புத்துணர்ச்சி தரும் மூலிகை டீ

Spread the love

மலைகளில் உள்ள காடுகளை அழித்து தேயிலை, காப்பித் தோட்டங்களை நம் நாட்டில் வெள்ளையர் ஆச்சியில் உருவாக்கப் பட்டு இன்று வரை தேயிலை உற்பத்தியில் முதன்மை நாடாக உள்ளோம். தேயிலைத் தோட்டங்களினால், தேயிலைச் சாகுபடி பரப்பளவு அதிகரிக்க, அதிகரிக்க அதற்கான தொழிற்சாலைகளும்  பெருகின.

தேயிலை செடியின் மூலம் பறிக்கப்பட்ட இலைகள் தூள்களாக்கப்பட்டு, காப்பிக் கொட்டைகள் மூலம் தாயாரிக்கப்பட்ட காபித்தூளும் மூன்று வகையான தரங்களாக அமைந்துள்ளன. முதலாவது மற்றும் இரண்டாவது தரமானது வெளிநாட்டிற்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இங்கு நாம் அருந்தும் தேனீர் தூள், டஸ்ட் தேயிலை தூள் என்ற மூன்றாம் தர தூளாகும்.

தேயிலையும், காப்பி பயிரும், நமது நாட்டிற்கான செடிகள் இல்லை. வெளிநாட்டில் உள்ள சீதோஷன நிலையில் வளர்ந்தவை. இதன் பானங்கள் அருந்துவதால் உடலுக்கு நன்மையை விட தீமைகள் தான் அதிகம் ஏற்படுகிறது. இதற்கு பதிலாக நமது நாட்டிற்குரிய மூலிகைகளை தேனீர் பானமாக தயாரித்து உடலுக்கு ஆரோக்கியமும் புத்துணர்வும் பெறலாம். இலந்தைபழம், கற்பூரவல்லி, புதினா, துளசி, செம்பருத்தி, மாதுளை, சீரகம், அரசவிதை, ஆலவிதை, தூதுவளை, ஆவாரம் பூ, வெற்றிலை என்று பல மூலிகையிலிருந்து விதை, இலை, வேர் போன்றவைகளின் மூலம் தயாரிக்கப்பட்ட பானங்களை நாம் அருந்தலாம். இத்தேனீர் பொடிகளை தயாரிப்பது எப்படி என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ஆவாரம் பூ தேனீர்        

ஆவாரம் பூ பொடி, பட்டை, ஏலக்காய் பொடியுடன் நாட்டுச்சர்க்கரையை கலந்து, உருவாக்கப்பட்டது. ஒரு டம்ளர் தண்ணீருக்கு இரு தேக்கரண்டி கலக்கி கொதிக்க வைத்து அருந்தலாம். நீரழிவு நோயாளிகளுக்கு  உகந்தது. தினசரி காலை மாலை என அருந்தி வரலாம். உடல் மினுமினுப்பு அதிகரிக்கும். மலச்சிக்கல் தீரும். சிறுநீரக பிரட்சனைகள் குணமாகும். ஆன்டி ஆக்ஸிடன்ட் அதிகமிருப்பதால், புற்று நோயைக் கட்டுபடுத்தும்.

நெருஞ்சில் டீ

சர்க்கரை மற்றும்  சிறுநீரகப் பிரச்சனைக்கு  நெருஞ்சில் டீ அருந்தலாம். இதில் துளசி இலை, சிறு நெருஞ்சில்  விதைகள், சுக்கு, தனியா, திரிகடுகம் போன்றவை பொடியாக்கப்பட்டு அத்துடன் பனங்கற்கண்டு  சேகரிக்கப்படுகிறது. காலை மாலை என தொடர்ச்சியாக இரண்டு வாரங்கள் வரை அருந்தி வரலாம், மேற்கூறிய தேனீர் மூலம் உடல் எடை இழப்பு, தலைவலி, சோர்வு, இரவில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது வாய் துர்நாற்றம், உயர்  இரத்த அழுத்தம், பசியின்மை, நீர்க்கட்டி குணமாகும்.

புதினா டீ

புதினா இலை மற்றும் நாட்டுச்சர்க்கரை கலந்தது. இது குடல் புண், வயிறு எரிச்சல், மலச்சிக்கல், செரிமானப் பிரச்சனையை குணமாக்கும். புதிதாக பறிக்கப்பட்ட புதினா இலைகளை வெயிலில் காய வைத்துப் பின்னர் தூளாக்கி மெல்லிய பவுடராக வடிகட்டிக் கொள்ளவும். இது சருமம் சார்ந்த பிரச்சனைகள் குணமாகும். நோய் எதிர்ப்புச் சக்தி கூடும். முகச்சுருக்கங்கள் வயது முதிர்ச்சியினால் ஏற்படும் சரும பிரச்சனைகள் நீங்கும். இதனை தேன் கலந்து அருந்தலாம்.

