ஆடாதொடை பயன்கள்

Spread the love

கடந்த 2000 ஆண்டுகளுக்கும் மேலாக கபத்தால் உண்டாகும் கோளாறுகளுக்கு மருந்தாக பயன்பட்டு வரும் மூலிகை ஆடாதொடை ஆகும். பழங்கால நூல்களில், இந்த தாவரம் ஒரு முக்கியமான மூலிகையென குறிப்பிடப்படுகிறது.

இதன் தாவரவியல் பெயர் – Adhatoda Vasica

இதர மொழிகளில் – சமஸ்கிருதம் – வசாகா, வசிகா சிம்ஹாசயா, ஹிந்தி – அருஸா, ஆங்கிலம் – Malabar Nut.

தாவர விவரங்கள்

நம்நாட்டு தாவரமான இந்த மூலிகை, நம் தேசம் எங்கும் வளருகிறது; குறிப்பாக இமயமலை சாரலில், 1400 மீட்டர் உயர மலைச் சூழல் வரை வளருகிறது. இந்திய இனங்கள் “ஆடாதொடை” என்ற தமிழ்ப் பெயராலேயே குறிப்பிடப் படுகின்றன.

ஆடாதொடை ஒரு அடர்த்தியான, ஒன்றிலிருந்து 2 மீட்டர் உயரம் வரை வளரும் செடி. கோள வடிவமுள்ள இலைகள் 10 – 16 செ.மீ. நீளமுடையவை. இலைகளில் மெல்லிய நூல் போன்ற முடிகள் இலை அமைப்பு சூலம் போல் அகன்று, நுனியில் குறுகி இருக்கும். இலைகள் இளம் பச்சை நிறங்களில் இருக்கும். உலர்ந்த இலைகள் பழுப்பு நிறமாகும். உலர்ந்த இலைகள் தேநீர் போல் மணமிருந்தாலும், கசப்பு சுவை உடையவை.

பூக்கள் அடர்த்தியாக ஒரே தண்டில் கொத்து, கொத்தாக இருக்கும். மஞ்சரி தண்டு (Peduncle) 3 – 9 செ.மீ. நீட்டமிருக்கும். இதழ்கள் பெரியதாக, வெண்மையாக, நுனியில் ஊதா வண்ணமாக இருக்கும். தூரத்திலிருந்து பார்த்தால் பூக்கள் சிங்கத்தின் திறந்த வாய் போல் தோன்றும். எனவே ‘சிம்ஹாசயா’ என்ற சமஸ்கிருத பெயரும் இந்த மூலிகைக்கு உண்டு. தண்டு உருண்டு இருக்கும். முடிச்சுகள் (கணுக்கள்) உண்டு.

ஆடாதொடையில் “வாசிசைன்” (Vasicine) என்ற கசப்பான படிக “ஆல்கலாய்ட்” (Alkaloid) – காரத்தன்மை) உள்ளது. மற்றும் வாசமற்ற, எளிதில் ஆவியாகும், எண்ணையும் உள்ளது. வாசிசைனில், பெகானைன் (Peganine) உள்ளது. வேர்களில் வாசிசினோலின் (Vasicicinolene) வாசிகோல் (Vasicol) மற்றும் பெசானின் உள்ளன. ஒட்டுமொத்தமாக ஆடாதொடையில், வாசமுள்ள எண்ணை, பிசின்கள், கொழுப்புகள், கசப்பு வாசிசைன், சர்க்கரை, உப்பு இவைகள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

இதயம், தொண்டை பாதிப்புகளுக்கு ஆடாதொடை மருந்தாகிறது. கபத்தை கட்டுப்படுத்தும். அழுகச் செய்யும் கிருமிகளை கட்டுப்படுத்தும் கிருமி நாசினி.

கோனேரியா போன்ற பாலியல் நோய்களுக்கு ஆடாதொடை வேர்கள் மருந்தாக பயன்படு கின்றன. பூக்கள் மஞ்சள் காமாலை நோய்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

தொண்டை கரகரப்பு, தொண்டை கமரல் போன்றவற்றிற்கும் தொடர் இருமலுக்கும் ஆடாதொடை உகந்தது. ஆடாதொடையை தொடர்ந்து உபயோகித்து வர குரல் இனிமையைப் பெறலாம்.

