இந்திய மக்கள் என்றைக்கும் அன்னிய மோகம் பிடித்து அலைபவர்கள். அந்நிய நாட்டு உடைகள், டிரான்சிஸ்டர்கள், ரேடியோ, கைகடிகாரங்கள், போன்றவை கள்ளச் சந்தையில் அமோகமாக விற்பனையான காலம் போய் இன்று அவைகளின் இடத்தை உணவுகள், தின்பண்டங்கள் பிடித்துக் கொண்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நமது பொருளாதாரத்தை சீர்குலைப்பதல்லாமல், நம் உடல் நலத்தையும் கெடுத்துக் கொண்டிருக்கின்றன.
நம் நாட்டு இட்லி, தோசை, வடை அமெரிக்காவில் பிரபலமாகிக் கொண்டு வரும்பொழுது நாம் வெளிநாட்டு உணவுகளான பீட்சா, பர்கர், பாஸ்தா போன்றவைகளை மென்று கொண்டிருக்கிறோம்.
பதனம் செய்யப்பட்ட அன்னிய நாட்டு உணவுகளை இறக்குமதி செய்து சாப்பிட இந்த தலைமுறை தயாராகிவிட்டது. இந்தப் போக்கில் சமுதாயம் சென்றால் பெண்களுக்கு சமையலறையில் வேலையே இருக்காது. சூப்பர் மார்க்கெட்டுகளில் இத்தகைய உணவுகள் அமோகமாக விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. சின்ன ஊர்களில் கூட அமெரிக்காவில், ஆஸ்ட்ரேலியாவில் விளையும் ஆப்பிள், திராட்சை கிடைக்கின்றன. இவைகள் நம் உடம்பில் நஞ்சை சேர்ப்பதோடு இந்திய பற்றாக்குறை பொருளாதாரத்திற்கு தீர்வு காண முடியாத சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றன.
இன்றைய இளைய சமுதாயம் ஒரு புதிய நுகர்வோர் வட்டத்தை உண்டாக்கி கொண்டிருக்கிறது. அந்நிய முதலீட்டாளர்கள் இவர்களுக்கு தீனிபோடும் வகையில் நச்சுப் பொருட்களை விற்பனை செய்து பணம் பண்ணிக் கொண்டிருக்கின்றனர். வியாபார நுணுக்கமும், விளம்பரங்களும் இந்த ஆடம்பரப் பிரியர்களை ஈர்த்து அன்னிய நச்சுப் பொருட்களுக்கு அடிமையாக்கிக் கொண்டிருக்கின்றன.
பதனப்பட்ட மாமிசங்களான ஆட்டுக்கறி, மீன், பன்றிக்கறி போன்றவை முத்திரை பெற்று இறக்குமதி செய்யப்படுகின்றன. நம்மவரும் முத்திரையிருந்தால் தரம் வாய்ந்ததென்று கருதி சாப்பிட்டு உடலைக் கெடுத்துக் கொண்டிருக்கின்றனர். பாஸ்தா, பாலடைக் கட்டிகள், கிவிப்பழங்கள் அதிக விலை கொடுத்து வாங்குகின்றனர். ஈமு கோழி இறைச்சி உயர்ந்தது, ஆற்றலைக் கொடுக்கவல்லதென்று விளம்பரப்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்கின்றனர். கிவிப்பழத்தைவிட நம் சீதாப்பழம் சத்து மிகுந்ததாகும். ஆனால், நம்மவர் ஏமாந்து விலை போகின்றனர். இன்னும் பெயர் தெரியாத உணவுகள் ஆண்டுக்கு 40 பில்லியன் டாலர் அளவில் இறக்குமதி செய்யப்பட்டு நம் அந்நிய செலாவணியை நசுக்கிக் கொண்டிருக்கின்றன. இன்னும் பத்து ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்படும் உணவு வகைகள் இரட்டிப்பாகி நம்மை கபளீகரம் செய்யும். இதற்கான திட்டத்தை அந்நிய சுறாமீன்கள் தீட்டிள்ளன. நமது பிரதமரும் இதற்கு பச்சைக் கொடி காட்டிவிட்டார்.
