சுவாசத்திற்கு ஆயுர்வேத மூலிகைகள் -1

Spread the love

துளசி

வேம்பை மூலிகைகளின் அரசன் என்றால், துளசி மூலிகைகளின் அரசி, தொன்று தொட்டு மருத்துவத்தில் பயன்பட்டு வரும் துளசி, ஒரு புனிதச் செடியாக வீட்டில் வளர்த்து வணங்கப்படுகிறது. துளசி இல்லாத இந்திய வீடுகள் அபூர்வம். “துளசியின் இலைகள், பூக்கள், பழங்கள், வேர், கிளைகள் தண்டு எல்லாமே புனிதமானது. அது இருக்கும் மண் கூட புனிதமானது” என்கிறது 5000 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பத்ம புராணம்.

துளசியின் தாவிரவியல் பெயர் – Ocimam Sanctum, ஆங்கிலத்தில் – Holy Basil. திருமாலுக்கு உகந்தது துளசி. துளசி செடி இல்லாத கோயில் இல்லை. கோயில்களில் கொடுக்கப்படும் தீர்த்தத்தில், எப்போதும் துளசி இலைகள் சேர்க்கப்படும். துளசி, வீடுகளில் “துளசி மாடம்” என்ற உயரமான தொட்டி போன்ற அமைப்பில் நடப்பட்டு, கவனமாக வளர்க்கப்படுகிறது.

உலர் இருமலுக்கு

ஒரு கைப்பிடி துளசி இலைகளுடன், சிறிய அளவில் தோல் சீவிய இஞ்சித் துண்டு, சேர்த்து மிக்ஸியில், களிம்பாக அரைக்கவும். களிம்பை (மிளகு அளவில்) சிறு உருண்டைகளாக உருட்டி, காற்றுப் புகாத பாட்டில் / டப்பாவில் போட்டு வைக்கவும். தேவைப்படும் போது இந்த உருண்டைகளை (ஒன்று (அ) இரண்டு) பொடித்து பொடியாக செய்து கொள்ளவும். ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து தினமும் 3 வேளை 4 (அ) 5 நாட்களுக்கு தரவும். குழந்தைகளுக்கு இந்த மருந்து நல்லது. “ஈர” இருமலுக்கு 10 (அ) 12 துளசி இலைகளை அரைத்து ஜுஸைஎடுத்துக் கொள்ளவும். இதை தேனுடன் (1 தேக்கரண்டி) கலந்து தினமும் இரு வேளை 3 நாட்களுக்கு எடுத்துக் கொள்ளவும்.

·     10 (அ) 15 கருந்துளசி இலைகளை நசுக்கி, தேனுடன் சேர்த்து உண்ண, ஆஸ்துமா பாதிப்பை குறைக்கும்.

·     தொண்டைப் புண்ணுக்கு, துளசி கஷாயத்தை வாயிலிட்டு கொப்பளித்தால் நிவாரணம் கிடைக்கும்.

திப்பிலி

தோற்றம்

செடி வகையை சேர்ந்தது. புதராக வளரும் வெற்றிலை போல் சிறிய இலைகளுடன் இருக்கும். இதன் கிளைகள் பல கணுக்களை கொண்டு வளரும். ஒவ்வொரு கணுவிலிருந்தும் சிறு கிளைகள் தோன்றி பழங்களை தாங்கியிருக்கும். திப்பிலி செடியின் பழம் அரிசித் திப்பிலிஎனப்படும். திப்பிலி பீகாரிலும், மத்தியப்பிரதேசத்திலும், உத்தராஞ்சல் (நைனிதால்) மிகுதியாக விளைகிறது. பீகாரில் விளையும் திப்பிலி சிறந்த தரமுடையது.

பயன்கள்

1.     திப்பிலி சுவாச மண்டல கோளாறுகளுக்கு நல்ல மருந்து. பிராங்கைடீஸ், இருமல், ஜலதோஷம் இவற்றை போக்கும். பொடிக்கப்பட்ட திப்பிலி பழங்களை ஒரு டம்ளர் பால் மற்றும் 4 டம்ளர் நீருடன் சேர்த்து, ஒரு டம்ளராக சுண்டும் வரை காய்ச்சவும். பிறகு இந்த கஷாயத்தை வடிகட்டி பனங்கற்கண்டு சேர்த்து ஒரு நாளில் 3 வேளை பருகவும். கபத்துடன் கூடிய இருமல் விலகும்.

