தியானம்

Spread the love

இன்றைய அதிவேக யுகத்தில் யோகாசனம், தியானம், உடற்பயிற்சி முதலியவை வாழ்க்கைக்கு இன்றியமையாதவைகளாக விளங்குகின்றன. குறிப்பாக மனநிலை சம்பந்தமான பிரச்சனைகளுக்கு யோகாசனப் பயிற்சிகளும் தியானமும் மருத்துவர்களாலேயே சிபாரிசு செய்யப்படுகின்றன. ஏனெனில் இவற்றால் மட்டுமே மனநிலை சீராகின்றது. மனம் ஒரு நிலைப்படுகின்றது.

விஞ்ஞான பூர்வமாக யோகாசனப் பயிற்சியும் தியானமும், மன அழுத்தத்தையும், அழற்சியையும் குறைக்கின்றன என்பது தெளிவு படுத்தப்பட்டுள்ளன. தியானம் என்பதற்கும் மனம் ஒரு நிலைப்படுத்தப் படுவதற்கும் மிகுந்த வேறுபாடுகள் உள்ளன. மனம் ஒரு நிலைப் படுவது என்பது மனதை ஒரு விஷயத்தில் செலுத்தி அதனையே பற்றி ஆழ்ந்து சிந்திப்பதாகும். ஆனால் தியானம் என்பது மனதை கடவுளிடம் செலுத்தி கடவுள் சம்பந்தமான சிந்தனைகளுடனும் நாம் நமது ஆத்மாவைப் பற்றி சிந்திப்பதுமேயாகும்.

மனதை ஒரு நிலைப்படுத்துவதில் மனதைத் தவிர உடலில் பிற உறுப்புகளும் செயல்படுகின்றன. வெளியுலகத்தில் நடப்பதை உணரும் வகையில் அமையும் உறுப்புகள் கண்கள், மூக்கு போன்றவை. ஆனால் தியானத்தில் உடலின் மூளை மட்டுமே செயல்படும் பிற உறுப்புகள் அனைத்தும் வெளி உலகத்தில் நடப்பவற்றை பொருட்படுத்துவதில்லை. அதாவது சிந்தனைகள் அனைத்தும் ஆத்மா வைப் பற்றியே இருக்கும். இதனால் வெளியுலகத்தில் நடப்பவை நமக்குத் தெரியாது.

தற்பொழுது உடலுக்கும் உள்ளத்திற்கும் உள்ள ஒருமைப்பாடு ஒத்துக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே தான் பல நோய்கள் குறிப்பாக மனரீதியான பல நோய்களுக்கு உடல் பயிற்சியே நல்ல தீர்வாக அமைகின்றது. நடைப்பயிற்சி, மெல்லோட்டம், நீச்சல் பயிற்சி, யோகாசனம் போன்ற பல உடற்பயிற்சிகள் மனநிலையை மேம்படுத்துகின்றன. மூளையை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தியானம் பெரிதும் உதவுகின்றது.

தியானம் மனதை அமைதியடையச் செய்கின்றது. மனதில் ஏற்படும் எண்ண அதிர்வுகளை சீராக்குகின்றது. மனநிலையை ஒரு நிலைப்படுத்துகின்றது. மன அழுத்தத்தைப் போக்குகின்றது. அழற்சியை நீக்குகின்றது. புத்துணர்ச்சி பரவிடச் செய்கின்றது. ஆழ்நிலை மனதில் ஏற்படும் மாற்றங்களையும் மேல் மனதில் ஏற்படும் மாற்றங்களையும் குறைத்து மனதை ஒரு நிலை படச் செய்து மூளைக்கு அமைதியையும், புத்துணர்ச்சியையும் தருகின்றது. தியானம் மனதில் ஒரே சீரான சிந்தனைகளைக் கொள்ளச் செய்கின்றது. பலதரப்பட்ட சிந்தனைளைப் போக்குகின்றது.

தியானத்தை முறையாகக் கற்க வேண்டுமெனில் ஒரு குருவிடம் தான் கற்க வேண்டும். இருப்பினும் இங்கு சில வழிமுறைகளைத் தருகிறோம்.

