சீஸ் காலிப்ளவர் பரோட்டா

Spread the love

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு –     – 2 கப்

சீஸ் –               – 100 கிராம்

காலிப்ளவர் –         – 1 சிறியது

மிளகாய்த் தூள் –     – 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் –       – 1/2 டீஸ்பூன்

வெள்ளை வெங்காயம் – 4

பச்சை மிளகாய் –     – 2

எண்ணெய், உப்பு –    – தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவுடன் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து எண்ணெய் விட்டு நன்றாக நைசான சப்பாத்தி மாவைப் போல் பிசைந்து, ஈரத்துணியால் மூடி 1/2 மணி நேரம் ஊறவிடவும்.

காலிப்ளவரையும், சீஸையும் காரட் துருவியில் துருவிக் கொள்ளவும்.

இதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாயுடன் உப்பும் சேர்த்து கலந்து கொள்ளவும். பிடித்தமானால் அரிந்த கொத்துமல்லியும் கலந்து கொள்ளலாம்.

கோதுமை மாவை உருண்டைகளாக உருட்டி, கெட்டியான சின்ன சப்பாத்திகளாகச் செய்து கொள்ளவும்.

ஒரு சப்பாத்தியை எடுத்து காலிப்ளவர் கலவையை நிரவி இன்னொரு சப்பாத்தியை அதன் மேல் போட்டு மெதுவாக அழுத்திவிட்டு, மாவில் பிரட்டி பெரியதாக இட்டுக் கொள்ளவும்.

இது போல் மற்ற சப்பாத்திகளையும் பரோட்டாக்களாக செய்த பிறகு ஒவ்வொன்றாக சூடான தவாவில் போட்டு இரு புறமும் நெய்விட்டு வேக விட்டு எடுக்கவும்.

பருப்பு கச்சோரி

தேவையான பொருட்கள்

கோதுமை மாவு, மைதா –  —— 200 கிராம்

பால் (அல்லது) தயிர் –    —— 50 கிராம்

நெய் –                 – – 50 கிராம்

உளுத்தம் பருப்பு –     – 100 கிராம்

மிளகு, தனியா –          — சிறிது

சீரகம், மிளகாய் வற்றல் –  — 1/2 டீஸ்பூன்

தனியா பொடி –          — 5 கிராம் இவற்றை ஒன்றாக பொடித்து கொள்ளவும்

உப்பு –               –  —— தேவைக்கேற்ப

செய்முறை

கோதுமை மாவு, மைதா, உப்பு இவற்றை பால் (அ) தயிர் சேர்த்து நன்றாக பிசைந்து கொள்ளவும்.

குறைந்த பட்சம் 2 மணி நேரம் ஊற வைக்கவும். உருண்டைக்களாக்கி கொள்ளவும்.

உளுத்தம் பருப்பை ஊற வைத்து கெட்டியாக அரைக்கவும்.

பொடி செய்த மசாலா பொடிகளையும், உப்பையும் இதில் சேர்க்கவும்.

இந்த உளுத்தம் பருப்புக் கலவையை சிறிய உருண்டைகளாக உருட்டி மேல் மாவு உருண்டைக்குள் வைத்து, சிறிய சிறிய பூரிகளாக மெல்லியதாக இடவும்.

சூடான எண்ணையில் பூரி மாதிரி பொரிக்கவும். இப்போது பருப்பு கச்சோரி தயார்.

இதை சாஸுடனோ, இனிப்பு சட்னி, புதினா சட்னியுடனோ பரிமாறலாம்.

