கறிவேப்பிலை

Spread the love

இந்திய உணவுகளில், அதுவும் முக்கியமாக தென்னிந்திய உணவுகளில் மிக முக்கியமான இடத்தைப் பிடிப்பது கறிவேப்பிலை, சாம்பார், ரசம், கூட்டு, பொறியல், டிபன் வகை என எதை எடுத்தாலும் அதில் நீங்காத இடம் பிடித்திருப்பது இந்த கறிவேப்பிலை இலைகள் தான். அவ்வளவு முக்கியமானதாக இருந்தாலும் மிகவும் குறைவான விலையிலும், காய்காரர் நாம் கேட்காமலேயே இறுதியில் இலவசமாக அள்ளி நம் பையில் தினிப்பதும் இந்த கறிவேப்பிலை தான். கறிவேப்பிலை சேர்த்தால் தான் எந்த உணவாக இருந்தாலும் கம கம என மணம் வீசும். எந்த சமையலிலும் தாளித்து இரு துண்டு கறிவேப்பிலையைச் சேர்த்தாலே வாசனை தூக்கலாக வீசிடும்.

கறிவேப்பிலை, குட்டை ரக மரத்தின் இலையாகும். இந்த மரங்கள் ஒரு மீட்டர் உயரம் முதல் 6 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியவை. இந்த இலைகள் கசப்பு ருசி கொண்டவை. ஆனால் அதன் நறுமணம் மிக மிக அருமையானது. 100 கிராம் கறிவேப்பிலையில் உள்ளவை. ஈரப்பதம்-70%, புரதம்-0.3கிராம், கொழுப்பு-0.6கிராம், தாதுப்பொருட்கள்-2.3கிராம், நார்ச்சத்து 1.2கிராம், மாவுச்சத்து-6.3கிராம், சுண்ணாம்பு-184மி.கிராம், பாஸ்பரஸ்-71மி.கி., இரும்பு-18.5மி.கி., ரிபோஃபிளேவின்-0.05மி.கி., தையாமின்-6.06மி.கி., நியாசின்-0.8மி.கி., வைட்டமின் சி-1.5மி.கி., கரோடீன்-69.8மி.கி., எரிசக்தி-44கி கலோரிகள்.

மருத்துவ குணங்கள்

10 இலையை தினசரி மென்று சாப்பிட்டு வந்தால் கண்கள் பாதுகாக்கப்படும்.

பசும்பாலுடன் அரைத்து தலையில் பூசி வர இளநரை நீங்கும்.

அதிகம் சட்னி செய்து சாப்பிட்டு வர மூளை வலுப்பெறும்.

பித்த வாந்தி, ஜீரணக்கோளாறு போன்றவற்றை சரிசெய்யக் கூடியது.

அதிக வயிற்றுப்போக்கு இருந்தால் கறிவேப்பிலை இலையை தயிரில் அரைத்து சாப்பிட உடல் கட்டுப்படும்.

அதிக உடல் பருமனைக் குறைக்க, உயர் இரத்த அழுத்தத்தை சீராக்க மற்றும் இதய நோய்கள் குணமாகவும் கறிவேப்பிலை சிறந்த மருந்தாகும்.

தினசரி காலை 10-15 இலைகளை வெறும் வயிற்றில் மென்று 3 மாதங்கள் சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கூட கட்டுக்குள் வருமாம்.

கறிவேப்பிலை சூப்

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை  –1கப்

தக்காளி        –1

பயத்தம் பருப்பு –1/2கப்

தண்ணீர்       –500மி.லி

சீரகப்பொடி    –1/2டீஸ்பூன்

வெண்ணெய்   –1டே.ஸ்பூன்

பூண்டு         –2பற்கள்

பெரிய வெங்காயம்-1

எலுமிச்சம்பழச்சாறு-2டீஸ்பூன்

உப்பு, மிளகுத்தூள்-தேவைக்கேற்ப

செய்முறை

தக்காளி, வெங்காயம், கறிவேப்பிலை முதலியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பருப்பில் தண்ணீர் ஊற்றி நன்கு குழையும்படி வேகவைக்க வேண்டும். வாணலியை அடுப்பிலேற்றி வெண்ணெய்யை விட்டு உருகியதும் வெங்காயத்தையும் பூண்டையும் போட்டு வதக்கவும். அதில் பருப்பு நீரை மட்டும் ஊற்றி, கறிவேப்பிலையையும் சேர்த்து வேகவைக்கவும், பிறகு சீரகப்பொடி, பொடியாக நறுக்கிய தக்காளிப் பழம் ஆகியவற்றைச் சேர்க்கவும். பருப்பு, உப்பு, மிளகுப்பொடி ஆகியவற்றைச் சேர்க்கவும். பத்து நிமிடம் மிதமான தீயில் கொதிக்க வைக்கவும். பிறகு எலுமிச்சம் பழச்சாற்றை சேர்த்துக் கலக்கிப் பரிமாறவும்.