2.     திப்பிலி தூளை வெல்லத்துடன் சேர்த்து உட்கொண்டால் இருமல், இழுப்பு குறையும்.

3.     திப்பிலி பசியை தூண்டும். அஜீரணம் போன்ற வயிற்று கோளாறுகளுக்கு நல்லது. சுக்குடன் சேர்த்து செய்யப்படும் சுக்கு திப்பிலி லேஹியம்பிரசித்தி பெற்றது.

4.     பல நோய்களுக்கு பரிந்துரைக்கப்படும் திருகாட்டுமருந்தில் திப்பிலி ஒரு முக்கிய அங்கம்.

5.     திப்பிலி மூல மருந்தாக கொண்டு தயாரிக்கப்படும் சில மருந்துகள்

பிப்பல்யாத்யாவஸம்-க்ஷயம், குன்மம், இளைப்பு, பெருவயிறு இவற்றுக்கு       நல்லது.

6.     பிப்பிலி மூலாத்யரிஷ்ம்-க்ஷயம், இருமல், காய்ச்சல், மண்ணீரல் வீக்கம் இவற்றுக்கு கொடுக்கப்படும் மருந்து.

முக்கனி மூலிகை – திரிபாலா

திரிபாலா ஆயுர்வேதத்தில் அதிகமாக உபயோகப்படுத்தப்படும் அற்புத மருந்து. சம அளவில் நெல்லிக்கனி, கடுக்காய், தான்றிக்காய் இவை மூன்றும் கலந்த மூலிகை கலவை. இந்த மூலிகை கலவை வயிற்றை சுத்திகரித்து உடலிலிருந்து நச்சுப் பொருட்களை நீக்கும். தொன்மையான ஆயுர்வேத நூல்களில் திரிபாலா ஜீரண சக்தியை அதிகரித்து உடல் சக்தியை கூட்டும் அற்புத மருந்தªன்று புகழப்படுகிறது.

முதலில் திரிபால மருந்தில் இருக்கும் மூன்று மூலிகைகளைப் பற்றி பார்ப்போம்.

நெல்லி

இந்தியன் கூஸ்பெர்ரி என ஆங்கிலத்தில் அழைக்கப்படும் நெல்லி சமஸ்கிருததத்தில் தத்திஃபாலா‘ “பூமியின் எதிர் காலம்” என்றும் ஹிந்தியில் ஆம்லாசுத்தமானது என்றும் பெயர் பெற்றுள்ளது. தாவரவியலில் எம்பிளிக்கா அஃபிஸினேலிஸ்Emblica officinalis என்று வகைப்படுத்தப்பட்டு எம்பிளிமிரோ பாலன்Embilic myrobalan என்று பொதுவாக விளங்குகிறது.

அன்றாட வாழ்வில் எளிமையாக கிடைக்கக் கூடியதும் பல நற்பலன்களை மனிதனுக்கு தருகின்ற மூலிகைகளின் முதலிடத்தை பெறுவது நெல்லியாகும். சரகர் தனது ஆயுர்வேத நூலில் நெல்லியை சிறப்பாக விளக்கி நெல்லி மனிதனுக்கு அனைத்து நோய்களையும் எதிர்க்கும் திறனை தருகிறது என்றும் நெல்லி வயது முதிர்ச்சியை காலம் தாழ்த்துகிறது என்றும் பெருமைப்பட எழுதியுள்ளார்.

ஆயுர்வேதத்தில் சியவனபிராஷ்போன்ற தயாரிப்புகளில் நெல்லி முக்கிய இடத்தை வகிக்கின்றது. இந்த லேகியம் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை கூட்டுகிறது.

கடுக்காய்

·     கடுக்காய் பல மருத்துவ குணங்கள் உடையது.

