பஞ்ச பூதங்கள்

Spread the love

ஆயுர்வேதம் வாழ்க்கையின் விஞ்ஞானம். ‘ஆயுர்’ என்றால் வாழ்க்கை; வேதம் என்றால் அறிவு, ஞானம். ‘சாங்கிய’ வேதாந்தத்தை தழுவியவை ஆயுர்வேத கோட்பாடுகள். வியக்தி (வெளிக்காட்டு) வெளிப்பாடாத ‘அவியக்தி’யிலிருந்து உருவானது. மனிதனும் பிரபஞ்சமும், பிறப்பு, வளர்ப்பு, இறப்பு என்ற கால சக்கரத்திற்கு உட்பட்டவை. ஆரோக்கியம் என்பது உடல், புலனேந்திரியங்கள், மனம், ஆத்மா ஆகியவை ஒரே ஒழுங்கில் சீராக அமைவது. உள்ளும், புறமும், உடலும் வெளி எண்ணங்களும் ஒன்றுபட்டு, ஒன்றை ஒன்று சீராக சார்ந்திருப்பது ஆரோக்கியம்.

ஆயுர்வேதம் இயற்கையின் நடப்புகளான சூரிய உதயம், சூரியன் மறைதல், பருவ காலங்கள், சீதோஷ்ண நிலை, பிறப்பு, இறப்பு ஆகியவற்றோடு இணைந்ததாக மருந்துகள், உணவு மாற்றங்கள், வழிமுறைகள் இவற்றை எல்லாமே சிகிச்சை முறையில் கையாளுகிறது.

நோயாளியின் குறிப்பிட்ட வியாதிக்கு குறிப்பிட்ட மூலிகை கலவை மருந்துகள் மற்றும் பஞ்சகர்மா சிகிச்சைகள் மட்டுமில்லாது, நோயாளியின் நோய் தடுப்பு சக்தி மற்றும் பொதுவான ஆரோக்கியம் மேம்பட சிகிச்சைகள் தரப்படும்.

ஆயுர்வேத தத்துவங்கள் & ஆயுர்வேதம் சார்ந்திருக்கும் அடிப்படை வேதாந்தம் & எல்லா உயிர்களும், பொருட்களும் “பிரக்ருதி” (உடல் அமைப்பு) யிலிருந்து, நுட்பமான “புருஷ” (ஆத்மா) கலப்பினால் உருவானவை. அதாவது உடலும், உள் உறையும் ஆத்மாவும் நுட்பமாக இணைந்தவை.

மனிதனும் பிரபஞ்சமும் ஒரே மாதிரியான பஞ்ச மூலங்களால் உருவானவை. பூமி அல்லது திடப்பொருள், நீர் அல்லது திரவப்பொருள், நெருப்பு (உடல், அக்னி, ஜாடராக்கினி), வாயு (காற்று) மற்றும் ஆகாயம் (உடல் ரீதியாக சொன்னால் உடலின் துவாரங்கள், வெற்றிடங்கள்).

ஆயுர்வேதம் மட்டுமின்றி, இந்திய வேதாந்தமே, உலகம் ஐந்து மூலப் பொருட்களால் ஆனது என்ற கருத்தை கொண்டது. அவை பஞ்ச பூதங்கள் (அ) பஞ்சமகா பூதங்கள் எனப்பட்டன. இவை பூமி (ப்ருத்வி), நீர் (அப்பு), அக்னி (தேஜா), காற்று (வாயு) மற்றும் ஆகாயம் (ஈதர்). பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு பொருளும் இந்த பஞ்ச பூதங்களிலிருந்து உருவானவை. பிரபஞ்சத்திற்கும், மனிதருக்கும் உள்ள ஒற்றுமை, அணுக்களின் அமைப்பில் தெரியும். சூரியமண்டல கிரகங்கள் போல, அணுவில் ஒரு நீயுகிலியசை (கரு &- Nucleus), சுற்றி வரும் கிரகங்கள் போல, ப்ரோட்டான், எலக்ட்ரான் போன்றவை சுற்றி வலம் வந்து கொண்டேயிருக்கின்றன.

“அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது” என்கிறார் திருமூலர். இந்த பஞ்ச பூதங்கள் உடலில் 3 தோஷங்களாகவும், 7 தாதுக்களாகவும், 3 மலங்களாகவும் வெளிப்படுகின்றன.

ஆயுர்வேத குரு, சரகர் இந்த தத்துவத்தை “ஏட்டுச் சுரைக்காய்” அல்ல. நிதர்சனமானவை என்கிறார். உடல் முழுவதும் வியாபித்திருந்தாலும், தோஷங்களுக்கென்று தனி உறைவிடம் உடலில் உண்டு. ஒவ்வொரு தோஷத்திற்கும் தனித்தனி குணங்கள் உண்டு. தோஷங்கள் தனியாகவோ, மூன்றும் சேர்ந்தோ, 62 வழிகளில் வியாதிகளை உண்டாக்கும் குணம் படைத்தவை.

கைராசியான மருத்துவர்

“திடமான, குழப்பமடையாத மனநிலை, புரிந்துக் கொள்ளும் திறமை போன்றவை உள்ள மருத்துவர், அறிகுறிகளை கவனித்து, சரியான வியாதிகளை கண்டறிய வேண்டும்”. & சரக சம்ஹிதை ஆயுர்வேதம், ஆங்கில வைத்தியம், யுனானி, ஹோமியோபதி போன்ற மருத்துவ முறைகள் எதுவானாலும் சரி, நல்ல மருத்துவரை இனங்காட்டும் அறிகுறி, அவரது நோய் கண்டறியும் திறமை, இதைத் தான் நாம் டாக்டரின் ‘கை ராசி’ என்கிறோம். ஒரு மருத்துவரின் நோயறியும் திறமை, நோய் உண்டான காரணங்கள், சரியான சிகிச்சை முறைகள், நோயாளியின் உடலுக்கேற்ற மருந்துகள் இவைகளை உணர்ந்து செயல்படும் ஆற்றல் படைத்த மருத்துவர்கள் தான் சிறந்த மருத்துவர் ஆவார்.

தங்கள் நலன் கருதி

ஆயுர்வேதம் Dr. S. செந்தில்குமார்


Spread the love
error: Content is protected !!