ஆழ்நிலை தியானம் பயில்கின்றவர்களை அறிவியல் முறையில் ஆய்வு செய்த போது அவர்களது வளர்சிதை மாற்ற நிகழ்வுகள் அதிகப்படுத்தபட்டதுடன் மூளைக்குச் செல்கின்ற இரத்த அளவு உயர்ந்ததுவும் உணரப்பட்டது. மூளையின் செயல்பாட்டில் ஏற்படும் இந்த மாற்றங்களும், உறக்கத்தின் பாங்கில் ஏற்படும் மாற்றங்களும் EEG மூலம் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளன. நமது உடற்பணிகள் நாம் விழித்திருக்கின்ற போது பீட்டா Wave Length எனப்படும் பீட்டா அலை நீள செயல்பாட்டோடு இணைந்தும், மனமுறுக்குக் குறைந்து ஓய்வாக இருக்கின்ற போது (a Wave Length) ஆல்ஃபா அலை நீள செயல்பாட்டோடு இணைந்தும் நடைபெறுகின்றன. எவ்வளவுக்கெவ்வளவு ஆழ்ந்து ஓய்வாகவும், அமைதியாகவும் இருக்கிறோமோ அந்த அளவு ஆல்ஃபா நிலைக்குள் ஆழ்ந்து போய் விடுகிறோம்.
“a Wave Length எனப்படும் ஆல்ஃபா நிலை அனுபவித்து உணரவேண்டிய ஒரு இனிய நிலை” என்று கூறுகிறார் மிகச்சிறந்த உளவியல் அறிஞர் எனக் கருதப்படுகின்ற லூயி புரொடோ. அது ஒரு உறங்குகின்ற உடலில் உள்ளம் விழிப்புடன் இருக்கின்ற நிலையை ஒத்தது. இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால் முறுக்கவிழ்ந்த உடலில் அமைதியான, தெளிவான, பரபரப்பற்ற உள்ளம் இருப்பதைப் போன்றதாகும். ஆழ்நிலை தியானத்தால் இந்த ஆல்ஃபா நிலையை எளிதாக எட்ட முடியும். இந்தத் தியான முறையினால் உடலும் உள்ளமும் சார்ந்த பல் நோய்களைக் குணமாக்க முடியும். அச்சம், கலக்கம், பரபரப்பு, மனத்தொய்வு, சினம், எரிச்சல், பித்துநிலை (addiction) போன்ற பல குறைபாடுகளை நீக்கலாம். கருவுற்றிருக்கும் பெண்களுக்கும், அவர்கள் வயிற்றில் வளரும் சிசுவிற்கும் இடையே பாசப்பிணைப்பை அதிகரிப்பதுடன் குழந்தையின் அறிவு வளர்ச்சி உயரவும் ஆழ்நிலை தியானம் உதவுகின்றது என்று கருதப்படுகிறது.
ஆழ்நிலை தியானம் பயிலுகின்றவர்களது உடலும், உள்ளமும் அவர்களையொத்த வயதினரை விட இளமையாக இருப்பதாக அறியப்பட்டுள்ளது. என்று புகழ் மிக்க நரம்பியல் ஏடான “International Journal of Neuroscience குறிப்பிடுகிறது. The British Association for the Medical Application of TM (BAMAT) என்ற சேவை அமைப்பு இங்கிலாந்தின் மருத்துவ சேவைத் திட்டத்தில் (NHS) TM மும் இணைக்கப்பட வேண்டும் என்று முயன்று வருகிறது. இதனால் அரசுக்கு பல கோடி பவுன்கள் மிச்சமாகலாம் என்றும் கூறி வருகின்றனர். இந்தப் பின்னணியில் பார்க்கின்ற போது நமது நாட்டிலும் இந்த ஆழ்நிலை தியானம் பற்றி மருத்துவர்கள் தங்களிடம் வருகின்ற நோயாளிகளுக்கு எடுத்துச் சொல்லி அவர்கள் இதைப் பயிலுவதற்கு உதவலாம் என்று தோன்றுகிறது.
ஞான யோகம் – முதல் படி
இறைவனை அடைய பல வழிகள் உள்ளன. ராஜ யோகம், கர்ம யோகம், ஞான யோகம் போன்றவை. ஞான யோகம் நாம் இறைவனின் அருளை பெற மட்டும் இல்லாமல், நம்மை நாமே அறிந்து கொள்ளவும் உதவுகிறது. ஞான யோகத்தில் நாம் வேதாந்தத்தை அறிய வேண்டும். வேதாந்தத்தை ‘சாதனை’ (பழக்கமாக) செய்ய வேண்டும்.