தியானத்திற்கு முதலாவது தேவை அமைதியான ஒர் இடமும் நல்ல நேரமும் தான் குறிப்பாக யாராலும் தொந்தரவு செய்யாத ஒர் அறை போதுமானது. அதிகாலை நேரம் தியானம் செய்ய உகந்தது.

இரண்டாவது இயல்பான நிலையில் அமர்ந்து கொள்ள வேண்டும். ‘பத்மாசனம்’ தகுந்த நிலையாக அமையும்.

மூன்றாவதாக, உடலை தளர்த்திக் கொள்ள வேண்டும். உச்சி முதல் உள்ளங்கால் வரை தளர்வடையச் செய்ய வேண்டும்.

அடுத்தபடியாக மனதை தளர்வாக & ரிலாக்ஸாக வைத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அமைதியான ஆறு, ஆற்றங்கரை பூங்கா, கடற்கரை போன்ற இயற்கையான சூழலை நினைத்துக் கொள்ளலாம்.

அடுத்ததாக உங்களுக்கு பிடித்த ஏதாவது ஒரு கடவுளுக்கான மந்திரத்தை ஜெபிக்க ஆரம்பிக்க வேண்டும். பூஜை செய்வதைப் போல நினைத்துக் கொண்டு ‘ஒம்’ என்ற மந்திரத்தை அமைதியாக ஜெபிக்க ஆரம்பிக்கலாம்.

இதைச் செய்யும் பொழுதே உங்களது அனைத்து பிரச்சனைகளையும் கவலைகளையும் கடவுளின் மேல் இறக்கி வைத்துவிட்டதாக உணருங்கள். உங்கள் கவலைகளையும் பிரச்சனைகளையும் கடவுள் எடுத்துக் கொண்டுவிட்டதாக உணருங்கள், மாறாக நீங்கள் அண்ட சராசரத்தைப் பற்றி எண்ணலாம். சூரியன், சந்திரன் போன்ற கோள்கள் சுற்றிவருவது போலவும் நினைத்து அதன் மூலம் உங்கள் மனதை ஒரு நிலைப்படுத்தலாம்.

தியானத்தின் போது அன்பு, கடமை, பாசம், ஒற்றுமை, பொறுமை போன்றவற்றால் ஏற்படும் நன்மைகளைப் பற்றியும் பிற குணங்களான பொறாமை, கோபம், திமிர், பழிவாங்குவது போன்றவற்றால் ஏற்படும் தீமைகளைப் பற்றியும் நினைத்து கெட்ட எண்ணங்களைப் போக்கி நல்ல எண்ணங்களை மட்டுமே கொள்ளலாம்.

மறப்போம், மன்னிப்போம் என்ற எண்ணத்துடன் அனைவரிடமும் அன்புடனும் மரியாதையுடனும் பழகி அன்பைப் பொழிந்து வாழ பழகிக் கொள்ள வேண்டும்.

தியானத்தைத் தொடர்ந்து உடல் சுத்தம் மிகவும் முக்கியம். தியானம் ஆரம்பிக்கு முன் குளிப்பது அவசியம். தியானம் ஆரம்ப நிலையில் 15 – 20 நிமிடங்களுக்கு மிகாமல் செய்யலாம். ஆனால் காலம் செல்லச் செல்ல நேரத்தை அதிகப்படுத்திக் கொள்ளலாம். சரியான முறையில் தியானம் செய்தால் அற்புதமான அளவில் உடலும் உள்ளமும் ஒரு நிலைப்படும். ஆரோக்கியம் மேலோங்கும். குருவிடம் தியானம் பயில்வதில் பல மேம்பட்ட நன்மைகளும் உள்ளன.

தியானம் செய்பவர்களுக்குத்தான் அதனால் ஏற்படும் நன்மைகளையும், வித்தியாசத்தையும் உணர்ந்திட முடியும்.

