு இரும்புச்சத்து அளித்து ரத்த விருத்தியை உண்டாக்கும்.
கருப்பை கோளாறுகளை துத்திக்கீரை நீக்கும். மூட்டில் தேங்கும் வாயுப் பிரச்னைகளை முடிவுக்கு கொண்டு வருவது முடக்கற்றான். சிறுநீர் நன்றாக வெளியேற முள்ளங்கிக்கீரை உகந்தது. பசலையில் சிவப்பு, பச்சை என இரு வகைகள் உள்ளன. இரண்டுமே இரத்த விருத்தியையும் உடலுக்கு வலுவும் அளிக்கின்றன. இரும்புச்சத்து கொண்ட தண்டுக்கீரை பெண்களின் கருப்பை தொந்தரவுகளைத் தவிர்க்கக் கூடியது. கரிசலாங்கண்ணிகளில் மஞ்சள் நிறப்பூக்கள் கொண்டது உணவுக்கு ஏற்றது.
தலைமுடி பாதுகாப்பிற்கு காய்ச்சப்படும் எண்ணெயில், கறிவேப்பிலை, கரிசலாங்கண்ணி, பொன்னாங்கண்ணி, சிறுகீரை, மருதாணி இலை ஆகியவற்றை சம அளவு எடுத்து அரைத்து சிறு அடைகளாகத் தட்டி, நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சவும். பின்னர் ஆற வைத்து வடிகட்டி எடுத்து கூந்தல் தைலமாக பயன்படுத்திவர, கூந்தல் கருமையாக செழித்து வளர்வதுடன் முடி உதிர்தலும் குறையும்.
தலையில் பொடுகு இருந்தால் பொடுதலை கீரையை அரைத்து தலையில் தடவி, சீயக்காய் தேய்த்துக் குளித்துவர விரைவில் நிவாரணம் கிடைக்கும். மேலும் பொடுதலை கீரையை துவையலாக அரைத்துச் சாப்பிட்டுவந்தால் பொடுகிலிருந்து சீக்கிரமே விடுதலை கிடைக்கும்.
கீரையைப் பொரித்துச் சாப்பிடுவதால் பலனில்லை. மேலும் கீரைகளை வெயிலில் உலர்த்தவும் கூடாது. இதனால் அதில் உள்ள சத்துக்கள் அழிந்து போகின்றன. அதோடு வெயிலில் உலர்த்துவதால் கீரையில் உள்ள சத்துக்களும் அழிந்து போகின்றன.
தினமும் உணவில் கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆரோக்கியமாக வாழுங்கள்.