தேங்காய் “ஆர்க்காசியேயி” என்ற பனைத் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. தென்னையின் அறிவியல் பெயர் “கோகோஸ் நியூசிபெரா” என்பதாகும்.
தேங்காய்ப்பால் தேங்காயிலிருந்து எடுக்கப்படும் மிகவும் அதிசயமான திரவம் என்பது முற்றிலும் உண்மையே. ஏனெனில், இதில் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களை அதிகளவு கொண்டுள்ளது. தேங்காய் பால் எடுக்க மிகவும் நன்றாக முற்றிய தேங்காயே சிறந்தது. தேங்காய் பாலினை உணவாக உட்கொள்ளும் வழக்கமானது, தேங்காய் அதிகளவு கிடைக்கும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா, கரீபியன், மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் ஹவாய் பகுதிகளில் பழங்காலந்தொட்டே இருந்துள்ளது.
தேங்காய்ப்பால் என்பது உண்மையில் பால் அல்ல. தேங்காயின் வெண்ணிற கடிமான சதைப்பகுதியிலிருந்து சில செயலாக்கத்திற்கு பின்பு கிடைக்கும் வெண்மையான திரவமே தேங்காய்ப்பாலாகும்.
தேங்காய் காய்த்த, ஒரு வருடத்தில், முற்றிய தேங்காயாகிறது. இந்த முற்றிய தேங்காயில் தான் வெண்ணிற கடிமான சதைப்பகுதி தடித்ததாக இருக்கும். இதிலிருந்துதான் இயற்கை இனிப்புடன் கூடிய தேங்காய் பாலானது அதிகளவு தயாரிக்கப்படுகிறது.
தேங்காய் பாலினை தயார் செய்யும் முறை
தேங்காயின் மேற்புறமுள்ள மட்டை நீக்கப்பட்டு உள்ளிருக்கும் கடினமான ஓட்டுப்பகுதி பிரித்து எடுக்கப்படுகிறது. ஓட்டினுள் இருக்கும் கடிமான வெண்மை நிற சதைப்பகுதி துண்டுகளாக்கப்பட்டு தண்ணீருடன் சேர்த்து அரைக்கப்பட்டு வடிகட்டியால் வடிகட்டப்படுகிறது. வடிகட்டியிலிருந்து வெளியேறும் பால் போன்ற திரவமே தேங்காய் பால் ஆகும். தேங்காயை பூவாகத் துருவி வெந்நீரில் சிறிது நேரம் மூழ்கவைத்து வடிகட்டியும் தேங்காய் பால் தயார் செய்யலாம்.
தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துகள்
தேங்காய் பாலில் வைட்டமின்கள் சி, இ, கே, H1 (தையமின்), H2 (ரிபோஃப்ளோவின்), H3 (நியாசின்), H5 (பான்டாதெனிக் அமிலம்), H6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன. மேலும் இதில் தாது உப்புக்களான கால்சியம், செம்பு, இரும்புச்சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம், பொட்டாசியம் போன்றவைகள் மட்டுமல்லாமல், கார்போஹைட்ரேட், புரோட்டின், நார்ச்சத்து, நிறைவுற்ற கொழுப்புகள், இயற்கைச் சர்க்கரை ஆகியவையும் மிகுந்துள்ளன.
தேங்காய் பாலின் மருத்துவப் பண்புகள்
தேங்காய் பாலானது பாக்டீரியா, வைரஸ் உள்ளிட்ட நுண்நோய்கிருமிகள் எதிர்ப்பு ஆற்றலைக் கொண்டுள்ளது. தாய்பாலில் காணப்படும் நிறைவுற்ற கொழுப்பான லௌரிக், லாக்டிக் அமிலங்கள் தேங்காயிலும் உள்ளது. லௌரிக்அமிலம் மூளை மற்றும் எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் அவசியமானது. எனவே சிறுகுழந்தைகளுக்கு தேங்காய் பாலினைக் கொடுக்கலாம்.
இதய நலத்திற்கு
தேங்காய் பாலில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகளில் 50 சதவீதம் லௌரிக் அமிலம் உள்ளது. மீடியம் சங்கிலிக் கொழுப்பு அமிலவகையைச் சார்ந்த லௌரிக்அமிலம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பினைக் (LDL) குறைத்து நல்ல கொழுப்பின் (HDL) அளவினை அதிகரிக்கிறது.
எனவே, போதுமான அளவு தேங்காய்ப்பாலினை உணவில் சேர்த்துக் கொள்ளும்போது நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவு குறைந்து நல்ல கொழுப்பின் அளவு அதிகரிப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதனால் பெருங்குடல் அழற்சி நோய், மாரடைப்பு, பக்கவாதம் போன்றவை ஏற்பட வாய்ப்புகள் இல்லை. மேலும் தேங்காய் பாலானது டிரைசைகிளாய்டுகளின் அளவினைக் குறைத்து இதய நோய்கள் வராமல் செய்வதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இதனால் தேங்காய் பாலினை அளவோடு உண்டு இதய நலத்தினைப் பேணலாம்.
