நூல்கோல் நாம் அரிதாகப் பயன்படுத்தும் காய்கறி வகைகளில் ஒன்று. இதனுடைய சத்துக்கள் மற்றும் மருத்துவப் பண்புகள் பற்றித் தெரிந்தால் நாம் இதை அடிக்கடி பயன்படுத்துவோம்.
நூல்கோல் ப்ராசிகாசி என்ற தாவரக் குடும்பத்தைச் சார்ந்தது. நூல்கோலின் அறிவியல் பெயர் பிரேசிகா ஒல்லேரிசா என்பதாகும். இதன் தாயகம் வடமேற்கு ஐரோப்பா ஆகும்.
நூல்கோலின் அமைப்பு மற்றும் வளரியல்பு
நூல்கோலானது வளமான நிலத்தில் நன்கு வளரும். மிதமான சூரிய ஒளியும், குளிர்ச்சியான காலநிலையும் இது வளர்வதற்கு ஏற்றது. இது குறுஞ்செடியைச் சேர்ந்த தாவர வகையாகும். நூல்கோல் வெளிர் பச்சை மற்றும் கருஊதா நிறங்களில் மேல்தோலினை உடையது. இதன் உட்புறச் சதைப் பகுதி வெள்ளையாக இருக்கும். இது மஞ்சள் நிறப்பூக்களையும், அடர் பழுப்பு நிற விதைகளையும் பெற்றிருக்கும்,. இது பயிர் செய்த 55-60 நாட்களில் நூல்கோல் அறுவடைக்கு தயாராகிறது. சராசரியாக இது 150 கிராம் அளவில் இருக்கும் இது தனிப்பட்ட மணத்துடன் இனிப்பு சுவை கொண்டதாக இருக்கும். நூல்கோல் மட்டுமல்லாது அதனுடைய இலைகளும் உணவாக உண்ணப்படுகின்றன.
நூல்கோலில் உள்ள ஊட்டச்சத்துக்கள்
நூல்கோலில் வைட்டமின் “சி” அதிகம் உள்ளது. இது ஆரஞ்சு பழத்தைப்போல் ஐந்து மடங்கு வைட்டமின் சி-யினைக் கொண்டுள்ளது. மேலும் இதில் வைட்டமின் ஏ, H1 (தையமின்), H2 (ரிபோஃப்ளோவின்), H3 (நியாசின்), H5 (பான்டோதெனிக் அமிலம்), H6 (பைரிடாக்ஸின்), ஃபோலேட்டுகள் ஆகியவை உள்ளன இவை தவிர இதில் தாதுஉப்புக்களான கால்சியம், செம்பு, இரும்பு, மெக்னீசியம், மாங்கனீசு, பாஸ்பரஸ், செலீனியம், துத்தநாகம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதம், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து, பீட்டா கரோடீன்கள் ஆகியவையும் உள்ளன.
நூல்கோலின் மருத்துவப் பண்புகள்
உணவு செரிமானத்திற்கு நூல்கோலானது மிகவும் நல்லது இது அதிகளவு நார்ச்சத்தையும், நீர்ச்சத்தையும் கொண்டுள்ளது. இதன் நார்ச்சத்தானது உடலில் உள்ள நச்சினை கழிவாக எளிதில் வெளியேற்றகிறது. இதனால் மலச்சிக்கல், வீக்கம், வயிற்று வலி ஆகியவை ஏற்படுவதில்லை. செரிமானப் பாதையில் உணவு செரிக்கும் தன்மையை இதன் நார்ச்சத்து மேம்படுத்துகிறது.
மேலும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை உடல் உறிஞ்சுவதை நார்ச்சத்து ஊக்குவிக்கிறது. ஆகவே இதை அடிக்கடி உணவில் சேர்த்து மலச்சிக்கல் உள்ளிட்ட செரிமான பிரச்சினைகள் நீங்கி நல்ல செரிமானத்தைப் பெறலாம்.
ஆரோக்கிய உடல்எடை இழப்பிற்கு
நூல்கோலானது குறைந்த எரிசக்தியையும், அதிக நார்ச்சத்து, நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களையும் கொண்டுள்ளதால், இதை சாப்பிடும்போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுகிறது. மேலும், நீண்ட நேரத்திற்கு பசி எடுப்பதில்லை. எனவே இடைவேளை உணவு, நொறுக்குத்தீனிகள் தேவைப்படாது. இதனால் ஆரோக்கியமான உடல் எடை குறைப்பினைப் பெறமுடியும்.
ஆரோக்கியமான தசைகள் மற்றும் நரம்புகள் செயல்பாட்டிற்கு
தசைகள் மற்றும் நரம்புகளின் செயல்பாட்டிற்கு பொட்டாசியம் மிகவும் அவசியமானது. இது நடப்பது , ஓடுவது, மூச்சு விடுதல் என அன்றாட செயல்பாட்டிற்கு உதவுகிறது. பொட்டாசியம் மிகுந்த இதை உணவில் சேர்க்கும்போது நமது நரம்புகள் மற்றும் தசைகளின் செயல்பாடுகளை சீராக்கி நமக்கு புத்துணர்வினைத் தருகிறது.