·     ஆயுர்வேதத்தின் தேவ வைத்தியராக வணங்கப்படும் தன்வந்திரி பெருமான் எப்பொழுதும் கடுக்காயை கைவசம் வைத்திருப்பாராம். எல்லா நோய்களுக்கும் நிவாரணம் கொடுக்கும் அரிய குணத்தை பெற்றிருப்பதால் கடுக்காய் வடமொழியில் அரிதகிஎன்றழைக்கப்படுகிறது.

·     கடுக்காயின் ஆங்கில மருத்துவப்பெயர்: ‘Terminalia chebula’ Black Myrpbalan என்றும் அழைக்கப்படுகிறது.

கடுக்காயின் மருத்துவ பயன்கள்

·     இருமல் நீங்கும். சுவாசநோய்கள் குணமாகும். மூலநோய் இரைப்பை நோய், வயிற்றுக் கோளாறுகள், குரல் கம்மல், இருதய நோய்கள், மல பந்தம், கண்வலி, தொண்டைப்புண், போன்றவற்றுக்கு கடுக்காய் உபயோகமாகும். நரைநீங்க கடுக்காய் தைலம் பயன்படுகிறது.

·     கடுக்காயை வாயிலடக்கிக் கொண்டால் இருமல் நிற்கும். இந்த வீட்டுவைத்தியம் அநேகமாக அனைவருக்கும் தெரிந்த வீட்டு வைத்தியம்.

தான்றிக்காய்

தான்றிக்காயின் தாவரவியல் பெயர் – Terminalia Balerica / Beleric Myrobalan, சமஸ்கிருதம் – பஹீரா, இந்தி – பஹேரா, தமிழில் இதர பெயர்கள் – அக்கம், விபீதகம், தானிக்காய், தான்றிக்காய் மர வகுப்பை சேர்ந்தது. இந்தியாவின் வறண்ட பிரதேசங்களை தவிர 3000 அடி உயரத்தின் கீழே உள்ள எல்லா பிரதேசங்களிலும் விளையும்.

இதன் பொது குணங்கள்

கோழையை அகற்றும், மலமிளக்கி, டானிக்

மருத்துவ குணங்கள்

1.     உடலுக்கு அழகையும், ஒளியையும் கொடுத்து மூன்று தோஷங்களையும் தன்னிலைப்படுத்தும்.

2.     தான்றிக்காயை வறுத்து கோதுமை மாவுடன் பிசைந்து சிறிய உருண்டைகளாக்கி, வாயில் அடக்கிக் கொண்டால் தொண்டைப்புண், இருமல், கோழை இவை விலகும். தனித்தனியாகவே இந்த மூன்று மூலிகைகளும் சிறந்தவை. ஒவ்வொன்றும் மூன்று தோஷங்களை சீரான நிலையில் வைக்கும் திறனுடையது. வாததோஷத்திற்கு கடுக்காய் உகந்தது. மிதமான மலமிளக்கி. நரம்புகளை வலுப்படுத்தும்.

3.     நெல்லிக்கனி பித்ததோஷ கோளாறுகளை கண்டிக்கும். இதுவும் மிதமான மலமிளக்கி. உடலுக்கு குளிர்ச்சி உண்டாக்கும். கபதோஷ கோளாறுகளுக்கு (ஆஸ்துமா, இருமல் ஒவ்வாமை) தான்றிக்காய் நல்ல மருந்தாகும். எனவே இந்த மூன்று மூலிகைகளும் கலந்த திரிபாலா மூன்று தோஷங்களையும் சமநிலையில் வைக்கும். திரிபாலா கபத்தை கரைத்து இருமலை குணப்படுத்துகின்றது.

எச்சரிக்கை

திரிபாலா சூரணத்தை கர்ப்பிணிகள் உபயோகிப்பதை தவிர்க்கவும். அதே போல் பேதியாகும் போது திரிபாலா கொடுக்கப்பட கூடாது. இது உடல் எடையை குறைக்க உதவுவதால், உடல் எடை குறைவாக உள்ளவர்கள் திரிபாலாவை குறைவாக பயன்படுத்த வேண்டும்.  

