முருங்கை மரத்தில் (Moringaoleifera) இருந்து பெறப்படும் முருங்கைக்காய், முருங்கைஇலை, முருங்கைப்பூ, ஈர்க்கு, முருங்கைப்பட்டை, பிசின் என அனைத்துமே மருத்துவப் பண்புகள் அதிகம் கொண்டவை எனவே முருங்கையை ‘கற்பகத்தரு’ என்றே சித்தர்கள் அழைத்தனர். முருங்கை மரவகையைச் சேர்ந்தது. இது முப்பது அடி உயரம் வரை வளரக் கூடியது. இதன் ஆரம்பம் இமயமலை அடிவாரம் பின் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மற்றும் ஆப்பிரிக்காவிலும் இலங்கை தாய்லாந்து, முதலிய நாடுகளிலும் உள்ளதாக அறியப்படுகிறது. இது இந்தியாவில் பல இடங்களிலும் குறிப்பாக தென்னிந்தியாவில் மிகவும் அதிகமாகப் பயிரிடப்படுகிறது. முருங்கை அனைத்து வகை மண்ணிலும் வளரக்கூடியது எனினும், மணல் சார்ந்த நிலங்களில் நன்றாக வளரும் தன்மையுடையது. இது வறண்ட, பாசன வசதி குறைந்த, வெப்பம் அதிக முள்ள பகுதியிலும் நன்கு வளரக்கூடியது.
தமிழ் நாட்டிலுள்ள வகைகள்
தமிழ்நாட்டில் யாழ்ப்பாண முருங்கை, சாவகச் சேரிமுருங்கை, பால்முருங்கை, பூனைமுருங்கை மற்றும் அந்தந்த இடங்களில் கிடைக்கும் «Õஊ பல வகைகளும் வீடுகளில் வளர்க்கப்படுகின்றன ஓராண்டுப் பயிர்களான இவை ஆறு மாதங்களுக்குப் பின் காய்களை அளிக்கத் தொடங்கும். ஒரு மரத்திலிருந்து இருநூறு முதல் நானூநூறு காய்கள் வரை காய்க்கும் தன்மை கொண்டது.
பயன்கள்
முன்னர் சிறிதாக இருந்த முருங்கைக்காய் தற்போது ஒரு மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய அளவில் புதிய ரகங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முருங்கை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது. இலைகள் மிகவும் சத்து மிகுந்து அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் அடங்கி உள்ளது. இதில் வைட்டமின்கள் H ,C, கே, புரோவிட்டமின் ஏ என்னும் பீட்டா கரோட்டின், மேலும் மாங்கனீசு, மற்றும் புரதம் போன்றவை உள்ளது. இதன் இலைகள் மற்றும் காய்கள், இரத்தத்தை சுத்திகரிக்கும் பண்புகள் கொண்டதாகவும், கிருமி நாசினியாக செயல்படுகிறது. முருங்கைக் காய்களை ரசமாகவோ அல்லது சாறு வடிவத்தில் வழக்கமாக உட்கொள்வதால், முகப்பரு மற்றும் பிற தொடர்புடைய தோல் பிரச்சினைகள் நீங்குகிறது.
இயற்கையின் வயாக்ரா முருங்கை!
‘முருங்கைக்காயை’ தமிழக மக்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது, வீட்டிற்கு ஒரு முருங்கை வளர்த்து வந்தால் குடும்பத்தில் ஆரோக்கியத்திற்கு குறைவு இருக்காது. இதனால் முருங்கையின் பயனை நம் முன்னோர்கள் ஆண்டாண்டு காலமாக உபயோகித்து வந்துள்ளனர். இலைகள், வேர், கனி மற்றும் விதை, எண்ணை என முருங்கையின் அனைத்து பாகங்களுமே மருத்துவக் குணம் கொண்டவை. முருங்கைமரம் இலை, பூ, காய்களுக்காக இந்தியா முழுவதும் பயிரிடப்படுகிறது. செயல் திறன் மிக்க வேதிப்பொருட்கள் முருங்கையில் வைட்டமின்கள், அமினோ அமிலங்கள் மற்றும் தாது உப்புக்கள் உள்ளன. காய் மற்றும் இலைகள் வைட்டமின் சி மிகுதியாகக் கொண்டவை. மொரிங்கஜின், மொரிங்ஜின்னைன், பேரேனால், இண்டோல் அசிடிக் அமிலம், டெர்கோஸ், பெர்மைன், கரோட்டின், குர்சிடின் ஆகியவை காணப்படுகின்றன.