சில வருடங்களுக்கு முன்பு இத்தகைய உணவுகளை பெரும் பணக்காரர்கள் மட்டுமே உண்டு மகிழ்ந்தனர். இன்று ஒரு புதிய பணக்கார வர்க்கம் உதயமாகி அமெரிக்க, பிரிட்டன், நாட்டிலுள்ளவர்கள் உண்பதை உண்ண வேண்டுமென்ற மோகத்தில் ஆழ்ந்துள்ளது.
விளம்பரங்கள் எவ்வளவு விளைவிக்குமென்பது நிறைய உதாரணங்களை நாம் தரலாம். கிவிப் பழத்தைச் சாப்பிட்டால் டெங்குக் காய்ச்சல் வராதென்று விளம்பரப்படுத்தப்பட்டு அது கிலோ ரூ.200 க்கு விற்கப்படுகிறது. மேலும் நம் நாட்டில் பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகமாக உபயோகப்படுத்தப்படுவதால் இங்கு விளையும் பழங்கள், காய்கறிகள் உடலுக்கு கேடு, மேல் நாட்டுப் பொருள்கள் விஷமற்றவையென ஒரு விஷமப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டு அதை நம் மக்கள் நம்பத் தொடங்கி விட்டனர். இறக்குமதி செய்யப்படும் உணவுப் பொருட்கள் விஷமற்றவையென என்று சர்டிபிகேட் கிடையாது. அதற்கு ஆதாரமும் கிடையாது. கழிவு செய்யப்பட்ட பொருட்களை இங்கு அனுப்பினால் கூட ஆச்சரியமில்லை. உதாரணமாக மேல் நாட்டில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இந்தியாவில் நன்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதற்கு யார் காரணம்? நாம் யோசித்துப் பார்க்க வேண்டும்.
இந்த இறக்குமதி உணவுகள் நம் அந்நியச் செலாவணியை எப்படி பாதிக்குமென்பதைப் பார்ப்போம்.
2005&06ல் இறக்குமதி,2011&12ல் இறக்குமதி
ஆங்கில காய்கறிகள் 3.5 கோடி ரூபாய் 11 கோடி ரூபாய்
பருப்பு 2500 ” 12000 “
பாலடைக்கட்டி 41 ” 183 “
மீன் 90 ” 490 “
இனிப்புகள் 400 ” 781 “
சமையல் எண்ணெய் 8.9 ” 60000 “
இவைகள் நம் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமானால் நாடு நலிவடையும், இந்தியப் பொருளாதார வீழ்ச்சியடையும் நாட்கள் அதிக தூரத்தில் இல்லை. பாமாயில், சோயா எண்ணை, சூரியகாந்தி எண்ணை அதிகமாக இறக்குமதி 60,000 கோடி அளவில் செய்யப்படுகிறது. இதன் பாதிப்பு போகப் போகத் தான் தெரியும்.
தேங்காய் எண்ணை கொழுப்பு மிகுந்தது என்று பிரசாரம் செய்யப்பட்டது. அதன் மருத்துவ குணங்களை நன்கு தெரிந்து கொண்டதும் மக்கள் இப் பிரச்சாரத்தை நம்பவில்லை. பாமாயிலில் எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ரால் இருப்பதாகத் தெரிந்ததும், ஆலிவ் எண்ணை இறக்குமதி செய்யப்படுகிறது. ஒரு காலத்தில் ஆலிவ் எண்ணை உடம்பில் மட்டும் பூசிக் குளிக்க உபயோகப் படுத்தப்பட்டது. இன்று அது சமையல் எண்ணையாகிவிட்டது. எல்லாம் காலத்தின் கோலம் ஆலிவ் எண்ணைக்கு ஈடானது இலுப்பெண்ணை. இது மருத்துவ குணம் கொண்டது. மேலை நாடுகளில் இது அதிகமாக பயிரடப்படுகிறது. நம் நாட்டில் இலுப்ப மரம் அழிக்கப்பட்டு வருகிறது.