நரம்புகளின் செயல்பாடுகளை சீராக்க
தேங்காய் பாலில் உள்ள தாது உப்புக்கள் நம் உடலில் உள்ள எலக்ட்ரோலைட் அளவுகளில் குறிப்பிட்டத்தக்க விளைவுகளை உண்டாக்குகின்றன. பொதுவாக எலக்ட்ரோலைட் திரவமானது உடலில் செல்கள், தசைகள் உட்பட உடலின் அனைத்து பாகங்களுக்கும் நரம்புமண்டலத்தின் செய்திகளைக் கடத்துகின்றது. எலக்ட்ரோலைட் நிறைவாகவுள்ள திரவமான தேங்காய் பாலினை பருகும் போது நம் உடல் தசைகளின் செயல்பாடுகள், மற்றும் ஒட்டு மொத்த நரம்புகளின் செயல்பாடுகளும் ஒரே எலக்ட்ரோலைட் சீராக இருக்கும் (இயங்கும்).
ஆற்றலினை அதிகரிக்க
தேங்காய் பாலில் உள்ள மீடியம் சங்கலி கொழுப்பு அமிலம் நேரடியாகவே கல்லீரலில் வளர்ச்சிதை மாற்றத்தை அடைந்து கெட்டோன்களாக மாற்றப்படுகிறது. இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியமான ஆற்றலை தக்க சமயத்தில் வழங்குகின்றன.
உடல் எடை குறைப்பிற்கு
தேங்காய் பாலில் காணப்படும் சில குறிப்பிட்ட வகையான கொழுப்புக்கள் பசியினை அடக்குவதோடு உணவு உட்கொள்ளும் அளவினையும் குறைக்கிறது. அதே நேரத்தில் உடலில் வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற உதவுகிறது. மேலும், இது நம் உடல் அமைதியான சூழலில் இருக்கும்போது ஆற்றலை எரிப்பதால் உடற்பயிற்சி இல்லாமல் உடல் எடை குறைவதற்கு வழிவகை செய்கிறது.
நல்ல செரிமானத்திற்கு
மேலும், வயிற்றுக் கோளாறுகளை சரிசெய்து எளிய, விரைவான செரிமானத்திற்கு வழிவகுக்கிறது. இதனால் இது மலச்சிக்கலுக்கும் நல்ல மருந்தாக உள்ளது. இதில் உள்ள நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு, எதிர்ப்பு அழற்சி பண்பு ஆகியவற்றின் காரணமாக அல்சர் மற்றும் வாய்களில் ஏற்படும் புண்களுக்கு இது சிறந்த தீர்வினை வழங்குகிறது.
சீரான இரத்த ஓட்டத்திற்கு
தேங்காய் பாலில் உள்ள இரும்புச் சத்தானது உடலுக்குத் தேவையான இரத்த சிவப்பு நிற அணுக்களை உற்பத்தி செய்கிறது. இதனால் இரத்த சோகை எனப்படும் “அனீமியா” – லிருந்து நம்மைக் காப்பாற்றுகிறது. மற்றும், நம் உடலுக்கு தேவையான ஆக்ஸிஜனானது சீரான இரத்த ஓட்டத்தினால் கிடைக்க தேங்காய்ப்பாலில் உள்ள இரும்புச்சத்து உதவுகிறது.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
தேங்காய் பாலில் உள்ள கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் தாது உப்புக்கள் எலும்புகளை ஆரோக்கியத்துடன் வைத்திருக்க உதவுகிறது. இதன் எதிர்ப்பு, அழற்சி பண்பு காரணமாக வாதம், எலும்புப்புரை, வீக்கம், எலும்பு முறிவுகள் ஆகியவை ஏற்படாமல் தேங்காய் பால் நம்மைப் பாதுகாக்கிறது.
சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு
தேங்காய் பாலில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பிற்கு உதவுகிறது. இதில் உள்ள கொழுப்புகளின் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்பு ஆகியவற்றால் பொடுகு, தோல் வியாதி, காயங்கள், அரிப்புகள் ஆகியவை ஏற்படாமல் பாதுகாக்கின்றன. மேலும், இதில் உள்ள கொழுப்புகள் நம் தோலுக்கு இயற்கையான முறையில் ஈரப்படுத்திகளாகச் செயல்படுகின்றன. இவை சருமக் சுருக்கத்திற்கும் தீர்வினை வழங்குகின்றன.
மனஅழுத்தத்தைக் குறைக்க
தேங்காய் பாலில் உள்ள மெக்னீசியமானது மனஅழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது. தேங்காய் பாலினை அருந்தும்போது தசைப்பிடிப்பு, பதட்டம் மற்றும் மனஅழுத்தம் குறைந்து நரம்புகள் அமைதிப்படுத்தப்படுகின்றது. இதனால் நாம் தளர்வாக இருப்பதை உணரமுடியும். எனவே முடிந்தவரை இதனை பருகி நாம் நம் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம்.