முருங்கைக்கீரை
முருங்கைக் கீரையில் அதிகளவு இரும்புச்சத்து நிறைந்துள்ளதால் இரத்தசோகை நீங்கும். முருங்கைக்கீரை இரத்தத்தை சுத்தமாக்கும். மெலிந்த உடல் உள்ளவர்கள் வாரம் இருமுறை முருங்கைக்கீரை உண்டு வந்தால் உடல் வலுப்பெறும், இதன் சாறு விக்கலைப் போக்கும். காய்ச்சல் மற்றும் சளியை போக்கும் குணம் கொண்டவை. கழலை வீக்கங்களுக்கு இலை பற்றாக போடப்படுகிறது. பெண்களுக்கு உண்டாகும் உதிர இழப்பைப் போக்க முருங்கைக்கீரை சிறந்த நிவாரணி. தாய்ப்பாலை சுரக்கவைக்கும். வாரம் இரு முறையாவது பெண்கள் கண்டிப்பாக முருங்கைக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்றுப்புண்ணை ஆற்றும். அஜீரணக் கோளாறுகளை நீக்கி மலச்சிக்கலைப் போக்கும். இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற நீர்களை பிரித்து வெளியேற்றும். நீர்ச்சுருக்கு, நீர்க்கடுப்பு போன்றவற்றைப் போக்கும். உடல் சூட்டைத் தணிக்கும், பார்வை நரம்புகள் வலுப்பெறும். பித்தத்தைக் குறைக்கும். இளநரையைப் போக்கும். சருமத்தைப் பளபளக்கச் செய்யும். முருங்கைக்கீரை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது. ஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை ஒரு தேக்கரண்டி நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும். முருங்கைக் கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப்பழத்தில் உள்ளதைப் போல ஏழு மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது. மற்ற கீரைகளைப் போல இல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பது தான் இதன் இன்னொரு மகத்துவம்.
முருங்கைப்பூ
முருங்கைப்பூ நாவின் சுவையின்மையை மாற்றும் தன்மை கொண்டது. முருங்கைப்பூவை பாலில் வேகவைத்து அந்த பாலை வடிகட்டி அருந்தி வந்தால் கண்கள் குளிர்ச்சி பெறும். பித்த நீர் குறையும். வாத, பித்த, கபத்தின் செயல்பாடு சீராக இருக்கும். முருங்கைப்பூவை நிழலில் உலர்த்திப் பொடியை கஷாயம் செய்து காலையில் அதனுடன் பனை வெல்லம் கலந்து அருந்தி வந்தால் உடல் வலுவடைவதுடன், நரம்புகள் புத்துணர்வு பெறும். முருங்கைப்பூவை அரைத்து பாலில் கலந்து கொதிக்கவைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து காலை மாலை இரு வேளையும் அருந்தி வந்தால் நினைவாற்றல் அதிகரிக்கும். முருங்கைப்பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து தினமும் கஷாயம் செய்து காலை மாலை அருந்தி வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும். முருங்கைப்பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். குழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டு மின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப் படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும். மலர்கள் சிறுநீர்ப் போக்கினைத் தூண்டுபவை. பித்த நீர் சுரப்பினை அதிகரிக்கும். செயலியல் நிகழ்வுகளைத் தூண்டும்.
முருங்கைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நீரிழிவு நோயால் ஏற்பட்ட பாதிப்புகள் நீங்கும். முருங்கைப்பூவை அரைத்து பாலில் கொதிக்க வைத்து பனங்கற்கண்டு கலந்து 48 நாட்கள் அதாவது ஒரு மண்டலம் அருந்தி வந்தால் தாம்பத்ய உறவில் நாட்டம் உண்டாகும். இதை இயற்கையின் வயகரா எனக் கூறலாம். அதுபோல் முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து ஒரு மண்டலம் சாப்பிட்டு வந்தால் ஆண்மைபெருகும். நீர்த்துப்போன விந்து கெட்டிப்படும். பெண்களுக்கு வெள்ளைப்படுதல் குணமாகி கர்ப்பப்பை வலுவாகும்.
