வெயில் காலத்தில் அம்மை நோய் வருவது சகஜமாக உள்ளது. கோடை வெப்பத்தால் பூமி சூடாகும்போது, அசுத்தமான சுற்றுச்சூழல் உள்ள இடங்களில் கொட்டிக் கிடக்கிற குப்பை, கூளங்களில் வாழும் பல்வேறு கிருமிகள் உயிர்த்தெழுந்து, காற்று மூலம் பரவுகின்றன. இவற்றில் ஒன்றுதான் ‘வேரிசெல்லா ஜாஸ்டர்’ எனும் வைரஸ் கிருமி. இதன் மூலமாகத்தான், சின்னம்மை நோய் ஏற்படுகிறது.
சின்னம்மை நோய், குழந்தை முதல் பெரியவர்கள் அனைவரையும் பாதிக்கும். என்றாலும் பத்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைத் தாக்குவது இதன் இயல்பு. அதிலும் குறிப்பாக மக்கள் அதிகமாக வாழும் இடங்கள், நெரிசல் மிகுந்த இடங்கள், அசுத்தம் நிறைந்த இடங்கள், குடிசைப் பகுதிகள், விடுதிகள் போன்ற இடங்களில் வசிப்போருக்கும், நோய் எதிர்ப்புசக்தி குறைந்தவர்களுக்கும் இந்த நோய் விரைவில் பரவிவிடும். குடும்பத்தில் ஒருவருக்கு இந்த நோய் வந்தால், மற்றவர்களுக்கும் பரவ அதிக வாய்ப்புண்டு.
நோயாளியின் அம்மைக் கொப்புளங்களிலும் சளியிலும் இந்த நோய்க் கிருமிகள் இருக்கும். அம்மைக் கொப்புளங்கள் உடைந்து நீர் வெளியேறும்போது இந்த வைரஸ் கிருமிகள் மற்றவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும். குறிப்பாக, நோயாளியோடு நெருக்கமாகப் பழகுபவர்களுக்குச் சின்னம்மை நோய் இந்த வழியில் பரவுகிறது. நோயாளியின் சளியில் இந்த வைரஸ் கிருமிகள் வெளியேறும்போது, காற்று மூலம் பிறருக்குப் பரவுகிறது. அடுத்து, நோயாளி பயன்படுத்திய உடைகள், உணவுத்தட்டுகள், போர்வை, துண்டு போன்றவற்றின் மூலமும் இந்த நோய் அடுத்தவர்களுக்குப் பரவலாம். இதனால்தான் அம்மை நோயாளிகளைத் தனிமைப்படுத்தி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
முதலில் சாதாரணத் தடுமக் காய்ச்சல் போலத்தான் நோய் தொடங்கும். இரண்டாம் நாளில் உடல்வலி, தலைவலி, சோர்வு அதிகமாகும். காய்ச்சல் கடுமையாகும். உடலில் அரிப்பு, நமைச்சல், எரிச்சல் ஏற்படும். வாயிலும் நாக்கிலும் சிறு கொப்புளங்கள் தெரியும். மார்பிலும் முதுகிலும் சிவப்பு நிறத் தடிப்புகள் தோன்றும். அடுத்த 24 மணி நேரத்தில் இவை எல்லாமே நீர் கோத்த கொப்புளங்களாக மாறிவிடும்.
வழக்கமாக இந்த நோய் தொடங்கிய ஏழாம் நாளில் காய்ச்சல் குறையும். அடுத்த நான்கு நாட்களில் கொப்புளங்கள் சுருங்கி, பொருக்குகள் உதிரும். அம்மைத் தழும்புகள் சில மாதங்களில் சிறிது சிறிதாக மறைந்துவிடும். ஒருமுறை சின்னம்மை வந்து குணமானவருக்கு, அவரது உடலில் இந்த நோய்க்கான எதிர்ப்பு அணுக்கள் உருவாகிவிடுவதால், ஆயுள் முழுவதும் அவருக்கு இந்த நோய் மீண்டும் வராது.