மருதம்பட்டை

மருதம்பட்டை, ஆவாரம் பூ, சீரகம் ஒருங்கிணைந்த கலவை தேநீர். சித்த, ஆயுர்வேத மருத்துவ முறைகளில் இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட மூலிகைகளை ஒன்று சேர்த்து மூலிகை பானம் தயாரிக்கப் படுகிறது. மேற்கூறிய மருதம் பட்டை, ஆவாரம் பூ, சீரகம் கலந்து தேனீர் இதயம் சார்ந்த அனைத்துப் பிரச்சனைகளையும் சரி செய்கிறது.

கற்பூரவல்லி டீ

தேயிலை ஒரு டீஸ்பூன், கற்பூரவல்லி இலை பொடி கால் தேக்கரண்டி, தேன் ஒரு தேக்கரண்டி, தேயிலை தூளுடன் உலர்த்திய கற்பூரவல்லி இலை தூளை சேர்த்து கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி கொண்ட பின் தேன் கலந்து அருந்தவும். இதில் வைட்டமின் சி, இரும்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, ஒமேகா3 அமிலம் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

மல்லிகைப்பூ டீ  

மல்லிகைப்பூ இரண்டு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு 2 மணி நேரம் நீரில் போட்டு மூடி எடுத்துக்கொள்ளவும். மல்லிகைப்பூ வாசனையுடன் உள்ள அந்த நீரை கொதிக்க வைத்து கிரீன் டீ தூளை ஒரு தேக்கரண்டி சேர்த்து கொள்ளவும். இறக்கி வடிக்கட்டிய பின்பு பணங்கற்கண்டு, ஒரு தேக்கரண்டி கலந்து அருந்தி வர தூக்கம் நன்கு வரும், ஆண்மை அதிகரிக்கும். மன அழுத்தம் நீங்கும், மூளை பலம் பெறும்.

ஓம வல்லி டீ

கிரீன் டீ தூளை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொண்டு ஓம வல்லி இலைகள் 5, மிளகு 5 எடுத்து நீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பிறகு வடிகட்டி அதனுடன்  பணங்கற்கண்டு கலந்து அருந்தி வர சளி, மலச்சிக்கல், ஆஸ்துமா, மூலம் குணமாகும். மேலும் நுரையீரல் தொற்றுநோய் வராமல் தடுக்கப்படும்.

செம்பருத்தி தேனீர்

மலேசியாவின் தேசிய மலர் செம்பருத்தி பூ என்று தெரியுமா உங்களுக்கு? உடல் பருமனாவதை தடுக்கும்.  இரத்த அழுத்த அளவை குறைக்கும். மன அழுத்தம் உடல் உள்ளழற்சி நீங்கும். கல்லடைப்பு வராமல் தடுக்கும். மாதவிடாய் கால வலியை குறைக்கும். இதயத்தை வலுப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

தேவைப்படும் பொருட்கள்:

செம்பருத்திப் பூ                     –                        1

ஏலக்காய், கிராம்பு தலா        –                                    2

மிளகு                                    – 5

பால்                                     –   லு கப்

பணங்கற்கண்டு                    –                                     1 தேக்கரண்டி

5 இதழ்கள் கொண்ட செம்பருத்தி பூவை எடுத்துகொண்டு, காம்பு, மகரந்த தண்டை நீக்கி விட்டு ஒரு டம்ளர் நீரில் கொதிக்கவைத்து, இதனுடன் ஏலக்காய், கிராம்பு, மிளகு பொடி இவற்றை சேர்த்து கொள்ளவும். கொதித்த பின்னர் இறக்கி வடிகட்டு பால், பணங்கற்கண்டு சேர்த்து பருகவும்.

முருங்கைப்பூ காபி        

ஒரு தேக்கரண்டி முருங்கைப்பூ வருமாறு பூக்களை சேகரித்து சுத்தம் செய்து உலர்த்தி பொடி செய்து கொள்ளவேண்டும். காய்ச்சிய பால் ஒரு டம்ளரில் இந்த பொடியை, பணங்கற்கண்டு சேர்த்து கலந்து இளஞ்சூடாக பருகி வரலாம். உடலிற்கு வலிமை தரும், ஆண்மை நினைவு ஆற்றலை அதிகரிக்கும். எலும்புகளை வலுவாக்கும்.


Spread the love