மூன்று வேதாந்த மேதைகள், ஆதி சங்கரர், ராமநுஜர் மற்றும் மத்வாச்சாரி மூன்று வித கோட்பாடுகளை நிலை நிறுத்தியிருக்கின்றனர். ஆதி சங்கரர் அத்வைதத்தையும், ராமநுஜர் வசிஷ்டாத்வைத்தையும், மத்வாசாரியரும் த்வைத்தையும், போதித்தனர். இந்த மூன்றும் தனித்தனி கோட்பாடுகளாக இருந்தாலும் ஒன்றுக்கொன்று சார்ந்தவையே. இவற்றைப் பற்றி பிற்பாகு விவரமாக காண்போம்.
முதலில் நாம் பகவத் கீதையின் தத்துவத்தை பார்ப்போம். கடல் போன்ற கொளவர சேனை அணிவகுத்து நிற்க, அர்ச்சுனன் அந்த சேனையை பார்த்து பயப்படவில்லை. ஆனால் வில்லை கீழே வைத்து விட்டு கிருஷ்ணனிடம் “என் உறவினர்களை கொன்று ராஜ்யத்தை அடைவதால் என்ன பயன்? நானட போரிடமாட்டேன்” என்று சொல்ல, கிருஷ்ணன் “உனது கடமையை நீ செய்யத் தான் வேண்டும். கொல்வது, அதாவது கெட்டவர்களை அழிப்பது, வீரனான உன் கடமை. அதை, பிரதி பலனை நினைக்காமல் நிறைவேற்ற வேண்டும் “என்று ஆரம்பித்து சொன்ன உபதேசங்கள் தான் பகவத் கீதை.
இதில் ஒன்றை நாம் புரிந்து கொள்ள வேண்டும். கடவுள் கடமையை செய்ய ‘அஹிம்சை’ முறையை வலியுறுத்தவில்லை. ஆனால் மற்ற சமாதான முயற்சிகள் தோல்வியுற்ற பிறகே போர் தவிர்க்க முடியாமல் போயிற்று. மகாத்மா காந்தி, இந்த தத்துவத்தை தனது பிரசித்தி பெற்ற ‘அஹிம்சை’ கொள்கைக்கு எடுத்துக்காட்டாக, உண்மையில் நடந்த குருஷேத்திர யுத்தம் தீய எண்ணங்களுக்கும், நல்ல எண்ணங்களுக்கும் நடுவே நடக்கும் மனப் போராட்டம் என்று கூறுகிறார்.
ஆதிசங்கரர் தலை சிறந்த வேதாந்த அறிவாளி அவர் சொல்வது – நீ சரீரத்தை தான் கொல்ல முடியும். ஆத்மாவை அல்ல. ஆத்மா அழிவற்றது. ஆத்மாவை சூழ்ந்திருப்பது ‘மாயை’. நல்லவை கெட்டவை எல்லாம் மாயையே. பிரம்மம் (ஆத்மா) ஒன்றே நிதர்சனமான உண்மை. இந்த உலகம் மாயை. ஞான யோகத்தை அடைய விரும்பும் மாணவர்கள் மாயையின் பிடியிலிருந்து விலகி ஞானத்தை, தன்னை தானே அறிந்து கொள்ளுவதை, அடைய வேண்டும்.
இந்த உலகம், அதாவது நாம் வசிக்கும் பூமி, சூரிய மண்டலத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் கோளம். பிற கோளங்களில் நமக்கு தெரிந்த வரை உயிர்கள் இல்லை. அண்ட சராசரத்தின் பிரும்மாண்டம், எல்லையே இல்லாத ஆகாயம், இதில் பூமியில் மட்டும் சிந்திக்கும் திறமையுடன் மனிதர்கள் – இவைகள் ஏன் உருவாயின? எவராலட இந்த சூரிய மண்டலம் இயங்குகிறது. இத்யாதி கேள்விகளுக்கு பதில் சொல்வது கடினம். இந்த கேள்விகளுக்கு பதில் தேடுவது தான் ஞான யோகத்தின் ஒரு அங்கம்.
ஞான யோகத்தின் அடிப்படை செயல்முறை. ஞானத்தின் மூலம் இறைவனை அறிவது. சிந்தனைகள், எண்ணங்கள் மூலமாக இந்த மானிட சிருஷ்டியின் தாத்பர்யத்தை தெரிந்து, யோகி யாகி, விருப்பு வெறுப்பின்றி மானிட பிறவியின் முழுப்பயனை பெற்று, உன்னத நிலையை அடைவது.
இந்த அறிவை, ஞானத்தை பெற உண்மையிலேயே விரும்புகிறவர்கள், செய்ய வேண்டிய சாதனைகள் –
- வேதத்தை, முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு கற்றிருக்க வேண்டும்.
- தினசரி செய்ய வேண்டிய பூஜை, புனஸ்காரங்கள், ஏனைய கடமைகளை நிறைவேற்றுவது.