சமீபகால ஆராய்ச்சிகளில் ஆடாதொடை யிலிருந்து கிடைக்கும் ‘வாசிசைன்’ பற்றிய பல பயன்கள் தெரிய வந்துள்ளன. இந்த காரத்தன்மையுடைய வாசிசைன் மூச்சுக்குழாய் அடைப்புகளை போக்குகிறது. கர்பப்பையை ஊக்குவிக்கிறது. இதனால் பழங்காலத்தில் பிரசவம் பார்க்கும் செவிலியர்கள், சுலபமாக பிரசவம் ஏற்பட இந்த மூலிகையை பயன்படுத்தி வந்தனர். மெதர்ஜின் (Methergin) போன்ற மருந்துகளுக்கு இணையானது. மூச்சுக்குழல் சம்பந்தமான வியாதிகளுக்கு ஆடாதொடை இலைகள் பயன்படுகின்றன. சிகரெட்டைப் போல், இலைகளை சுருட்டி, பற்றவைத்து புகைபிடித்தால் ஆஸ்துமாவுக்கு நல்லது. அசல் சிகரெட் பிடிப்பதையும் கைவிடலாம்!

ஆடாதொடை இருமல், அலர்ஜி, சளி, கோழை இவற்றை குறைக்கும் மருந்து. திராட்சை, ஆடாதொடை இலைகள், கடுக்காய் இந்த மூன்றையும் கலந்து செய்த கஷாயத்துடன் இஞ்சி, கருமிளகு மற்றும் தேன் சேர்த்து குடித்தால் சுவாச மண்டல அவயங்கள் நலம் பெறும். இருமல் போகும். தொண்டைக்கு இதமளிக்கும். கெட்டியான சளி, கோழை, இவற்றை அகற்றும்.

இந்திய மருத்துவ பெயர்களும் செய்யும் விதமும் அடங்கிய பட்டியலில் ஆடாதொடையின் பச்சை மற்றும் காய்ந்த இலைகள் அதிக உதிரப்போக்கை கட்டுப்படுத்தும் என்று குறிப்பிடப்படுகின்றன. ஆயுர்வேதத்தில் ‘ரக்த பித்தம்’ எனப்படும் உதிரப்போக்கு கோளாறுகளுக்கு ஆடாதொடை தனியாகவும், பிற மருந்துகளுடன் சேர்ந்தும், பயன்தருகிறது. இதன் பச்சிலை சாறு, தேனுடன் சேர்த்து கொடுக்க உதிரப்போக்கு தடைபடும். சரகசம்ஹிதை ரத்தப்போக்குக்கு ஆடாதொடை யை சிபாரிசு செய்கிறது.

உலர்ந்த இலைகளிலிருந்து கிடைக்கும் சாறு, வலியை குறைக்கும் மருந்தாக பயன்படு கிறது.பைலோகார்பின் என்ற கண்களுக்கு ஏற்ற சொட்டு மருந்தின் பக்க விளைவுகளில் ஒன்று அதிக உமிழ் நீர் சுரப்பது மற்றும் ஜீரண கோளாறுகள் ஆகியவற்றை குறைக்கிறது.

வீக்கங்களுக்காக ஆடாதொடை இலைகளி லிருந்து எடுக்கப்பட்ட கலவை சீக்கிரமாக காயங்களை ஆற்றும். ருமாடிஸம் உண்டாக்கும் வலிகளை குறைக்கும்.

கல்லீரல் பாதிப்புகளை ஆடாதொடை தடுக்கிறது.

“பயோரியா” விற்கு ஆடாதொடை மருந்தாகும்.

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் அதிக உதிரப்போக்கை ஆடாதொடை கட்டுப்படுத்தும்.

ஷயரோகத்திற்கும் ஆடாதொடை மருந்தாக உதவும். ஆனால் அதன் ஆற்றல் “ஸ்டெப்டோ மைசின்”மருந்தை விட பாதியளவு குறைவு.

பல ஆயுர்வேத மருந்துகளில் ஆடாதொடை சேர்க்கப்படுகிறது. ஆடாதொடை இலைசாறு மூக்கிலிருந்து வரும் ரத்த போக்கை நிறுத்தும். ஒரு நாளில் 2 வேளை 5 மி.லி. அளவு சாறு குடிக்கலாம் .


Spread the love