இரத்த அழுத்தத்தை சீராக்க
இதில் உள்ள பொட்டாசியம், இரத்த குழாய்களின் குழல் விரிப்பானாகச் செயல்பட்டு, சிரைகள் மற்றும் தமனியில் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இதனால் உயர் இரத்த அழுத்தம் குறைக்கப்பட்டு, மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட நோய்கள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது. மேலும், உடலில் உள்ள சோடியத்தின் அளவினை இதிலுள்ள பொட்டாசியம் சமன்செய்து செல்களில் திரவ மற்றும் சம நிலையில் வைக்கிறது.
அனீமியாவைத் தடுக்க
நூல்கோலில் உள்ள இரும்புச்சத்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கச் செய்கிறது. இதனால் உடல் உறுப்புக்களுக்கு சரியான அளவு ஆக்ஸிஜன் எடுத்துச் செல்லப்பட்டு உறுப்புகள் சுறுசுறுப்பாக இயங்குகின்றன. இது தவிர, இரத்த சிவப்பணுக்களின் குறைபாட்டினால் ஏற்படும் சோர்வு, தலைவலி, பலவீனம், நோய் எதிர்ப்பின்மை, அனீமியா போன்றவைகள் ஏற்படாமல் தடுக்கப்படுகின்றது.
இதில் உள்ள சுண்ணாம்புச் சத்து உடல் உட்கிரக்கிக்கும் இரும்புச்சத்தின் அளவினை அதிகரிக்கிறது. இதனால் நூல்கோலை உணவில் சேர்த்து இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.
எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு
நூல்கோலில் எலும்புகளின் ஆரோக்கியத்திற்கு காரணமான கால்சியம், இரும்புச்சத்து, மாங்கனீசு ஆகியவை காணப்படுகின்றன. நமக்கு வயதாகும்போது ஓயாத உழைப்பினால் நம் உடலிலுள்ள எலும்புகள் பாதிப்படைகின்றன. இதனால் வாதம், கீல்வாதம் உள்ளிட்ட பிரச்சினைகள் தோன்றுகின்றன. எனவே எலும்புகளின் ஆரோக்கியத்திற்குக் காரணமான நூல்கோலினை சிறு வயது முதலே உணவில் அடிக்கடி கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
பார்வைத் திறன் மேம்பட
நூல்கோலில் பார்வைத்திறனை மேம்படுத்த காரணமான பீட்டா கரோடீன்கள் அதிக அளவில் உள்ளது இது வயதாகும் போது ஏற்படும் கண்தசை அழற்சி, கண்புரை நோய் ஏற்படாமல் பாதுகாக்கின்றது. உடலில் ஆக்ஸிஜனேற்றத்தினால் உண்டாகும் ப்ரீ ரேடிக்கல்களின் செயல்பாட்டினைத் தடுத்து பார்வைத் திறனை பாதுகாக்கின்றது.
வளர்ச்சிதை மாற்றத்தினை சீராக்க
பி தொகுப்பு வைட்டமின்கள் உடலில் உள்ள நொதிகளை சரிவர சுரக்கச் செய்து வளர்ச்சிதை மாற்றம் சீராக நடைபெற காரணமாகின்றன. நூல்கோல் அதிகளவு பி தொகுப்பு விட்டமின்களைக் கொண்டுள்ளது. எனவே இதனை அடிக்கடி உணவில் சேர்த்து சீரான வளர்சிதை மாற்றத்தினைப் பெறலாம்.
புற்றுநோயைத் தடுக்க
நூல்கோலில் அதிகளவு குளுக்கோசினலேட் மற்றும் பைட்டோ-நியூட்ரியன்கள் உள்ளது. இந்த ஆன்டி ஆக்ஸிஜென்ட்டுகள் புற்றுநோயை தடை செய்கின்றன. எனவே இதை முறையாக உணவில் பயன்படுத்தி புற்றுநோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.
நூல்கோலினை வாங்கும் முறை
இதை கடையில் வாங்கும் போது அவை மிதமான வடிவிலும், கையில் எடுக்கும்போது கனமானதாகவும், ஒரே சீரான நிறத்துடனும் இருக்குமாறு கவனித்து வாங்க வேண்டும். மேற்பரப்பில் வெட்டுக்காயங்கள், கீறல்கள், மற்றும் முதிர்ந்தவற்றை தவிர்த்து விடவும். அறையின் வெப்பநிலையில் மூன்று முதல் ஐந்து நாட்கள் வைத்திருந்து இதை பயன்படுத்தலாம். நூல்கோல் சாலட்டுகள், ஊறுகாய்கள், சூப்புகள் தயாரிப்பிலும் இது பயன்படுத்தப்படுகிறது.