அருநெல்லி ரசம்

தேவையான பொருட்கள்

நன்கு முற்றிய அருநெல்லி (கொட்டை நீக்கியது)  -அரை கப்

குழைய வேக வைத்த துவரம்பருப்பு –            – 1/2 கப்

பெரிய தக்காளி –                               – 1

பச்சை மிளகாய் (கீறியது) –                      –  4

இஞ்சி –                                        – ஒரு அங்குல துண்டு

பெருங்காயம் –                                 – ஒரு சிறு துண்டு

மஞ்சள்பொடி –                                 – 2 சிட்டிகை

கறிவேப்பிலை –                                – ஒரு ஆர்க்கு

கல் உப்பு –                                     – ருசிக்கேற்ப

நறுக்கிய கொத்தமல்லி –                        – ஒரு டீஸ்பூன்

எலுமிச்சைச் சாறு –                             – 2 டீஸ்பூன்

செய்முறை

சப்பாத்தி இடும் கட்டையால் அருநெல்லிக் காய்களை நன்கு நசுக்கவும்.

தக்காளியைச் சிறு துண்டுகளாக நறுக்கவும். இவை இரண்டையும் ஒரு கப் தண்ணீரில் சேர்த்து, கறிவேப்பிலை, பெருங்காயம், மஞ்சள் பொடி, கல் உப்பு, பச்சை மிளகாய், நசுக்கிய இஞ்சியுடன் சேர்த்துக் கொதிக்க விடவும்.

‘கம்’ மென்ற வாசனை வரும்போது துவரம்பருப்புடன் தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கரைத்துக் கொதிக்கும் ரசத்தில் விடவும். மஞ்சள் நிறத்தில் நுரை கட்டி வரும்போது இறக்கி, நெய்யில் கடுகு, சீரகம், தேவைப்பட்டால் பாதி வற்றல் மிளகாய் தாளித்து, கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.

கடைசியாக எலுமிச்சைச் சாறு சேர்க்கவும். அபாரமாக இருக்கும் இந்த அருநெல்லி ரசம்.

குறிப்பு

ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்க, ரசத்தின் ருசி கூடும். எலுமிச்சம்பழம் இல்லையெனில், ரசம் கொதிக்கும் போது ஒரு டீஸ்பூன் புளிக்கரைசல் சேர்க்கலாம்.

மைக்ரோவேவில் கேரட் அல்வா

தேவையான பொருட்கள்

கேரட் –        – 1/4 கிலோ

பால்கோவா –   – 200 கிராம்

சர்க்கரை –     – 100 கிராம்

பால் –         – 150 மி.லி.

நெய் –         – தேவையான அளவு

பாதாம் பருப்பு  — சிறிதளவு

முந்திரி –       – சிறிதளவு

திராட்சை –      – சிறிதளவு

செய்முறை

கேரட்டை தோல் சீவி பூப்போல துருவிக் கொள்ளவும்.

சர்க்கரையை மிக்ஸியில் போட்டு பொடித்து வைக்கவும்.

பால்கோவாவை உதிர்த்து வைக்கவும்.

ஒரு மைக்ரோவேவ் பாத்திரத்தில் கேரட் துருவலுடன் பால் சேர்த்து மைக்ரோ ஹையில் பத்து நிமிடங்கள் வேக வைக்கவும். பாத்திரத்தை மூடக் கூடாது. நடுவில் ஒரு முறை கிளறி விடவும்.

வெளியில் எடுத்து கேரட் வெந்து விட்டதா என்று பார்த்து விட்டு, பொடித்த சர்க்கரை சேர்த்து கிளறி விட்டு பாத்திரத்தை மூடாமல் மீண்டும் மைக்ரோ ஹையில் பதினைந்து நிமிடங்கள் வைக்கவும். இடையில் இரண்டு முறை கிளறி விடவும்.

பிறகு உதிர்த்து வைத்த பால் கோவா, நான்கு ஸ்பூன் நெய், பாதாம் பருப்பு, முந்திரி, திராட்சை சேர்த்து நன்கு கிளறி விட்டு மைக்ரோ ஹையில் இரண்டு நிமிடங்கள் வைக்கவும்.

சுவையான கேரட் அல்வா ரெடி.


Spread the love