தூது வளை

தூதுவளை கொடி இனத்தைச் சேர்ந்தது. தனி பந்தலிலும் படரும். மரத்தின் மேலும், வேலியின் மீதும் படரும். இதன் இலை கோவை இலையைப் போல, ஆனால் கனமில்லாமலிருக்கும். இலையின் மேல் பல முட்கள் முளைத்திருக்கும். இதன் பூ கத்தரிப் பூவைப் போல ஊதா நிறத்துடன் கூடியதாக இருக்கும். காய் குண்டு குண்டாக சுண்டைக்காய் போலிருக்கும். இது ஆங்கிலத்தில் (Solanum Trilobatum) என அழைக்கப்படுகின்றது.

இது கத்திரி குடும்பத்தைச் சேர்ந்தது. தூதுவளை பொதுவாக லேகிய வடிவில் தமிழ் மருந்துக் கடைகளில் கிடைக்கக் கூடியது. ஆனால் அது உண்மையான தூதுவளையால் செய்யப்பட்டது தானா என்ற சந்தேகம் எழுபவர்கள் அதனைத் தவிர்த்து தங்கள் வீடுகளிலேயே வாரம் ஒரு முறை சமையலில் சேர்த்து வர சிறந்த நற்பலன்களைத் தரும்.

தூதுவளை அனேகமாக அனைத்து இருமல், சளி மருந்துகளிலும் சேர்க்கப்படும். ஒரு மூலிகையாகும், தூதுவளையின் முக்கிய குணம் உடல் உஷ்ணத்தை அதிகரிக்கக் கூடியது. தூதுவளையை உட்கொண்டால் உடல் உஷ்ணம் அதிகரிக்கும் அதனால் உடலின் உள் உள்ள சளி வெளியேறும். இருமல் நீங்கும். கப நாடி, கப தோஷம் உடையவர்கள் தூதுவளையை அடிக்கடி சேர்த்துக் கொள்ளலாம். இரைப்பு, ஆஸ்துமா, ஒவ்வாமை, அலர்ஜி, சளி, இருமல், தும்மல், மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், சைனஸ், ஒற்றைத் தலைவலி போன்ற பிரச்சனை உடையவர்களுக்கு தூதுவளை ஓர் அற்புதமான மூலிகையாகும். இதனை எளிதாக வீட்டில் சமைத்து உண்பதற்கு இதோ சில யோசனைகள்.

ஆடாதொடை

கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாத பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால ஆயுர்வேத நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான ஆயுர்வேத மூலிகையென குறிப்பிடப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் – Adhatoda Vasica

இதர மொழிகளில் – சமஸ்கிருதம் – வசாகா, வசிகா சிம்ஹாசயா, ஹிந்தி – அருஸா, ஆங்கிலம் – labar NMaut.

தாவர விவரங்கள்

நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் “ஆடாதொடை” என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப்படுகின்றன.

ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி.

மருத்துவ பயன்கள்

·     இதயம், தொண்டை இவைகளுக்கு ஏற்படும் பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். அமுகக் செய்யும் கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி.

·     சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடையிலிருந்து கிடைக்கும் வாசிசைன்பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால் பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்களால், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தனர்.

·     மெதர்ஜின் (Methergin) போன்ற மருந்துகளுக்கு இணையானது. மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் புகைப்பதையும் கைவிடலாம்!

·     ஆடாதொடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் சுவாச மண்டல அவயங்கள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.

·     ஷயரோகத்திற்கும் ஆடாதொடை மருந்தாக உதவும். ஆனால் அதன் ஆற்றல் “ஸ்டெப்டோமைசின்” (Streptomycin) மருந்தை விட பாதியளவு குறைவு.

·     பல ஆயுர்வேத மருந்துகளில் ஆடாதொடை சேர்க்கப்படுகிறது. அவை வாசாரிஷ்டா, வாசகண்டாரி லேஹியம், புனர்வை வசவம், அசோகாரிஷ்டம், குமரஸ்ஸவ, திரிபாலா க்ருதம், போன்றவை.