- ஆசை, தீய எண்ணங்கள் தவிர்ப்பது.
- நான்கு வித ‘சாதனைகள்’ – பாரபட்சம், விருப்பு, வெறுப்பு இல்லாமை, பற்றின்மை, 6 வித சுயகட்டுப்பாடுகளை அனுசரித்தல், பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை அடைவது. ஆறு சுய கட்டுப்பாடுகள் – மன அடக்கம், புலன்களை அடக்கல், பொறுமை, மனக்குவிப்பு (Concentration) செயல்பாடுகளில் நிதானம், மற்றும் நம்பிக்கை.
கீதை சொல்வது
- திவ்யமான என்னுடைய (ஸ்ரீ கிருஷ்ணரின்) அவதார ரகசியத்தையும் எனது செயல்களையும் எவனொருவன் சொல்கிறானோ, அவனுக்கு மறு பிறவி இல்லை. அவன் என்னையே அடைந்து விடுவான்.
- ஞானமென்ற தவத்தால் மோட்சத்தை அடையலாம்.
- சகல பாவங்களிலும் பெரும் பாவம் செய்தவனாக இருந்தாலும், ஞானமென்ற ஓடத்தால் பாபசமுத்திரத்தை கடக்கலாம்.
- இவ்வுலகில் ஞானத்தைப் போன்ற சுத்தம் செய்யும் பொருள் ஏதுமில்லை.
- ஞானத்தை சம்பாதிப்பதிலேயே, நோக்கமாக கொண்டு, புலன்களை அடக்கி சிரத்தையுடன் முயற்சி செய்பவன் ஞானத்தை அடைவான். அதை அடைந்த பின் உயர்ந்த சாந்தி நிலையான மோட்சத்தை அடைகிறான்
- அர்ஜீனா! துயரமடைந்தவன், ஈசுவரத் தத்துவத்தை அறிய விரும்புகிறவன், பொருளை விரும்புகிறவன், பகவத் தத்துவ ஞானம் பெற்றவன் என்று புண்ணிய சீலர்களான மனிதர்கள் நான்கு வகையில் என்னை வழிபடுகிறார்கள்.
- அவர்களுக்குள் எப்பொழுதும் என்னுடன் தொடர்பு கொண்டவனும், என் ஒருவனிடமே பக்தி பூண்டவனுமான ஞானி உயர்ந்தவன். ஞானிக்கு நான் மிகவும் பிரியமானவன். அதே போல் எனக்கும் அவன் மிக்கப் பிரியமானவன்.
- யோக மாயையினால் மறைக்கப்பட்ட நான் எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிவதில்லை. ஆகவே, அறிவில்லாத இவ்வுலகம் என்னைப் பிறப்பற்றவனென்றும் அழிவற்றவனென்றும் அறிவதில்லை.
- ரிஷிகளால், க்ஷேத்ர க்ஷேத்ரஜ்ஞர்களின் தத்துவமானது பலவிதமாகக் கூறப்பட்டுள்ளது. பல விதமான வேதபாகங்களால் தனித்தனியாகச் சொல்லப்பட்டுள்ளது. யுக்திகளுடன் கூடியனவாகி நிச்சயமான ஞானத்தைத் தரக்கூடிய ப்ரஹ்மஸூத்ரங்களாலும் நன்கு விவரிக்கப்பட்டுள்ளது.
- ஆத்ம ஞானத்தில் நிலைபெற்றிருத்தல், தத்துவ ஞானத்தின் உபயோகத்தைப் பற்றிய சிந்தனை என்ற இவையெல்லாம் ஞானம் என்று சொல்லப்படுகின்றன. இவற்றிற்கு மாறுபட்டவையெல்லாம் அஜ்ஞானமென்று அறிய வேண்டும்.
ஞான யோகத்தின் லட்சியம் என்ன?
முதலில் ஆத்மாவுக்கும், தேகத்திற்கும் உள்ள வேறுபாட்டை தெரிந்து கொள்ள வேண்டும்.
அதே போல் ஜீவாத்மா (ஆத்மா), இந்திரியங்கள், மனம் பிராணன் ஆகியவற்றை விட வேறுபட்டது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆத்மா, பிரக்ருதி (சரீரம்), அவற்றிலிருந்து உண்டாகும் பொருட்கள் எல்லாமே இறைவனின் சரீரம். இறைவன் தான் அவற்றிற்கெல்லாம் உள்ளே ஆத்மாவாக இருக்கிறான் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
நம்மை நாமே அறிந்து கொள்வது. நமது ஆத்மாவில் இறைவன் உறைவதை அறிந்தவர்க்கு, ஏனைய மனிதர்களிலும் இறைவன் உறைவதை உணர்ந்து, எல்லோரையும் சமமாக பாவிக்கும் பக்குவம் வரும்.