கறிவேப்பிலை பொடி

தேவையான பொருட்கள்

கறிவேப்பிலை  –2கப்

மிளகு          –2டீஸ்பூன்

சீரகம்          –2டீஸ்பூன்

உப்பு           -தேவைக்கேற்ப

செய்முறை

கறிவேப்பிலையை காம்புகள் இல்லாமல் தனித்தனியாக எடுத்து நன்கு கழுவி ஒரு துணியில் போட்டு காய வைத்துக் கொள்ளவும். பின்னர் வெறும் வாணலியில் மிளகு, சீரகம், உப்பு முதலியவற்றைப் போட்டு தனித்தனியாக மணம் வரும் வரை வறுத்துக் கொள்ளவும். கடைசியாக கறிவேப்பிலையை போட்டு அடுப்பை குறைத்து வைத்து இலையில் உள்ள தண்ணீர் போகும் வரை வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். கறிவேப்பிலை கருகாமல் பச்சையாக இருக்க வேண்டும்.

கறிவேப்பிலை சாதம்

தேவையான பொருட்கள்

வேக வைத்த சாதம்  –2கப்

கறிவேப்பிலைப்பொடி –2டீஸ்பூன்

நல்லெண்ணெய்      –2டே.ஸ்பூன்

முந்திரிப்பருப்பு       –10

வேர்க்கடலை        –2டீஸ்பூன்

கடுகு                –1டீஸ்பூன்

உளுந்தம்பருப்பு      –1டீஸ்பூன்

உப்பு                -தேவைக்கேற்ப

செய்முறை

பொன்னி புழுங்கலரிசியை அரைமணி நேரம் ஊற வைத்து உதிர் உதிராக வேக வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் நல்லெண்ணெய்யை சூடாக்கி அதில் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்து, வேர்க்கடலை, முந்திரிப்பருப்பு போட்டு சிறிது சிவந்ததும், கறிவேப்பிலைப் பொடி, தேவையான அளவு உப்பு சேர்த்து உடனே இறக்கி சாதத்தில் கொட்டி கிளறி பரிமாறவும்.

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையான பொருட்கள் 

கறிவேப்பிலை –1கப்

மிளகு         –1டீஸ்பூன்

சீரகம்         –1டீஸ்பூன்

கடலைப்பருப்பு –1டீஸ்பூன்

புளி            -சிறிய நெல்லிக்காய் அளவு

மிளகாய்       –7

மல்லி         –1டீஸ்பூன்

பூண்டு பல்     –100கிராம்

நல்லெண்ணெய்-2டே.ஸ்பூன்

செய்முறை

ஒரு வாணலியில் ஒரு டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடாக்கி, அதில் மிளகு, சீரகம், மல்லி, மிளகாய், கடலைப்பருப்பு, புளி, கறிவேப்பிலை என்று ஒன்றன் பின் ஒன்றாகப் போட்டு வறுத்துக் கொள்ளவும். ஆறியதும் மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொள்ளவும். பூண்டை உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். ஒரு அடிகனமான பாத்திரத்தில் மீதமுள்ள எண்ணெய்யை ஊற்றி பூண்டைப் போட்டு வதக்கி அரைத்து வைத்துள்ள மசாலாவை ஊற்றி வதக்கி தேவையான அளவு தண்ணீர், உப்பு சேர்த்து கொதிக்க விடவும். தேவையென்றால் மேலும் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி கொதிக்க விட்டு இறக்கவும்.

உணவு நலம் ஜுன் 2011

கறிவேப்பிலை, கறிவேப்பிலை இலைகள், சமையல், 100, கிராம், கறிவேப்பிலையில், உள்ளவை, ஈரப்பதம், புரதம், கொழுப்பு, தாதுப்பொருட்கள், நார்ச்சத்து, மாவுச்சத்து, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, ரிபோஃபிளேவின், தையாமின், நியாசின், வைட்டமின், சி, கரோடீன், எரிசக்தி, மருத்துவ குணங்கள்,

கண்கள், இளநரை நீங்கும், மூளை வலுப்பெறும், பித்த வாந்தி, ஜீரணக்கோளாறு, உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம், இதய நோய்கள், நீரிழிவு நோய்,

கறிவேப்பிலை சூப், செய்முறை, கறிவேப்பிலை, தக்காளி, பயத்தம் பருப்பு, தண்ணீர், சீரகப்பொடி, வெண்ணெய், பூண்டு, பெரிய வெங்காயம், எலுமிச்சம்பழச்சாறு, உப்பு, மிளகுத்தூள், கறிவேப்பிலை பொடி, செய்முறை,

கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கறிவேப்பிலை சாதம், செய்முறை, சாதம், கறிவேப்பிலைப்பொடி, நல்லெண்ணெய், முந்திரிப்பருப்பு, வேர்க்கடலை, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலைக் குழம்பு, செய்முறை, கறிவேப்பிலை, மிளகு, சீரகம், கடலைப்பருப்பு, புளி, மிளகாய், மல்லி, பூண்டு பல், நல்லெண்ணெய்,


Spread the love