இன்று எல்லாரும் தெரிந்து கொள்ள வேண்டியதென்னவென்றால் உடம்புக்கு கேடு விளைவிக்கும் பாமாயிலில் தயார் செய்யப்படும் பண்டங்கள் தவிர்க்கப்பட வேண்டும். ரொட்டிக் கடையில் வாங்கப்படும் கேக், பட்டர் பிஸ்கட், கையேந்தி பவனில் விற்பனையாகும் போண்டா, வடை, பஜ்ஜி, தோசை போன்றவை பாமாயிலில் செய்யப்பட்டவை. புரிந்து கொள்ளுங்கள்.
பாதாம்பருப்பு, பிஸ்தாப் பருப்பு, உலர்ந்த திராட்சை மற்றும் பல கொட்டைப் பருப்புகள் அத்திப் பழம் போன்றவை உடலுக்கு நல்லது செய்பவை. இவைகளில் இங்கு விளையக் கூடியவைகளை நாம் ஏன் சாப்பிடக் கூடாது? வெளிநாட்டில் விளைந்தால் ஆரோக்யத்தைக் கொடுக்கும், உள்நாட்டுச் சரக்கு நஞ்சானதென்ற எண்ணம் நம்மைவிட்டு அகல வேண்டும்.
இந்திய உணவை உண்போம். மேல் நாட்டு உணவுகளை நாம் தவிர்ப்போம். இல்லையேல் நமது நாடு திவாலாகிவிடும். இதற்கு அரசியல்வாதிகள் துணை போகிறார்கள். இவர்களை இனங்கண்டு அரசியலைவிட்டு ஒதுக்குவோம். இவற்றை எதிர்க்க நாம் நம் மக்களை ஒன்று திரட்ட பாடுபடுவோம். பாடுபட்டால் பலனுண்டு. ஆம். நம் உடல் நலம் மேம்படும்.
வெளிநாட்டு உணவுப் பொருட்களில் உபயோகப்படுத்தப்பட்டவையென்னவென்று பார்ப்போம். கீழே காண்பவற்றைப் படியுங்கள்
ராஜ்மா & சிவப்பு பெரிய அவரை விதை
தைம் & ரோஸ்மேரி & வாசனைக்காக சேர்க்கப்படும் இலைகள்.
வெள்ளை மிளகு & காரம் குறைந்தது, கறுப்பு மிளகில் காரம் அதிகமிருக்கும்.
ஹாரிகாட் பீன்ஸ் & காய்ந்த, வெள்ளை பீன்ஸ்
செலரி & நீளமான கீரை இலை
டோமோடா ப்யூரி & தக்காளிக் கூழ்
க்ரீம் ஸ்டைல் கார்ன் & சோள முத்துக்கள் பக்குவப்படுத்தப்பட்டவை
கேஸ்டர் சுகர் & பொடித்த சர்க்கரை
மிக்சட் ஸ்பைஸ் & கிராம்பு, ஜாதிக்காய், லவங்கம் சமமாக கலந்து பொடிக்கப் பட்டது.
சோயா சாஸ் & சோயா பீன்சில் தயாரான சாஸ்
ஜசிங் சுகர் & சர்க்கரை,சோளமாவு கலந்தது
மோனோ சோடியம் & அஜினோ மோட்டோ எனப்படும் உப்பு.
ஸ்பகெட்டி & சேமியா போன்ற இத்தாலிய சேவை. தேன் குழல் போல தடிமனாக இருக்கும்.
பார்சவி & கொத்தமல்லி இலைபோல இருக்கும்.