முருங்கைப்பிஞ்சு
முருங்கைப்பிஞ்சை எடுத்து சிறிதாக நறுக்கி நெய்யில் வதக்கி அதனை உண்டு வந்தால் இரத்தம் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களும் நீங்கும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இதில் அதிக கால்சியம் சத்து இருப்பதால் எலும்புகளுக்கு ஊட்டம் கிடைக்கும். எலும்பு மஞ்ஜைகளை பலப்படுத்தி இரத்தத்தை அதிகம் உற்பத்தி செய்யும். ஆண்மை சக்தியைத் தூண்டும்.
முருங்கைக்காய்
முருங்கைக்காய் அதிக சத்துக்களைத் தன்னகத்தே கொண்டது. உணவில் சுவையை அதிகரிக்கக் கூடியது. மலச்சிக்கலைப் போக்கும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். சளியைப் போக்கும். காய்ச்சலுக்கும், வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானவை. ஆஸ்துமா, கல்லீரல் மற்றும் கணையங்களின் வீக்கம், ஆகியவற்றை நீக்க வல்லது.
முருங்கைவேர்
வேரின் கஷாயம் தொண்டை கரகரப்பு மற்றும் தொண்டை புண்ணை ஆற்றுகிறது.
விதை எண்ணை
இதன் விதையில் இருந்து சமையல் எண்ணை எடுக்கலாம். மேலும் மேனி எழிலுக்கு, சுகாதாரத்திற்கு, இயந்திரத்திற்கும சகு எண்ணை, உள்ளிட்ட பலவித பயன்களை தருகிறது விதை எண்ணை. விதையின் எண்ணையுடன் சம அளவில் கடலை எண்ணை சேர்த்தால் மூட்டுவலிக்கு மருந்தாகிறது. நல்லஎண்ணெயுடன், சேர்த்து காதுவலிக்கு தரப்படுகிறது. முற்றிய முருங்கை விதைகளை எடுத்து காயவைத்து லேசாக நெய்யில் வதக்கி பொடியாக்கி பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால், ஆண்மை பெருகும். விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நரம்புகள் பலப்படும், உடல் வலுப்பெறும். உடல் சூடு தணியும்.
இலைக்காம்பு
சிலர் முருங்கைக்கீரை சமைக்கும் போது அதன் காம்புகளை குப்பையில் போட்டுவிடுவார்கள். ஆனால், இந்த காம்பிலும் அதிக மருத்துவக்குணம் உள்ளது. முருங்கை இலைக் காம்புகளை சிறிதாக நறுக்கி அவற்றுடன் கறிவேப்பிலை, சீரகம், சின்னவெங்காயம், பூண்டு, சோம்பு, மிளகு இவற்றை சேர்த்து சூப் செய்து அருந்தினால், நரம்புகள் வலுப்பெறும். தலையில் கோர்த்துள்ள நீர்கள் வெளியேறும். வறட்டு இருமல் நீங்கும். இருபாலாருக்கும் நல்ல உடல் வலிமையைத் தரக்கூடியது.
முருங்கைப்பட்டை
முருங்கைப்பட்டையை பொடித்து சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது வைத்து கட்டினால் வீக்கம் குறையும். முருங்கைவேர் வேரின் சாற்றுடன் பால் சேர்த்து கொதிக்க வைத்து அளவாக அருந்தினால் விக்கல், இரைப்பு, முதுகுவலி நீங்கும். வேர், பட்டை, மற்றும் மரப்பிசின் கருச்சிதைவு விளைவிக்கக் கூடியது.
முருங்கைப்பிசின்
முருங்கைப் பிசின் விந்துவைப் பெருக்கும். சிறுநீரைத் தெளிய வைக்கும். சத்து நிறைந்த முருங்கை ஆரஞ்சை போல் 7 மடங்கு வைட்டமின் ‘சி’ அடங்கியது. பாலில் இருப்பதை போல் 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது. காரட்டில் இருப்பதைப் போல் 4 மடங்கு வைட்டமின் ‘கி’ அடங்கியது. வாழைபழத்தை போல் 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது. தயிரில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் அடங்கியது.
முருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை. முருங்கைக் கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப் பதற்றத்தைத் தணிக்கவும் வல்லது. முருங்கைக் கீரையை வாரத்தில் இரண்டு நாட்கள் சமைத்து சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.
சர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை.
மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.