கீதையும், தியானமும்

“பெருந்தீனி தின்பவர்களும், அளவுக்கு மீறி பட்டினி இருப்பவர்களுக்கும் யோகா உகந்தது அல்ல. அளவுக்கு மீறி பொழுது போக்கு கேளிக்கைகளில் ஈடுபடுபவர்கள், அதிகமாக தூங்குபவர்கள். அதிக நேரம் விழித்திருப்பவர்கள், இதே போல அதிக நேரம் உழைப்பவர்கள், அதிக நேரம் சோம்பித்திரிபவர்கள் முதலியவர்களுக்கு யோகா உதவாது”.

தியானங்கள் பலவிதம்

சிகிச்சைகளில் சிறந்த சிகிச்சை யோகாவும் அதன் உள்ளடங்கிய ஹதயோகமும், பிராணாயாமமும், தியானமும் ஆகும். ஹத யோகத்தால் உடலுக்கும், பிராணாயாமத்தால், சுவாசத்திற்கும் & தியானத்தால், மனதிற்கும் சிகிச்சை தரப்படுகிறது.

நவீன ஆராய்ச்சிகள் தியானத்தால், குறிப்பாக ஆழ்நிலை தியானத்தால் (Transcendental Meditation) ஏற்படும் பயன்களை நிரூபிக்கின்றன. அரை மணி நேர தியானம் 6 மணி நேர தூக்கத்தால் கிடைக்கும் ஒய்வுக்கு சமானம்.

தியானம் தரும் நன்மைகள்

1. மனம் அமைதியடைந்து மகிழ்வுறுகிறது.

2. பிராண வாயுவின் தேவை குறைவதால் வளர்சிதை மாற்றம் (விமீtணீதீஷீறீவீsனீ) நிதான மாகிறது.

3. மனம் ஒரு நிலைப்படுகிறது. தேர்ந்தெடுத்த ஒரே விஷயத்தைப்பற்றி சிந்திக்கும் திறனை அடைகிறது.

4. உடல் முழுவதும் “ரிலாக்ஸ்” (Relax) ஆகிறது!

ராஜயோகத்தில் வரும் அஷ்டாங்க யோகத்தில், பகிரங்க யோகமாக ஐந்து நிலைகளும் அந்தரங்க யோகமாக மூன்று நிலைகளும் சொல்லப்படுகின்றன. இதில் அந்தரங்க யோகத்தின் மூன்று நிலைகள்.

1. தாரணை

2. தியானம்

3. சமாதி

இந்த மூன்று யோகங்களின் மூலம் பதஞ்சலி முனிவர் தியானத்தை விளக்குகிறார். ஆனால் இவற்றை அறிய, அஷ்டாங்க யோகத்தில் ஐந்தாவது படியான “பிரத்யாஹாரம்”, தியானத்துள் நுழைய உதவும் வாசல் எனலாம். இதைப்பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். பிரத்யாஹாரம் என்பது புலன்களுக்கு மாற்று “உணவை” குறிக்கிறது. புலன்கள் ஐந்தாக சொல்லப்படுகின்றன. காண்பது (கண்கள்), கேட்பது (காதுகள்), நுகர்வது (நாசி), சுவைப்பது (நாக்கு), தொட்டறிவது (சருமம்) இவை ஐம்புலன்கள். சுருக்கமாக சொன்னால் பிரத்யாஹாரம் என்றால் புலனடக்கம்.

திருக்குறளில் மூன்றாவது அதிகாரமான ‘நீத்தார் பெருமையில்’ திருவள்ளுவர் கூறுகிறார்:- “உரனென்னும் தோட்டியன் ஓரைந்தும் காப்பான்’

வரனென்னும் வைப்பிற்கோர் வித்து” என்கிறார்.

(அறிவு எனும் கருவியால் ஐம்புலன்களையும் பொறிகள் வழியே செல்லாமல் ஒடுக்கிக் காத்த வல்லவனே, சிறந்தது என்று போற்றப்படும் மேல் உலகத்திற்கு சிறந்த விதை ஆவான்).

திருவள்ளுவர் மேலும் இன்னொரு குறளில் –  சுவை ஒளி ஊறு ஒசை நாற்றம் என்று சொல்லப்பட்ட ஐம்புலன்களின் தன்மையின்னைத் தன் அறிவின் துணை கொண்டு கண்டறிவான் மாட்டே உலகம் உள்ளது என்கிறார்.

