தந்தையை குருவாகப் பெற்ற ஒருவனைப் போல் பெரும்பேறு பெற்றவர் எவருமில்லை என்று நம் இதிகாசத்தில் சொல்லப்படுவதுண்டு. இதனை பொய்யென்று நிரூபிக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. ஆம். தந்தையுடன் அதிக நேரம் செலவிடும் குழந்தைகள், ஐ.க்யூ., எனப்படும் கூர்மையான அறிவை அதிகம் கொண்டவர்களாக வளர்கின்றார்கள் என்று கண்டறியப்பட்டு உள்ளது.
பெற்றோர்கள் ஒன்றாக வாழ்வது மட்டும் போதாது, அவர்கள் தனித்தனியாகவும் கூட்டாகவும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவழிக்க வேண்டியது மிகவும் அவசியம் ஆகும். தாயிடம் அன்பைப் பெற விரும்பும் குழந்தையானது, தந்தையிடம் அறிவைப் பெற விரும்புகிறது. லண்டன் நியூகாஸில் பல்கலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் இதற்கான ஆய்வை விரிவாக மேற்கொண்டனர். அதன்படி ஆண்கள் மற்றும் பெண்கள் 11 ஆயிரம் பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த ஆய்வில் பல்வேறு தகவல்கள் தெரிய வந்திருக்கின்றது. அதாவது ஆண் குழந்தையைக் காட்டிலும் பெண் குழந்தைகளிடமே தந்தையர் அதிக நெருக்கத்துடன் பழகுகிறார்கள். அதுபோலவே ஆண் பிள்ளைகள் தாயிடமே அதிக நெருக்கம் காட்டுகிறார்கள்.
பெற்றோர்கள் குழந்தை என்ன சொன்னாலும், கேட்டாலும் உடனே அடிப்பது அல்லது மறுத்து பேசுவது கூடாது. ஏன் அந்த குழந்தை இப்படி பேசுகிறது என்று ஆராய்ந்து அதற்கு ஏற்றார்போன்று பதில் சொல்ல வேண்டும்.
பள்ளியில் மற்றும் தோழமை வட்டாரங்களில் கேட்க முடியாத கேள்விகளைத்தான் தாய் மற்றும் தந்தையிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள்.
அதனால் குழந்தை கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல வேண்டியது அவசியக் கடமையாகும். சில நேரங்களில் கேட்கக் கூடாத கேள்விகளைக் கேட்கவே செய்வார்கள். அந்த நேரங்களில் பொறுமை இழந்துவிடாமல், நாசுக்காக பதில் சொல்ல வேண்டும்.
இந்த கேள்விக்கான பதிலை இப்போது உனக்குச் சொன்னால் புரியாது. அதனால் இன்னும் கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனதும் சொல்கிறேன் என்று சமாளிக்க வேண்டும்.
உங்களுக்கே தெரியாத கேள்விகளை பிள்ளைகள் கேட்கவே செய்வார்கள். முதலில் அந்த கேள்விக்கு பதில் தெரியாது என்பதை ஒப்புக்கொள்ளுங்கள். அத்தோடு விடாமல், அந்த கேள்விக்கான பதிலை வேறு எவரிடமிருந்தாவது கேட்டு வாங்கி குழந்தைக்குச் சொல்லுங்கள். தெரியாது என்பதற்காக தவறாக எதையும் சொல்லி வைக்காதீர்கள். ஏனென்றால் இந்த வயதுகளில், பெற்றோரையே பெரிய புத்திசாலிகள் என குழந்தைகள் நினைக்கின்றது. அந்த நினைப்பு தவறானது என தெரிய வந்தால் அந்த பிஞ்சு மனசு வேதனைப்படும்.
அதனால் எத்தனை வேலைப்பளு இருந்தாலும், குழந்தைகளுக்கென அரைமணி நேரமாவது ஒதுக்குங்கள். நீங்கள் பணம் சம்பாதிப்பது எல்லாமே உங்கள் பிள்ளைகளுக்காகவே இருக்கலாம். அதைப் புரிந்து கொள்ளும் வயது குழந்தைக்கு வரும் வரையில், நேரம் ஒதுக்குங்கள். உங்கள் குழந்தையின் வெற்றி உங்கள் கையில் தான்.