நாம் சாப்பிடும் பிஸ்தா பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின் விதை தான். இதில் கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி – அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை அதிகம் உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக நம்மால் பயன்படுத்தப்படும் பாரம்பரியம் மிக்க இயற்கையின் மருத்துவ குணம் மிக்க உணவுப் பொருள் என்று கூறலாம்.
பிஸ்தா பருப்பு, மிகுந்த ஊட்டச்சத்து உடையது. உதாரணமாக, சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவில் இருக்கின்றன.
மற்ற எல்லா பருப்பு வகைகளைக் காட்டிலும் பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே நமது உடல் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை செய்கின்றன.
பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய நோய்களை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கி இதய நோய்கள் வருவதை குறைக்கும் சக்தியுள்ளது.
மன அழுத்தத்தினால் நமக்கு வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு சிறந்த வகையில் கட்டுப்படுத்தும். இதய நோய் வருவதற்கு காரணமான லிப்போ புரதங்களின் அளவை குறைத்து இதய நோய்கள் வருவதை தடுக்கும் தன்மை கொண்டது. பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது.
பிஸ்தா சாப்பிடுவதால், பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது. நீரிழிவு நோயாளிகளின் உடலில் கிளைசெமிக், இரத்த அழுத்தம், நோய்த் தொற்று மற்றும் பருமன் ஆகியவற்றைக் கட்டுக்குள் வைக்கிறது என்பது ஈரானியர்களின் ஆராய்ச்சியில் கண்டுபிடிக்கப்பட்டதாகும்.
பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மேலும் இது குடலில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கும் உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியாக்கள் இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்ற பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலிக் கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.
இவை பெருங்குடல் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவும், மேலும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ப்யூட்ரேட் போன்ற ஒரு சில பயனுள்ள சிறு-சங்கிலி கொழுப்பு அமிலங்கள் குடலில் பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.
பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் நம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள வைட்டமின் B6-ம் இதற்கு பயன்படுகிறது. அது உடலில் நோய் எதிர்ப்புத் திறனின் அளவை அதிகரிக்கச் செய்கிறது. பெண்களின் கர்ப்ப காலத்தில் அவர்களின் உடலுக்குத் தேவையான முக்கியமான பல ஊட்டச்சத்துக்களை பிஸ்தா கொடுக்கிறது.
பிஸ்தா சேர்த்து சிற்றுண்டிகளை மிக எளிதாகவும், குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, அவர்களுக்கு எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது.