மருத்துவ குணமிக்க அம்மான்பச்சரிசி

Spread the love

ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடிய ஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது. இவற்றின் இலை, தண்டு, பால், பூ, ஆகியவை பயன்தரும் பாகங்கள் ஆகும்.

அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவற்றை போக்கும் மருத்துவ குணமுண்டு.

இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் அளவு நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேளை வீதம் மூன்றுநாட்கள் கொடுக்க மலபந்தம், நீர்கடுப்பு, தேக நமச்சல் ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்கு அடிக்க குணமாகும்.

சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம் ஆகியவை போக்கும் தன்மை உண்டு. சுக்கில தாது விருத்தியாகும். இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு சிறிதளவு எடுத்து மோரில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு மலச்சிக்கல் நீங்குவதோடு, வயிறு உபத்திரவமும் போகும். இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்பத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.

இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும். தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத் தாது, உடல் பலப்படும்.

கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேளையும் எருமைத் தயிரில் உண்ண உடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்பு தீரும். பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.

பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமைச்சல் ஆகியவை தீரும்.


Spread the love