பொதுவாக அம்மை நோய்கள் குறித்து நம் சமூகத்தில் பலவிதமான தவறான கருத்துகளும் மூடநம்பிக்கைகளும் நிலவுகின்றன. அதனால் பெரும்பாலோர் சிகிச்சை பெறாமல் இருந்துவிடுகின்றனர். கிராமப்புறங்களில், ஏன் நகர்ப்புறங்களில்கூட அம்மை நோய் ஏற்பட்டால் மருந்து, மாத்திரை சாப்பிடக் கூடாது என்ற எண்ணம் மக்கள் மனதில் வேரூன்றி உள்ளது. அம்மைக் கொப்புளங்களில் வேப்பிலை அல்லது மஞ்சளை அரைத்துப் பூசுவது ஒன்றுதான் மருந்து என்று சொல்லி, அதை மட்டுமே தினமும் அரைத்துப் பூசுவார்கள். வேப்பிலைக்கும் மஞ்சளுக்கும் நோய் எதிர்ப்புச் சக்தி உண்டு. ஆனாலும் இந்த நோய்க்கான வைரஸ் கிருமிகளை ஒழிக்க இவை மட்டுமே போதாது. மருத்துவரின் ஆலோசனை பெற்று அவர் தரும் மருந்து மாத்திரையை தொடர்ந்து 5 நாட்களுக்கு சாப்பிட்டால் விரைவிலேயே சின்னம்மை குணமாகிவிடும்.
பொதுவாக அம்மை நோயாளியின் உடலில் நீரிழப்பு சற்று அதிகமாக இருக்கும் என்பதால் பால், நீர்மோர், கரும்புச்சாறு, இளநீர், ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை உள்ளிட்ட பழச்சாறுகள், அரிசிக்கஞ்சி, ஜவ்வரிசிக்கஞ்சி, சத்துமாவு, கூழ், குளுகோஸ், சத்துப்பானங்கள், உப்புச் சர்க்கரைக் கரைசல் போன்ற நீர்ச்சத்து நிறைந்துள்ள உணவை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் வைட்டமின் ஏ சத்து நிறைந்த காரட், பப்பாளி, தக்காளி, பசலைக்கீரை போன்றவற்றையும் சாப்பிட வேண்டும்.
சின்னம்மை நோய் குழந்தைகளைத் தீவிரமாகத் தாக்கினால், நிமோனியா, மூளைக்காய்ச்சல், எலும்பு சீழ்மூட்டழற்சி, இதயத்தசை அழற்சி, சிறுநீரக அழற்சி போன்ற கடுமையான பாதிப்புகள் ஏற்படலாம். அப்போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து வரலாம். கர்ப்பிணிகளுக்குச் சின்னம்மை வருமானால், கருவில் வளரும் சிசுவைப் பாதித்துப் பிறவி ஊனத்தை உண்டாக்கலாம். இவை எல்லாமே சின்னம்மை நோய் உள்ளவருக்கு உடனடியாகத் தோன்றுகிற சிக்கல்கள் ஆகும்.
சின்னம்மையால் துன்பங்கள் வந்து சிரமப்படுவதைவிட, இதை வர விடாமல் தடுத்துக்கொள்வதே புத்திசாலித்தனம். சுய சுத்தம் பேணுவதும் சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்துக்கொள்வதும் சின்னம்மையைத் தடுக்க உதவும் சிறந்த வழிகள். அம்மை நோயாளிகளை வீட்டில் தனிமைப்படுத்துவது நல்லது. இந்த நோயாளிகள் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக் கூடாது. சின்னம்மை மற்றும் அக்கி அம்மை வராமல் தடுத்துக்கொள்ள, இப்போது தடுப்பூசி உள்ளது. ‘சின்னம்மை தடுப்பூசி’ என்று அதற்குப் பெயர்.
குழந்தைக்கு 15 மாதங்கள் முடிந்ததும் முதல் தவணைத் தடுப்பூசியும், 5 வயதில் இரண்டாம் தவணைத் தடுப்பூசியும் போட வேண்டும். ஆரம்பத்திலேயே இத்தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாதவர்கள் 13 வயதுக்குள் இதைப் போடுவதாக இருந்தால், மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக்கொள்ளலாம். 13 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், இரண்டு மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போட்டுக் கொள்ளவேண்டும். சின்னம்மை நோய் வந்த பிறகு, இந்தத் தடுப்பூசியைப் போட்டால் பலன் தராது.