நெய்யில் மட்டும்தான் வைட்டமின் ஏ இருக்கு

Spread the love

பால் பொருட்களிலேயே அதிக சுவையையும், இனிய நறுமணத்தையும் கொண்டது நெய் தான். தனியாகப் பிரித்தெடுக்கப்பட்ட வெண்ணெய் அல்லது பால் கொழுப்பு உருக்கப்படும் போது நெய்யாகிறது. வெண்ணெய்யைச் சுமார் 100 டிகிரி சி வெப்பத்தில் உருக்குகின்ற போது அதிலுள்ள நீர் ஆவியாகி, நெய் கிடைக்கிறது.

நெய் வெள்ளை நிறத்திலிருந்து, இள மஞ்சள் நிறம் வரை அதிலுள்ள கரோட்டின் அளவைப் பொறுத்தது. நெய்யில் ஏறத்தாழ 8 சதவிகித அளவு தாழ்நிலை செறிவுற்ற கொழுப்பு அமிலங்கள் இருப்பதனால் நெய் எளிதாக செரிமானம் ஆகிறது. இவ்வமிலங்கள் மிகச்சிறந்த உண்ணத்தக்க கொழுப்புகள். மேலும் நெய்யைத் தவிர பிற தாவர எண்ணெய்கள் எதிலும் இவை காணப்படுவதில்லை. இது குறித்தே பண்டைய ஆயுர்வேத ஆசிரியர் பவபிரகாசர்.

“நெய் ஒரு இனிய இரசாயனம். சுவை மிக்க நெய், ஜீரணத்தைக் கூட்டிக் கண்களை ஒளிபெறச் செய்கிறது. உடலுக்கு வலுவையும் பொலிவையும் தந்து நோயிலிருந்து காக்க வல்லது. நினைவாற்றலையும், வாழ்நாளையும் உயர்த்த வல்லது” என்று குறிப்பிட்டுள்ளார்.

நெய்யில் ஏ, டி, இ, கே ஆகிய விட்டமின்கள் உள்ளன. இதில் வைட்டமின் ஏ – யும், இ – யும் ஆக்ஸிஜனேற்ற எதிர்ப்பிகளாக இருப்பதனால் ஆக்ஸிஜனேற்றத்தால் நேரும் தீய விளைவுகளை தடுக்க உதவுகின்றன. நெய் மற்றும் மீன் எண்ணெய்யைத் தவிர வேறு எந்த தாவர எண்ணெய்களிலும், கொழுப்புகளிலும், வைட்டமின் ஏ காணப்படுவதில்லை. வைட்டமின் ஏ உடலில் உள்ள எபிதீலியல் திசுக்களை கட்டுக் குலையாமல் பாதுகாக்கிறது. மேலும் இது கண்ணின் கருவிழியைச் சுற்றிலும் அதிக ஈரப்பசையை அளித்து பார்வையிழப்பு நேராமல் பாதுகாக்கிறது. இன்றியமையாத கொழுப்பு அமிலமான லினோலிக் அமிலம் நெய்யில் 4 -& 5% வரை காணப்படுகிறது. இது ஒழுங்கான உடல் வளர்ச்சிக்குத் துணை புரிகிறது.

நெய் தயாரிப்பின் போது, அதிலுள்ள கேஸீன் புரதம் கழிவுறச் செய்யப்படுகிறது. ஆனால் இந்த கேஸீனால் எவ்வித நன்மையுமில்லை. மிருகங்களில் இப்புரதத்தை உட்செலுத்தி ஆய்வு செய்த போது, அவற்றின் கொலஸ்ட்ரால் அளவு அதிகமானதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. நெய்யில் வேதிப்பொருட்கள் மற்றும் நுண்ணுயிரிகளை எதிர்க்கக்கூடிய ஆற்றல் இருப்பதால் இவற்றினால் நெய் கெட்டுப் போவதில்லை.

நெய், 35 டிகிரி சி வெப்பத்திலேயே அதாவது மனிதனின் உடல் வெப்ப நிலையை விட குறைவான வெப்பத்திலேயே உருகிவிடக்கூடியது. மேலும் நெய், மற்ற எண்ணெய்கள், கொழுப்புகளைக் காட்டிலும் உயர்ந்த அளவு அதாவது 96% செரிமான விகிதத்தைப் பெற்றிருக்கிறது.

ஆயுர்வேத மருந்துகள் தயாரிப்பில் நெய் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. செரித்தல் உட்கிரகித்தல் உறுப்புகளில் மருந்தினை சேர்த்தல் என்ற மூன்று முக்கிய பணிகளும் சரிவர அமைந்திருப்பது ஒரு மருந்துக் கலவைக்கு மிக மிக இன்றியமையாதது. நெய்க்கு இம்மூன்றையும் செயல்படுத்தக் கூடிய பண்புள்ளது. ஆயுர்வேதக் கலவைகளில் நெய்யுடன் வேறு சில செயல்திறமிக்க பொருள்  சேர்க்கப்படுவதால் மேற்குறிப்பிட்ட மூன்று பணிகளுமே செம்மையாக நடைபெற உதவுகிறது.

லிப்பிட் நிறைந்த செல்களை நோக்கி ஈர்க்கப்படக் கூடிய பண்பு நெய்க்கு இருப்பதால் சிகிச்சை தேவைப்படும் உறுப்புக்களில் உள்ள செல்களை எளிதாகச் சென்றடைகின்றது. நெய்யின் பண்பு மருந்துக் கலவையானது செல்லுக்கும் செல் உள்ளிருக்கும் உறுப்புக்களான மைட்டோகான்ட்ரியா மைக்ரோஸோம் மற்றும் நியூக்ளியர் சவ்வுகளிலும் எளிதாக சென்று சேர உதவுகிறது.

நெய்யில் அதிகம் காணப்படும் வைட்டமின் இ -யும், பீட்டா கரோட்டினும், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் எனப்படும் ஆக்ஸிஜன் எதிர்ப்பிகளாகச் செயல்படுகின்றன.

ஆயுர்வேத மருந்துகளை கிரகித்தல் கடத்துதல் மற்றும் உறுப்புகளில் மருந்தை சேர்ப்பித்தல் ஆகிய மூன்றும் இன்றிமையாத பணிகளிலும் உதவி அமைகின்றது. தினசரி ஒன்று அல்லது இரண்டு டீஸ்பூன் நெய்யை உணவுடன் சேர்த்துக் கொண்டால் அது செரிமானத்தை விரைவுபடுத்தி உணவு உட்கிரகிப்பில் துணைபுரியும்.


Spread the love