·     ஆடாதொடை இலைசாறு மூக்கிலிருந்து வரும் ரத்த போக்கை நிறுத்தும். 5 மி.லி. அளவில் சாறு ஒரு நாளில் 2 வேளை குடிக்க வேண்டும்.

எச்சரிக்கை

கர்ப்பிணிகள் ஆடாதொடையை உபயோகிக்க கூடாது.

அரத்தை

பழங்காலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள் – “அரத்தை அறுக்காத கபத்தை யார் அறுப்பார்”? எவ்வளவு நாட்பட்ட கபம், இருமலானாலும் அரத்தை மூலிகையில் ஒன்றான சித்தரத்தை உடனே செயல்பட்டு கபத்தை வெளியேற்றும்.

சிற்றரத்தையின் தாவர இயல் பெயர் – Alpinia Galanga அரத்தையில் இரு பிரிவுகள் உள்ளன. அவை

1.     சிற்றரத்தை

2.     பேரத்தை. இவை இந்தியாவில் பயிராகும். இதன் வேர் மருத்துவ குணம் உடையது. மஞ்சளைப் போல், இஞ்சியைபோல், சித்தரத்தையும் கிழங்கு வகையை சார்ந்தது.

பொது குணங்கள் – கோழை, கபத்தை அகற்றும். உடல் வெப்பத்தை அகற்றும். பசியை தூண்டும்.

மணம் தருவதும், செரிமான ஊக்கியாகவும் செயல்படுவதுமான சித்திரத்தை பன்னெடுங்காலமாகத் தென்னாட்டில் பயன்படுத்தப்பட்டு வருகின்ற ஒரு மூலிகையாகும். சித்த ஆயுர்வேத வைத்தியர்கள் இதை கபம், வாதம், வீக்கம், இழுப்பு, இருமல், காய்ச்சல் போன்றவைகளுக்குப் பயன்படுத்துவார்கள் என்றாலும் நெஞ்சிலுள்ள கபத்தை வெளியேற்றுவதில் திறன் மிக்கது.

சித்தரத்தை Bronchioles எனப்படும். இது நுரையீரல் நுண்குழாய்களை விரிவடையச் செய்து மூச்சு எளிதாக வரச் செய்வதுடன் இக்குழாய்களிலும், மூச்சுக்குழல் மற்றும் தொண்டையிலும் உள்ள சளியை வெளியேற்றுகிறது. பைலோ கார்பின் என்னும் மருந்தை ஊசி மூலம் ஏற்றி ஆஸ்துமா போன்றதொரு நிலையை ஏற்படுத்திய சில விலங்குகளுக்குச் சித்தரத்தை டிங்க்சர் (Tincture of A. Galanga) சிறு அளவில் கொடுக்கப்பட்டதும் மூச்சிழுப்பு (ஆஸ்துமா) சீரடைந்தது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் தென்னாடு எங்கும் எல்லா வீட்டு மருந்துப் பெட்டிகளிலும் சித்தரத்தை இடம் பெற்றிருந்தது. கபம் சளி போன்றவை மட்டுமின்றி எல்லாவிதமான மூச்சுக்குழல் தொடர்புடைய நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாகும். கக்குவான் இருமல் கண்ட குழந்தைகளுக்கு சித்தரத்தையை அரைத்து தேனில் குழைத்துக் கொடுக்க இருமலின் தாக்கமும் இழுப்பும் குறைந்தது.

சித்தரத்தை ஒரு சிறந்த மணமூட்டியாக இருப்பதால் இதை வாயிலிட்டுச் சுவைக்க வாய் நாற்றம் மறையும். (Breath refresher). இதன் நறுமணம் காரணமாக இதைப் பலவகை ஆயுர்வேத மருந்துகளில் சேர்ப்பதுண்டு. ஒரு துண்டு சித்தரத்தையை வாயிலிட்டு மென்றால், தொண்டையில் கட்டும் கோழை, வாந்தி, இருமல் தணியும்.

பேரரத்தை இது உடல் வலி, அழலை, நஞ்சுகள் ஆகியவற்றை போக்கும்.


Spread the love
error: Content is protected !!