புலன்களை அடக்கி மனதை ஒருநிலைப்படுத்துவது கடினமான செயல். விடாமுயற்சியாலும், தொடர்ந்த பயிற்சியினாலும் பிரதியாஹாராவை தொடர வேண்டும். முதலில் புலன்களுக்கு இன்பம் அளிக்கும் பொருட்களை ஒதுக்கி விடுவது ஒரு வழி. உதாரணமாக இனிப்பு பிடிக்கும் என்றால் அதை கண்களுக்கு படாமல் தூர, தெரியாத இடத்தில் வைப்பது. முன்னேறிய நிலையில் அருகாமையிலேயே இனிப்பு இருந்தாலும் அதை தொடாமல், உண்ணாமல் இருப்பது. ஆமை தன் உறுப்புக்களை தன் ஒட்டுக்குள் இழுத்து விடுவது போல் ஐம்புலன்களை அடக்கி இழுத்துக் கொள்பவன் ஏழு பிறவிகளெடுத்தாலும் துன்பமின்றி வாழ்வான் என்கிறார் திருவள்ளுவர் பெருமான்.

அடுத்தபடி தாரணை. அலை பாயும் எண்ணங்களுடைய மனதை குவித்து ஒரு முகப்படுத்துவது. அதாவது Concentration. உடலில் உள்ள “மூலச் சக்கரங்களைப் பற்றி பட்டியலிட்டு மனதை ஒரு முகப்படுத்தலாம். இல்லை ஒரு மெழுகுவர்த்தியை ஏற்றி அதன் ஒளியை நோக்கி மனதை ஒரு முகப்படுத்தலாம். பல உயிரில்லாத ஜடப்பொருட்களை உருவகப்படுத்திக் கொண்டு அதன் பல ரூபங்களை நினைக்கலாம். உதாரணமாக பூக்களை நினைக்கலாம்.

இப்பொழுது தியானத்தை நாம் தொடரலாம். தராணையால் ஒரு முகப்படுத்த மனதை மேலும் ஒரு புள்ளிக்கு ஒரு முகப்படுத்துவது தியானம். ஒரு பொருள் (அ) ஒரு தொடர்ச்சியாக 15 நிமிடமாவது தியானிக்கப்பட வேண்டும். இந்த எண்ணம் (அ) பொருள் குரு சொல்லிக் கொடுத்த மந்திரமாக இருக்கலாம். ஜபிக்க, ஜபிக்க, மனம் ஒருமுகப்படும். ஜபிப்பது மானசீகமாக இருக்க வேண்டும். உரக்க கத்தி ஜபிக்க வேண்டாம். முழுமனதும் ஒரு பொருளின் மீது அசைவின்றி 12 விநாடிகள் நின்றால் அது ஒரு தாரணை ஆகும் என்கிறார் பதஞ்சலி முனிவர். அந்த தாரணை தொடர்ந்தால் அது தியானம். 12 தாரணைகள் ஒரு தியானம் என்கின்றனர் யோகாசன நிபுணர்கள்.

பிரத்யாஹாரா, தாரணை, தியானம் – இந்த மூன்று நிலைகள் உங்களை ‘சமாதி’ நிலைக்கு கொண்டு செல்லும். சமாதி நிலைதான் யோகாவின் இலட்சியம். யோகாவின் உயர்ந்த, உன்னத நிலை. தொடர்ந்த, நீண்ட தியானத்தால் மனம் தேடும் பொருளுடன் ஐக்கியமாவது சமாதி நிலை. நாம் நமது உலகியல் கவலைகளை மறந்து, பரவச நிலையை அடைவதே சமாதி நிலையின் குறிக்கோள். சமாதி நிலையில் சீரான மனநிலை உண்டாகும். கோபதாபங்கள் நம்மை பாதிக்காது.

எனவே தியான முறைகளை நல்ல ஆசானிடம் கற்றுக் கொண்டு பயில்வது வாழ்க்கையில் வெற்றி பெற வழிவகுக்கும்.


Spread the love